Tuesday, 22 July 2025

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஸர்க்கம் –11

 

(கைகேயி தசரதர் தனக்கு முன்னர் கொடுத்திருந்த வரங்களை நினைவு படுத்தி,  பரதனை யுவராஜாவாக்கவும், ராமனைக் காட்டுக்கு அனுப்பவும் வரம் வேண்டுகிறாள்.)


तं मन्मथशरैर्विद्धमं कामवेगवशानुगम्।
उवाच पृथिवीपालं कैकेयी दारुणं वचः।।2.11.1।।

 மன்மதனின் பாணங்களின் தாக்குதலினால், காம வசப்பட்டிருந்த அந்த தசரத மன்னனிடம் கைகேயி கடுமையான வார்த்தைகளைக்கூறினாள்.

 

नास्मि विप्रकृतादेव केनचिन्नावमानिता।
अभिप्रायस्तु मे कश्चित्तमिच्छामि त्वया कृतम्।।2.11.2।।

 அரசே! என்னை யாரும் வருத்தப் படுத்தவோ, அவமானப்படுத்தவோ இல்லை. ஆனால், எனக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அதை நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும்.

 

प्रतिज्ञां प्रतिजानीष्व यदि त्वं कर्तुमिच्छसि।
अथ तद्व्याहरिष्यामि यदभिप्रार्थितं मया।।2.11.3।।

 என் விருப்பத்தை நிறைவேற்றும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், அவற்றை நிறைவேற்றித் தருகிறேன் என்று சபதம் செய்யுங்கள். அதன் பின் என் விருப்பம் என்ன என்பதைக் கூறுகிறேன்.

 

तामुवाच महातेजाः कैकेयीमीषदुत्स्मितः।
कामी हस्तेन संगृह्य मूर्धजेषु शुचिस्मिताम्।।2.11.4।।

 வலிமை மிக்க தசரத மன்னர், இதைக் கேட்டு, பிரகாசமான புன்னகையுடன் அவளுடைய கூந்தலைத் தன் கைகளால் சரி செய்து கொண்டே, இவ்வாறு கூறினார்.

 

 आवलिप्ते न जानासि त्वत्तः प्रियतरो मम।

मनुजो मनुजव्याघ्राद्रामादन्यो न विद्यते।।2.11.5।।

 பெருமை நிறைந்த கைகேயியே! எனக்கு உன்னைக்காட்டிலும், பிரியமான பெண்ணோ, மனிதருள் சிறந்த ராமனைக் காட்டிலும் பிரியமான ஆணோ கிடையாது, என்று உனக்குத் தெரியாதா?

 

तेनाजय्येन मुख्येन राघवेण महात्मना।
शपे ते जीवनार्हेण ब्रूहि यन्मनसेच्छासि।।2.11.6।।


வெல்ல முடியாத, விசால மனமுடைய, ரகுவம்சத்தோன்றலான ராமனின் மேல் ஆணையிட்டுச்சொல்கிறேன், உன் மனதில் உள்ள விருப்பத்தைக்கூறு.



यं मुहूर्तमपश्यंस्तु न जीवेयमहं ध्रुवम्।
तेन रामेण कैकेयि शपे ते वचनक्रियाम्।।2.11.7।।


கைகேயி! எந்த ராமனைச் சிறிது நேரம் பார்க்காவிட்டாலும், நான் உயிர் தரிக்க மாட்டேனோ, அந்த ராமனின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன், உன் விருப்பம் எதுவாயினும், அதை நான் நிறைவேற்றுகிறேன்.

 

आत्मना वात्मजैश्चान्यैर्वृणेयं मनुजर्षभम्।
तेन रामेण कैकेयि शपे ते वचनक्रियाम्।।2.11.8।।

கைகேயி! மனிதருள் சிறந்த ராமன் நலமுடன் இருக்கட்டும்! என் உயிருக்கோ, என் புத்திரர்களின் உயிருக்கோ, எந்த ஆபத்து வருவதாயிருந்தாலும், உன் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்.

 

 भद्रे हृदयमप्येतदनुमृशोद्धरस्व मे।

एतत्समीक्ष्य कैकेयि ब्रूहि यत्साधु मन्यसे।।2.11.9।।


மென்மையானவளே! கைகேயி! என் சோர்வடைந்த உள்ளத்தைத் தொட்டு, அதைக்காப்பாற்று. உனக்கு எது நல்லது என்று படுகிறாதோ, அதைக்கூறு.

 

 

बलमात्मनि जानन्ती न मां शङ्कितुमर्हसि।
करिष्यामि तव प्रीतिं सुकृतेनापि ते शपे।।2.11.10।।

என் மீது உனக்கு இருக்கும் அதிகாரத்தை நீ அறிவாய்! ஆகவே, நீ என் மீது சந்தேகப்படுவது தகாது. என் புண்ணியங்கள் மீது ஆணை! உன் விருப்பம் எதுவோ, அதை நிச்சயம் நிறைவேற்றுகிறேன்.

 

 सा तदर्थमना देवी तमभिप्रायमागतम्।

निर्माध्यस्थ्याच्च हर्षाच्च बभाषे दुर्वचं वचः।।2.11.11।।

தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாய் இருந்த கைகேயி, மகிழ்ச்சியுடன், சொல்லத்தகாத சொற்களைக் கூறலானாள்.

 

तेन वाक्येन संहृष्टा तमभिप्रायमागतम्।
व्याजहार महाघोरमभ्यागतमिवान्तकम्।।2.11.12।।

மன்னரின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த கைகேயி, மரணத்தைப் போல், அவளுடைய மனதில் புகுந்திருந்த அந்த பயங்கரமான விருப்பத்தை வெளிப்படுத்தினாள்.

 

यथा क्रमे शपसि वरं मम ददासि च।
तच्छृण्वन्तु त्रयस्त्रिंशद्देवास्साग्निपुरोगमाः।।2.11.13।।

“எனக்கு வரங்களைத்தருவதாக மீண்டும் மீண்டும் வாக்களிக்கிறீர்கள். அக்னி முதலாய முப்பத்து முக்கோடி தேவர்களும், அதைக் கேட்கட்டும்!

 

चन्द्रादित्यौ नभश्चैव ग्रहा रात्र्यहनी दिशः।
जगच्च पृथिवी चेयं सगन्धर्वा सराक्षसा।।2.11.14।।

निशाचराणि भूतानि गृहेषु गृहदेवता।
यानि चान्यानि भूतानि जानीयुर्भाषितं तव।।2.11.15।।

சந்திரனும், சூரியனும், ஆகாயமும், கிரகங்களும், இரவும், பகலும், பத்து திசைகளும், கந்தர்வர்களும், ராக்ஷஸர்களும், இந்தப்பூமியும், இரவில் நடமாடும் அரக்கர்களும், குடும்ப தேவதைகளும், மற்றும் உள்ள அனைத்து உயிர்களும், உங்கள் வாக்குறுதிகளைக் கேட்கட்டும்!

 

सत्यसन्धो महातेजाः धर्मज्ञः सुसमाहितः।
वरं मम ददात्येष तन्मे श्रृण्वन्तु दैवताः।।2.11.16।।

அறத்தில் சிறந்த, வாக்குத் தவறாத  தசரத மன்னர், தெளிவான மனத்துடன் எனக்கு வரங்களைத் தரப்போகிறார். அனைத்து தெய்வங்களும் இதற்கு சாட்சியாகட்டும்!”

 

इति देवी महेष्वासं परिगृह्याभिशस्य च।
ततः परमुवाचेदं वरदं काममोहितम्।।2.11.17।।

கைகேயியின் மீது மிகுந்த அன்பு கொண்ட தசரத மன்னரை வானளாவப் புகழ்ந்து கைகேயி இவ்வாறு கூறினாள்.

 

स्मर राजन् पुरावृत्तं तस्मिन् दैवासुरे रणे।
तत्र चाच्यावयच्छत्रुस्तव जीवितमन्तरा।।2.11.18।।

“அரசே! தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே நடந்த போரில் உங்களுடைய எதிரிகள் உங்கள் உயிரைத் தவிர மற்றனைத்தையும் பறித்துக்கொண்டு விட்டதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

 

तत्र चापि मया देव यत्त्वं समभिरक्षितः।
जाग्रत्या यतमानायास्ततो मे प्राददा वरौ।।2.11.19।।

அரசே! அந்தச் சமயத்தில் நான் தங்களைக் காப்பாற்றினேன். அப்போது, என்னுடைய எச்சரிக்கை உணர்வைப் பாராட்டி எனக்கு இரண்டு வரங்களைக் கொடுத்தீர்கள்.

 

तौ तु दत्तौ वरौ देव निक्षेपौ मृगयाम्यहम्।
तथैव पृथिवीपाल सकाशे सत्यसङ्गर।।2.11.20।।

இந்த உலகைக் காப்பவரே! கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவரே! தங்களிடம் நான் விட்டு வைத்திருந்த வரங்களை இப்போது கேட்கிறேன்.

 

तत् प्रतिश्रुत्य धर्मेण न चेद्दास्यसि मे वरम्।
अद्यैव हि प्रहास्यामि जीवितं त्वद्विमानिता।।2.11.21।।

தாங்கள் எனக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த வரங்களைக் கொடுத்து விடுங்கள். இல்லையென்றால், உங்களால் அவமானப்படுத்தப் பட்ட நான் உயிரை விட்டு விடுவேன்.

 

वाङ्मात्रेण तदा राजा कैकेय्या स्ववशे कृतः।
प्रचस्कन्द विनाशाय पाशं मृग इवात्मनः।।2.11.22।।

தானே பொறிக்குள் பாய்ந்து தன் அழிவுக்குக் காரணமாகும் மானைப்போல, தசரத மன்னர் தனது வார்த்தைகளாலேயே கைகேயியின் கட்டுக்குள் வந்தார்.

 

ततः परमुवाचेदं वरदं काममोहितम्।
वरौ यौ मे त्वया देव तदा दत्तौ महीपते।।2.11.23।।

तौ तावदहमद्यैव वक्ष्यामि शृणु मे वचः।

தன் மேல் மிக்க விருப்பம் கொண்டிருந்த தசரத மன்னரிடம் கைகேயி கூறினாள், “இந்தப் புவியின் தலைவரே! தாங்கள் எனக்கு அளித்த வரங்களைப் பற்றிக்கூறுகிறேன். கேளுங்கள்.

 

अभिषेकसमारम्भो राघवस्योपकल्पितः।।2.11.24।।
अनेनैवाभिषेकेण भरतो मेऽभिषिच्यताम्।

ராமனுடைய பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பொருட்களையே கொண்டு என் மகன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்விக்க வேண்டும்.

 

यो द्वितीयो वरो देव दत्तः प्रीतेन मे त्वया।।2.11.25।।
तदा दैवासुरे युद्धे तस्य कालोऽयमागत।

தேவாசுர யுத்தத்தின் போது, என் மேல் மகிழ்ந்து தாங்கள் அளித்த இரண்டாவது வரத்தையும் கேட்கும் காலம் வந்து விட்டது.

 

नव प़ञ्च च वर्षाणि दण्डकारण्यमाश्रितः।।2.11.26।।
चीराजिनजटाधारी रामो भवतु तापसः।

மரவுரியும், ஜடைமுடியும் அணிந்து ராமன் பதினான்கு ஆண்டுகள் தண்டகாரண்யத்தில் தவமுனிவன் போல் வசிக்க வேண்டும்.

 

भरतो भजतामद्य यौवराज्यमकण्टकम्।।2.11.27।।

एष मे परमः कामो दत्तमेव वरं वृणे।
अद्य चैव हि पश्येयं प्रयान्तं राघवं वनम्।।2.11.28।।

எந்தப் போட்டியும் இன்றி, பரதன் யுவராஜாவாகட்டும். இது தான் எனது ஆசை. ஏற்கனவே தாங்கள் அளித்து விட்ட வரத்தைத் தான் கேட்கிறேன். இன்றே ராமன் காட்டுக்குச் செல்வதை நான் பார்க்க வேண்டும்.

 

स राजराजः भव सत्यसङ्गरः
कुलं च शीलं च हि रक्ष जन्म च।

परत्रवासे हि वदन्त्यनुत्तमं
तपोधनास्सत्यवचो हितं नृणाम्।।2.11.29।।

அரசே! தங்களது வாக்கைக் காப்பாற்றுவதன் மூல்ம, தங்கள், குலத்தையும், தங்கள் நடத்தையும், தங்கள் பர்மபரையையும், காப்பாற்றிக் கொள்ளுங்கள்! தவச்செல்வர்கள்  அடுத்த உலகத்தில் நல்ல பதவியைப் பெற சத்தியத்தைக்காட்டிலும் சிறந்த செல்வம் இல்லையெனக் கூறுகிறார்கள்.”

 


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे एकादशस्सर्गः।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின் பதினொன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

22.07.2025

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...