Saturday, 4 January 2025

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஸர்க்கம் –10

(தசரத மன்னர் கைகேயியின் அரண்மனையில் பிரவேசிக்கிறார். அவள் கோபாக்கிருஹத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்று அவளைப் பலவாறு சமாதானப் படுத்த முயல்கிறார்.)

 

विदर्शिता यदा देवी कुब्जया पापया भृशम्।

तदा शेते स्म सा भूमौ दिग्धविद्धेव किन्नरी।।2.10.1।।

பாவ சிந்தனையுள்ள மந்தரையால், தவறாக வழி நடத்தப்பட்ட தேவி கைகேயி விஷ அம்பினால் தாக்கப்பட்ட கின்னரியைப் போல வெற்று நிலத்தில் கிடந்தாள்.

 

निश्चित्य मनसा कृत्यं सा सम्यगिति भामिनी।
मन्थरायै शनैस्सर्वमाचचक्षे विचक्षणा।।2.10.2।।

புத்திசாலியும், அழகியுமான கைகேயி, சரியான உபாயத்தைத் தீர்மானித்து, அதை, மெதுவாக, மந்தரையிடம் வெளிப் படுத்தினாள்.

 

सा दीना निश्चयं कृत्वा मन्थरावाक्यमोहिता।
नागकन्येव निश्वस्य दीर्घमुष्णं च भामिनी।।2.10.3।।

मुहूर्तं चिन्तयामास मार्गमात्मसुखावहम्।

பரிதாபத்துக்குரிய அந்த அழகி கைகேயி, மந்தரையின் வார்த்தைகளில் மயங்கி, ஒரு பெண் நாகம் போலப் பெருமூச்சு விட்டுக்கொண்டு, தனக்கு மகிழ்ச்சியைத் தரும் வழியைப் பற்றிச் சிறிது நேரம் யோசித்தாள்.

सा सुहृच्चार्थकामा च तं निशम्य सुनिश्चयम्।।2.10.4।।

बभूव परमप्रीता सिध्दिं प्राप्येव मन्थरा।

தனது தீர்மானத்தை நிச்சயம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்த மந்தரை, கைகேயி திடமாக முடிவு செய்திருப்பதை அறிந்து, தனது நோக்கம் நிறைவேறி விட்டதாக மகிழ்ந்தாள்.

 

अथ सा रुषिता देवी सम्यक्कृत्वा विनिश्चयम्।।2.10.5।।

संविवेशाबला भूमौ निवेश्य भृकुटीं मुखे।

ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்த கைகேயி, முகத்தில் சிடு சிடுப்பை வரவழைத்துக் கொண்டு, தரையில் படுத்திருந்தாள்.

 

ततश्चित्राणि माल्यानि दिव्यान्याभरणानि च।।2.10.6।।
अपविद्धानि कैकेय्या तानि भूमिं प्रपेदिरे।

பின்னர், கைகேயி,தான் அணிந்திருந்த பல வண்ண மாலைகளையும், விலை உயர்ந்த ஆபரணங்களையும், தரையில் எறிந்தாள்.

 

तया तान्यपविद्धानि माल्यान्याभरणानि च।।2.10.7।।

अशोभयन्त वसुधां नक्षत्राणि यथा नभः।

அவள் தூக்கி எறிந்த மாலைகளாலும், ஆபரணங்களாலும், அந்தத் தரை, நக்ஷத்திரங்களுடன் ஒளிரும் ஆகாயம் போலக் காணப்பட்டது.

 

क्रोधागारे निपतिता सा बभौ मलिनाम्बरा।।2.10.8।।

एकवेणीं दृढं बद्वा गतसत्त्वेव किन्नरी।

தலைமுடியைப் பின்னாமல், இறுக்கமாக முடிந்து கொண்டு, அழுக்கு ஆடைகள் அணிந்து, அந்தக் கோபாக்கிரகத்தில், உயிரற்ற கின்னரியைப் போல் கிடந்தாள்.

 

आज्ञाप्य च महाराजो राघवस्याभिषेचनम्।।2.10.9।।

उपस्थानमनुज्ञाप्य प्रविवेश निवेशनम्।

தசரத மன்னர், ராமனுடைய பட்டாபிஷேகத்துக்கான ஆணைகளை அளித்து விட்டு, தன்  நெருங்கின நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, அரண்மனைக்குள் பிரவேசித்தார்.

 

अद्य रामाभिषेको वै प्रसिद्ध इति जज्ञिवान्।।2.10.10।।

प्रियार्हां प्रियमाख्यातुं विवेशान्तःपुरं वशी।

ராம பட்டாபிஷேகச் செய்தி எல்லாருக்கும் தெரிந்து விட்டது என்று அறிந்திருந்தாலும், இந்த இனிமையான செய்தியைத் தனது அன்புக்குரியவளான கைகேயிக்குத் தானே அறிவிக்க வேண்டி, மனக்கட்டுப்பாடுள்ள தசரதர், அந்தப்புரத்துக்குள் பிரவேசித்தார்.

 

स कैकेय्या गृहं श्रेष्ठं प्रविवेश महायशाः।।2.10.11।।

पाण्डुराभ्रमिवाकाशं राहुयुक्तं निशाकरः।

புகழ் பெற்ற தசரத மன்னர் கைகேயியின் மிகச் சிறந்த அரண்மனைக்குள், வெளிர் நிற மேகங்கள் சூழ இருந்த ஆகாயத்தில், ராகுவின் வாய்க்குள் பிரவேசிக்கும் சந்திரனைப் போல் பிரவேசித்தார்.

 

शुकबर्हिणसङ्घुष्टं क्रौञ्चहंसरुतायुतम्।।2.10.12।।

वादित्ररवसङ्घुष्टं कुब्जा वामनिकायुतम्।
लतागृहैश्चित्रगृहैश्चम्पकाशोकशोभितैः।।2.10.13।।

दान्तराजतसौवर्णवेदिकाभि स्समायुतम्।
नित्यपुष्पफलैर्वृक्षैर्वापीभिश्चोपशोभितम्।।2.10.14।।

दान्तरजतसौवर्णैस्संवृतं परमासनैः।
विविधैरन्नपानैश्च भक्ष्यैश्च विविधैरपि।।2.10.15।।

उपपन्नं महार्हैश्च भूषितैस्त्रिदिवोपमम्।
तत्प्रविश्य महाराजस्स्वमन्तः पुरमृद्धिमत्।।2.10.16।।

न ददर्श प्रियां राजा कैकेयीं शयनोत्तमे।

அந்த அரண்மனை, கிளிகளும், மயில்களும் நிறைந்து, க்ரௌஞ்சப் பறவைகளும், அன்னப்பறவைகளும், இசைக் கருவிகளும் ஒலியெழுப்பக், கூனர்களும், குள்ளர்களும், இங்குமங்கும் நடந்து கொண்டிருக்க, சண்பக மரங்களும், அசோக மரங்களும் நிறைந்திருக்க, கொடிகளால் அமைந்த இடங்களும், சித்திரங்கள் உள்ள அறைகளும், தந்தத்தாலும், வெள்ளியாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்ட அமரும் இடங்களும் அமையப்பெற்று விளங்கியது. அங்கே வருடம் முழுவதும் பூப்பூக்கும் மற்றும், பழம் கொடுக்கும் மரங்கள் சூழ்ந்த பெரிய குளங்கள் இருந்தன. பலவிதமான உணவு வகைகளும், பானங்களும், பக்ஷணங்களும், தயாராக வைக்கப்பட்டிருந்தன. மிகச் சிறந்த அலங்காரத்துடன், கைகேயியின் அரண்மனையானது ஸ்வர்க்கலோகம் போல் விளங்கியது. ஆனால், அந்த அரண்மனையில், அவளுடைய மிகச் சிறந்த மஞ்சத்தில், அரசருக்கு மிகவும் பிரியமான கைகேயி மட்டும் காணப்படவில்லை.

 

कामबलसंयुक्तो रत्यर्थं मनुजाधिपः।।2.10.17।।

अपश्यन्दयितां भार्यां पप्रच्छ विषसाद च।

மிகுந்த இச்சையுடன், தன் அன்புக்குரிய மனைவியான  கைகேயியைத் தேடி வந்த அரசர் அவளைக் காணாமல் ஏமாற்றத்துக்கு ஆளானார். பின்னர், அவள் எங்கே என்று விசாரித்தார்.

 

न हि तस्य पुरा देवी तां वेलामत्यवर्तत।।2.10.18।।

न च राजा गृहं शून्यं प्रविवेश कदाचन।

இதற்கு முன்னர், அரசர் வரும் நேரத்தில் கைகேயி அங்கு இல்லாமல் இருந்ததே இல்லை. அரசர் எப்போதும் காலியாக இருக்கும் அரண்மனைக்குள் பிரவேசித்ததில்லை.

 

ततो गृहगतो राजा कैकेयीं पर्यपृच्छत।।2.10.19।।

यथा पूर्वमविज्ञाय स्वार्थलिप्सुमपण्डिताम्।

கைகேயியுடைய அரண்மனைக்குள் பிரவேசித்த அரசர், சுய நலமும் முட்டாள்தனமும் நிறைந்த அவளுடைய நோக்கத்தை அறியாமல் அவள் எங்கிருக்கிறாள் என்று விசாரித்தார்.

 

प्रतीहारी त्वथोवाच सन्त्रस्ता सुकृताञ्जलिः।।2.10.20।।

देव देवी भृशं कृद्धा क्रोधागारमभिदृता।

வாயில் காக்கும் பெண், பயத்துடன், கைகளைக் கூப்பிக்கொண்டு, “அரசே! அரசியார் மிகுந்த கோபத்துடன் கோபாக்கிருஹத்துக்குள் போனார்” என்றாள்.

 

प्रतीहार्या वचश्शृत्वा राजा परमदुर्मनाः।।2.10.21।।

विषसाद पुनर्भूयो लुलितव्याकुलेन्द्रियः।।

வாயிற்காப்போளின் சொற்களைக் கேட்ட அரசர் மிகுந்த துயரம் அடைந்தார்.

 

तत्र तां पतितां भूमौ शयानामतथोचिताम्।।2.10.22।।

प्रतप्त इव दुःखेन सोऽपश्यज्जगतीपतिः।

தசரத மன்னர் கைகேயி கோபாக்கிருஹத்தில் தரையில், அவ்வாறு படுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, பெருந்துன்பத்துக்கு ஆளானார்.

 

स वृद्धस्तरुणीं भार्यां प्राणेभ्योपि गरीयसीम्।।2.10.23।।

अपापः पापसङ्कल्पां ददर्श धरणीतले।
लतामिव विनिष्कृत्तां पतितां देवतामिव।।2.10.24।।

किन्नरीमिव निर्धूतां च्युतामप्सरसं यथा।
मायामिव परिभ्रष्टां हरिणीमिव संयताम्।।2.10.25।।

கபடமற்ற, அந்த வயதான அரசர், தன் உயிரைக் காட்டிலும் மேலான, வஞ்சகம்  நிறைந்த, தனது இளம் மனைவியை அங்கே கண்டார். பிடுங்கி எறியப்பட்ட கொடியைப் போலவும், கீழே விழுந்து விட்ட தேவதையைப்போலவும், பூமியில் தூக்கி வீசப்பட்ட கின்னரியைப் போலவும், ஸ்வர்க்கத்தில் இருந்து நழுவி விழுந்து விட்ட அப்சரஸைப் போலவும், கிழிந்து விட்ட மாயத்தோற்றம் போலவும்,  கட்டிப்போடப்பட்ட பெண்மான் போலவும் அவள் காணப்பட்டாள்.

 

करेणुमिव दिग्धेन विद्धां मृगयुना वने।
महागज इवारण्ये स्नेहात्परिममर्श ताम्।।2.10.26।।

காட்டில் விஷ அம்பால் தாக்கப்பட்ட தனது குட்டியைத் தடவிக்கொடுக்கும், தாய் யானையைப் போல, தசரதர், கைகேயியை அன்புடன் தடவிக் கொடுத்தார்.

 

परिमृश्य च पाणिभ्यामभिसन्त्रस्तचेतनः।
कामी कमलपत्राक्षीमुवाच वनितामिदम्।।2.10.27।।

மிகுந்த அச்சத்துடனும், ஆயினும், நிறைய அன்புடனும், தனது தாமரை இதழைப் போன்ற கண்களுடைய மனைவியை அன்புடன் தடவிக்கொடுத்த படியே, அரசர் கூறினார்:

 

न तेऽहमभिजानामि क्रोधमात्मनि संश्रितम्।
देवि केनाभिशप्ताऽसि केन वाऽसि विमानिता।।2.10.28।।

यदिदं मम दुःखाय शेषे कल्याणि पांसुषु।

மங்களகரமானவளே! உனக்கு என் மேல் தான் கோபமா என்று தெரியவில்லை. உனக்கு எதனால் கோபம் என்றும் புரியவில்லை. யாராவது உன்னைத் துன்பப்படுத்தி விட்டார்களா? அல்லது மரியாதைக் குறைவாய் நடத்தி விட்டார்களா? நீ இப்படிப் புழுதியில் படுத்திருப்பது என்னை மிகவும் துன்புறுத்துகிறது.

 

भूमौ शेषे किमर्थं त्वं मयि कल्याणचेतसि।।2.10.29।।

भूतोपहतचित्तेव मम चित्तप्रमाथिनी।

நான் இவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கும் போது, நீ ஏன் பித்தம் பிடித்தவளைப்போல, என் உள்ளத்தைத் துடிக்கச் செய்து, புழுதியில் படுத்துக்கொண்டிருக்கிறாய்?

 

सन्ति मे कुशला वैद्यास्त्वभितुष्टाश्च सर्वशः।।2.10.30।।

सुखितां त्वां करिष्यन्ति व्याधिमाचक्ष्व भामिनी।

 

அழகியே! கை தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள். உனக்கு என்ன நோய் என்று சொல். உன்னை முழுமையாக நலமடையச் செய்து விடுவார்கள்.


कस्य वा ते प्रियं कार्यं केन वा विप्रियं कृतम्।।2.10.31।।

कः प्रियं लभतामद्य को वा सुमहदप्रियम्।

 நீ யாருக்காவது ஏதாவது உபகாரம் செய்ய வேண்டுமா? யாராவது உனக்குத் துன்பம் விளைவித்துள்ளார்களா? நான் யாருக்கு என்ன உபகாரம் செய்ய வேண்டும்? யாருக்குத் துன்பம் உண்டாக்க வேண்டும்?

 

मा रोदीर्मा च कार्षीस्त्वं देवि संपरिशोषणम्।।2.10.32।।

अवध्यो वध्यतां को वा को वा वध्यो विमुच्यताम्।
दरिद्रः को भवत्वाढ्यो द्रव्यवान्वाऽप्यकिञ्चनः।।2.10.33।।

தேவி! கண்ணீர் சிந்தாதே! உன் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாதே! என்னிடம் சொல். கொல்லப்படக் கூடாதவனைக் கொல்ல வேண்டுமா? கொல்லப் பட வேண்டியவனை விடுதலை செய்ய வேண்டுமா? ஏழையைச் செல்வந்தனாக்க வேண்டுமா? செல்வந்தனை ஏழையாக்க வேண்டுமா? எது வேண்டுமானாலும் செய்கிறேன்.

 

अहं चैव मदीयाश्च सर्वे तव वशानुगाः।
न ते किञ्चिदभिप्रायं व्याहन्तुमहमुत्सहे।।2.10.34।।

நானும் என்னைச் சேர்ந்தவர்களும் உனக்கு அடங்கினவர்கள். உன் விருப்பத்துக்கு எதிராக ஒரு சிறிய செயலும் செய்ய மாட்டேன்.

 

आत्मनो जीवितेनापि ब्रूहि यन्मनसेच्छसि।
बलमात्मनि जानन्ती न मां शङ्कितुमर्हसि।।2.10.35।।

करिष्यामि तव प्रीतिं सुकृतेनापि ते शपे।

நீ என்ன செய்ய விரும்பினாலும், அதைச் செய். அதனால் என் உயிர் போவதானாலும் சரி. என் வலிமை உனக்குத்தெரியும் அல்லவா? நீ என்னைச் சந்தேகப்படுவது தகாது. நான் செய்த புண்ணியங்களின் மீது ஆணையிட்டுக்கூறுகிறேன், உனக்கு விருப்பமானதை நிச்சயம் நிறைவேற்றுகிறேன்.

 

यावदावर्तते चक्रं तावती मे वसुन्धरा।।2.10.36।।

प्राचीनास्सिन्धुसौवीरा स्सौराष्ट्रा दक्षिणापथाः।
वङ्गाङ्गमगधाः मत्स्याः समृद्धा काशिकोसलाः।।2.10.37।।


கிழக்குப் பகுதியிலும், சிந்து சௌவீரம் என்னும் பகுதியிலும், சௌராஷ்ட்ரத்திலும், தெற்குப் பகுதிகளிலும், வங்க, அங்க, மகத ராஜ்ஜியங்களிலும், மத்ஸ்ய தேசத்திலும், வளம் மிகுந்த காசி, கோசலம் முதலிய தேசங்களிலும், என் அதிகாரம் பரவியிருக்கிறது.

 

 तत्र जातं बहु द्रव्यं धनधान्यमजाविकम्।

ततो वृणीष्व कैकेयि यद्यत्त्वं मनसेच्छसि।।2.10.38।।


இங்கெல்லாம் நிறைய செல்வங்களும், தானிய வகைகளும், ஆடு மாடுகளும், இன்னும் பலவித பொருட்களும் கிடைக்கின்றன. உனக்கு என்ன வேண்டுமோ, கேள்!

 

किमायासेन ते भीरु उत्तिष्ठोत्तिष्ठ शोभने।
तत्त्वं मे ब्रूहि कैकेयि यतस्ते भयमागतम्।।2.10.39।।

तत्ते व्यपनयिष्यामि नीहारमिव रश्मिवान्।

அழகான கைகேயி! ஏன் சிரமப்படுகிறாய்? எழுந்திரு. உனக்கு என்ன கலக்கம் என்று என்னிடம் சொல். சூரியன் பனியை இல்லாமல் செய்து விடுவதைப் போல, உன் துன்பத்தை இல்லாமல் செய்து விடுகிறேன்.

 

तथोक्ता सा समाश्वस्ता वक्तुकामा तदप्रियम्।।2.10.40।।

परिपीडयितुं भूयो भर्तारमुपचक्रमे।

இவ்வாறு தசரத மன்னர் கூறியதும், கைகேயி ஒரு பெருமூச்சு விட்டாள். பின்னர், அவருக்குத் துன்பத்தை அளிக்கக் கூடிய விஷயத்தைக் கூறுவதற்கு முன், இன்னும் அவரைத் துன்பப் படுத்தினாள்.

 

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे दशमस्सर्गः।।


Thus ends the tenth sarga of Ayodhyakanda of the holy Ramayana, the first epic composed by sage Valmiki.

 

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின் பத்தாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

04.01.2025

 

 

 

 

 

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...