Saturday, 30 December 2023

 

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 45

(தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். சிவபெருமான் அதிலிருந்து வரும் விஷத்தைப் பருகுகிறார். விஷ்ணு ஆமை வடிவம் எடுத்துக் கொண்டு மந்தர மலையைத் தன் முதுகில் தாங்குகிறார். தன்வந்திரி, அப்சரஸ்கள் வெளிப்படுகிறார்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடியே, அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் சண்டை ஏற்படுகிறது.)


विश्वामित्रवचश्श्रुत्वा राघव स्सहलक्ष्मण:।
विस्मयं परमं गत्वा विश्वामित्रमथाब्रवीत्।।1.45.1।।

லக்ஷ்மணனுடன் சேர்ந்து, விஸ்வாமித்திரர் கூறிய கதையைக் கேட்ட ராமன் மிகவும் வியப்பெய்தி, அவரிடம் கூறினான்:

 

अत्यद्भुतमिदं ब्रह्मन् कथितं परमं त्वया।
गङ्गावतरणं पुण्यं सागरस्यापि पूरणम्।।1.45.2।।

“பிரம்மத்தை உணர்ந்தவரே! கங்கை ஆகாயத்தில் இருந்து கீழே இறங்கி வந்து, அதனால் சமுத்திரம் நீர் நிறைந்து முழுமையடைந்த  கதை மிகவும் அற்புதமாக இருந்தது.”

 

तस्य सा शर्वरी सर्वा सह सौमित्रिणा तदा।
जगाम चिन्तयानस्य विश्वामित्रकथां शुभाम् ।।1.45.3।।

ராமன், லக்ஷ்மணனுடன் சேர்ந்து விஸ்வாமித்திரர் கூறிய அந்தக் கதையைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்ததில் இரவும் கழிந்து விட்டது.

 

तत: प्रभाते विमले विश्वामित्रं महामुनिम्।
उवाच राघवो वाक्यं कृताह्निकमरिन्दम:।।1.45.4।।

தூய்மையான காலை விடிந்ததும், எதிரிகளை அழிக்கும் திறன் கொண்ட ராமன், காலையில் செய்ய வேண்டிய ஆன்மீகக் கடமைகளை முடித்து விட்டு, விஸ்வாமித்திரரிடம் இவ்வாறு கூறினான்:

 

गता भगवती रात्रिश्श्रोतव्यं परमं श्रुतम्।

क्षणभूतेव नौ रात्रि स्सम्वृत्तेयं महातप:।।1.45.5।।

इमां चिन्तयतस्सर्वां निखिलेन कथां तव।

“மகத்தான தபஸ்வியே! தாங்கள் கூறிய இந்த அருமையான கதையைக் கேட்டதிலும், அதைப் பற்றிச் சிந்தித்ததிலும், இந்த மங்களமான இரவு நொடிப் பொழுதில் கழிந்தது போல் இருக்கிறது.

 

तराम सरितां श्रेष्ठां पुण्यां त्रिपथगां नदीम्।।1.45.6।।

नौरेषा हि सुखास्तीर्णा ऋषीणां पुण्यकर्मणाम्।

भगवन्तमिह प्राप्तं ज्ञात्वा त्वरितमागता।।1.45.7।।

மரியாதைக்குரிய தாங்கள் இங்கு வந்திருப்பதை அறிந்து, ரிஷிகளுடைய வசதியான படகு வந்திருக்கிறது. (இதில் ஏறி) மூன்று திசைகளிலும் பாயும் புண்ணிய நதியான கங்கையைத் தாண்டுவோம். “

 

तस्य तद्वचनं श्रुत्वा राघवस्य महात्मन:।
सन्तारं कारयामास सर्षिसङ्घ स्सराघव:।।1.45.8।।

மகாத்மாவான ராமனின் சொற்களைக்கேட்ட விஸ்வாமித்திரர், ராம லக்ஷ்மணர்களுடனும், ஏராளமான ரிஷிகளுடனும் நதியைக் கடக்கலானார்.

 

उत्तरं तीरमासाद्य सम्पूज्यर्षिगणं तदा।
गङ्गाकूले निविष्टास्ते विशालां ददृशु: पुरीम्।।1.45.9।।

கங்கையின் வட கரையை அடைந்த அவர்கள், அங்கே தங்கியிருந்த முனிவர்களைப் பூஜித்து விட்டு அமர்ந்த போது ‘விசாலம்’ என்ற நகரத்தைக் கண்டார்கள்.

 

ततो मुनिवरस्तूर्णं जगाम सह राघव: ।
विशालां नगरीं रम्यां दिव्यां स्वर्गोपमां तदा।।1.45.10।।

பின்னர், ராமலக்ஷ்மணர்களுடன், தவஸ்ரேஷ்டரான விஸ்வாமித்திரர் ஸ்வர்க்கத்துக்கு நிகரான அழகுடன் விளங்கிய அந்த விசாலம் என்னும் நகரத்துக்கு விரைந்து சென்றார்.

 

अथ रामो महाप्राज्ञो विश्वामित्रं महामुनिम् ।
पप्रच्छ प्राञ्जलिर्भूत्वा विशालामुत्तमां पुरीम्।।1.45.11।।

அப்போது அறிவாற்றல் நிறைந்த ராமன், கைகளைக் கூப்பிக்கொண்டு மகாமுனிவரான விஸ்வாமித்திரரிடம் அந்த உத்தமமான விசால நகரத்தைப் பற்றி விசாரித்தான்.

 

कतरो राजवंशोऽयं विशालायां महामुने।
श्रोतुमिच्छामि भद्रं ते परं कौतूहलं हि मे।।.1.45.12।।

“மகாமுனிவரே! இந்த விசாலம் என்ற நகரத்தில் எந்த ராஜ வம்சம் ஆட்சி செய்து வருகிறது? அதைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். தயவு செய்து அதைப் பற்றிக் கூறுங்கள். தங்களுக்கு நன்மை உண்டாகட்டும்!”

 

तस्य तद्वचनं श्रुत्वा रामस्य मुनिपुङ्गव:।
आख्यातुं तत्समारेभे विशालस्य पुरातनम्।।1.45.13।।

ராமனின் சொற்களைக் கேட்ட முனிபுங்கவரான விஸ்வாமித்திரர் விசாலம் என்னும் புராதனமான நகரத்தின் வரலாற்றைக் கூறத் தொடங்கினார்.

 

श्रूयतां राम शक्रस्य कथां कथयतश्शुभाम्।
अस्मिन् देशे तु यद्वृत्तं तदपि शृणु राघव।।1.45.14।।

“ராமா! இந்திரனின் மங்களகரமான கதையையும், இந்த நகரத்தில் என்ன நடந்தது என்பதையும் சொல்கிறேன், கேள்!

 

पूर्वं कृतयुगे राम दिते: पुत्रा महाबला:।
अदितेश्च महाभाग वीर्यवन्तस्सुधार्मिका:।।1.45.15।।

பாக்கியசாலியான ராமனே! க்ருதயுகத்தில் திதியின் புத்திரர்களாகிய தைத்யர்கள் மிகவும் பலசாலிகளாகவும், அதிதியின் புத்திரர்களான ஆதித்யர்கள் மிகவும் வீர்யம் பொருந்திய தர்மாத்மாக்களாகவும் இருந்தார்கள்.

 

ततस्तेषां नरश्रेष्ठ बुद्धिरासीन्महात्मनाम् ।
अमरा अजराश्चैव कथं स्याम निरामया:।।1.45.16।।

மனிதருள் சிறந்தவனே! ஒரு சமயம் அவர்கள், மூப்பு, மரணம், நோய் ஆகியவை இல்லாமல் வாழ்வது எப்படி என்று யோசித்தார்கள்.

 

तेषां चिन्तयतां राम बुद्धिरासीन्महात्मनाम्।
क्षीरोदमथनं कृत्वा रसं प्राप्स्याम तत्र वै।।1.45.17।।

ராமா! அவ்வாறு அவர்கள் யோசித்துக்கொண்டிருந்த போது அவர்களுக்கு, பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற  ஒரு எண்ணம் வந்தது.

 

ततो निश्चित्य मथनं योक्त्रं कृत्वा च वासुकिम्।
मन्थानं मन्दरं कृत्वा ममन्थुरमितौजस:।।1.45.18।।

அதன் படி, எல்லையற்ற ஆற்றல் உடைய அவர்கள், வாசுகி என்னும் அரவத்தைக் கயிறாகவும், மந்தர மலையை மத்தாகவும் கொண்டு, பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்.

 

अथ वर्षसहस्रेण योक्त्रसर्पशिरांसि च।
वमन्त्यति विषं तत्र ददंशुर्दशनैश्शिला:।।1.45.19।।

ஆயிரம் ஆண்டுகள் இவ்வாறு பாற்கடலைக் கடைந்த பிறகு வாசுகி மிக பயங்கரமான விஷத்தைக் கக்கியதுடன் மந்தர மலையைத் தன் பற்களால் கடிக்கத் தொடங்கியது.

 

उत्पपाताग्निसङ्काशं हालाहलमहाविषम्।
तेन दग्धं जगत्सर्वं सदेवासुरमानुषम्।।1.45.20।।

அக்கினியைப் போன்ற பயங்கரமான ஹாலாஹாலம் என்ற அந்த விஷத்தால், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உலகங்களும் எரிந்தன.

 

अथ देवा महादेवं शङ्करं शरणार्थिन:।
जग्मु: पशुपतिं रुद्रं त्राहि त्राहीति तुष्टुवु:।।1.45.21।।

அப்போது, தேவர்கள், அனைத்து உயிர்களுக்கும் தலைவரும், அனைவருக்கும் நன்மை செய்பவருமான சங்கரனைச் சரணடைந்து, தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினார்கள்.

 

एवमुक्तस्ततो देवैर्देवदेवेश्वर: प्रभु:।
प्रादुरासीत्ततोऽत्रैव शङ्खचक्रधरो हरि:।।1.45.22।।

அதே சமயத்தில், தேவர்களால் வேண்டிக்கொள்ளப் பட்ட விஷ்ணுவும் சங்க சக்கரங்களுடன் அங்கே தோன்றினார்.

 

उवाचैनं स्मितं कृत्वा रुद्रं शूलभृतं हरि:।
दैवतैर्मथ्यमाने तु यत्पूर्वं समुपस्थितम् ।।1.45.23।।

त्वदीयंहि सुरश्रेष्ठ सुराणामग्रजोऽसि यत् ।

अग्रपूजामिमां मत्वा गृहाणेदं विषं प्रभो।।1.45.24।।

ஹரியானவர், புன்னகையுடன் சூலம் ஏந்திய ருத்ரரிடம், “தேவர்களுக்குள் ஸ்ரேஷ்டமானவரே! முதன் முதலாகத் தோன்றிய தேவர் என்ற வகையில், பாற்கடலைக் கடைந்த போது முதலில் வந்தது எதுவானானும் அது தங்களுக்கு உரியது. ஆகவே, இந்த விஷத்தைத் தங்களுக்கு அளிக்கப்படும் முதல் மரியாதையாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.


इत्युक्त्वा च सुरश्रेष्ठस्तत्रैवान्तरधीयत।

देवतानां भयं दृष्टवाश्रुत्वा वाक्यं तु शार्ङ्गिण:।
हालाहलविषं घोरं स जग्राहामृतोपमम्।।1.45.25।।

தேவர்களுள் மிகச்சிறந்தவரான விஷ்ணு, இவ்வாறு கூறி விட்டு அங்கிருந்து மறைந்து விட்டார். சிவபெருமான், விஷ்ணுவின் வார்த்தைகளைக் கேட்டு, தேவர்களின் அச்சத்தைப் பார்த்து, பயங்கரமான அந்த ஹாலாஹலத்தை, அமிர்தத்தைப் போலக் கருதி ஏற்றுக்கொண்டார்.

 

देवान्विसृज्य देवेशो जगाम भगवान् हर:।
ततो देवासुरास्सर्वे ममन्थू रघुनन्दन ।।1.45.26।।

தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமான் பிறகு அங்கிருந்து சென்று விட்டார். ரகு நந்தனா! அதன் பிறகு, தேவர்களும் அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடையத் தொடங்கினர்.

 

प्रविवेशाथ पातालं मन्थान: पर्वतोऽनघ।
ततो देवास्सगन्धर्वास्तुष्टुवुर्मधुसूदनम्।।1.45.27।।

பாவமற்றவனே! சிறிது நேரத்தில், மந்தர மலையானது கீழிறங்கிப் பாதாளத்துக்குச் சென்று விட்டது. தேவர்களும் கந்தர்வர்களும், விஷ்ணுவைச் சரணடைந்து வேண்டிக்கொண்டனர்.

 

त्वं गति: सर्वभूतानां विशेषेण दिवौकसाम्।
पालयास्मान्महाबाहो गिरिमुद्धर्तुमर्हसि।।1.45.28।।

“வலிமையான கரங்களுடைய விஷ்ணுவே! தாங்கள் தான் அனத்து உயிர்களுக்கும், குறிப்பாக தேவர்களாகிய எங்களுக்கு அடைக்கலம். தயவு செய்து, இந்த மந்தர மலையை மேலே தூக்கி, எங்களைக் காப்பாற்றுங்கள்.”

 

इति श्रुत्वा हृषीकेश: कामठं रूपमास्थित:।
पर्वतं पृष्ठत: कृत्वा शिश्ये तत्रोदधौ हरि:।।1.45.29।।

தேவர்களின் இந்த வேண்டுகோளைக்கேட்ட ஹ்ரிஷீகேசனான (புலன்களுக்குத் தலைவன்) ஹரியானவர், ஆமையின் வடிவம் எடுத்துக் கொண்டு, மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டு, சமுத்திரத்தில் படுத்துக் கொண்டார்.

 

पर्वताग्रे तु लोकात्मा हस्तेनाक्रम्य केशव:।
देवानां मध्यत: स्थित्वा ममन्थ पुरुषोत्तम:।।1.45.30।।

பின்னர், லோகாத்மாவான விஷ்ணு, தேவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு மந்தர மலையின் சிகரத்தைக் கைகளால் பற்றிக் கொண்டு, பாற்கடலைக் கடைந்தார்.

 

अथ वर्षसहस्रेण सदण्डस्सकमण्डलु:।
पूर्वं धन्वन्तरिर्नाम अप्सराश्च सुवर्चस:।।1.45.31।।

ஆயிரம் ஆண்டுகள் இவ்வாறு கடைந்த பின்னர், கைகளில் தண்டத்தையும், கமண்டலத்தையும் ஏந்திக் கொண்டு, தன்வந்தரி வெளிப்பட்டார். பிறகு, மிகுந்த ஒளி பொருந்திய அப்சரஸ்கள் வெளியே வந்தார்கள்.

 

अप्सु निर्मथनादेव रसास्तस्माद्वरस्त्रिय:।
उत्पेतुर्मनुजश्रेष्ठ तस्मादप्सरसोऽभवन्।।1.45.32।।

மனிதருள் சிறந்தவனே! ராமா! அந்தப் பாற்கடலைக் கடையும் போது, அதன் ரஸத்தில் இருந்து தோன்றியதால், அந்த அழகான பெண்கள் அப்சரஸ்கள் எனப்பட்டார்கள்.

षष्टि: कोट्योऽभवंस्तासाम् अप्सराणां सुवर्चसाम्।
असङ्ख्येयास्तु काकुत्स्थ यास्तासां परिचारिका:।।1.45.33।।

காகுஸ்தனே! அறுபது கோடி அப்சரஸ்கள் பாற்கடலில் இருந்து வெளிப்பட்டார்கள். அவர்களுக்குச் சேவை செய்வதற்காக, எண்ணிலடங்காத பணிப்பெண்களும் வெளியே வந்தார்கள்.

 

न तास्स्म परिगृह्णन्ति सर्वे ते देवदानवा:।
अप्रतिग्रहणात्ताश्च सर्वास्साधारणास्स्मृता:।।1.45.34।।

தேவர்களோ, தானவர்களோ, அவர்களைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, அவர்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள் என்று கருதப் பட்டார்கள்.

 

वरुणस्य तत: कन्या वारुणी रघुनन्दन ।
उत्पपात महाभागा मार्गमाणा परिग्रहम्।।1.45.35।।

ரகு நந்தனா! அதன் பின்னர், வருணனின் புதல்வியான வாருணியானவள், தனக்கேற்ற கணவனைத் தேடிப் பாற்கடலில் இருந்து வெளியே வந்தாள்.

 

दिते: पुत्रा न तां राम जगृहुर्वरुणात्मजाम्।
अदितेस्तु सुता वीर जगृहुस्तामनिन्दिताम्।।1.45.36।।

ராமா! களங்கமற்ற வாருணியைத் திதியின் புதல்வர்களாகிய தானவர்கள் ஏற்கவில்லை. ஆனால், அதிதியின் புதல்வர்களான தேவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

 

असुरास्तेन दैतेयास्सुरास्तेनादितेस्सुता:।
हृष्टा: प्रमुदिताश्चासन् वारुणीग्रहणात्सुरा:।।1.45.37।।

அதன் காரணமாக, திதியின் புதல்வர்கள் அசுரர்கள் என்றும், அதிதியின் புதல்வர்கள் சுரர்கள் என்றும் அறியப்பட்டார்கள். தேவர்கள், வாருணியைப் பெற்றதனால் மிகவும் மகிழ்ந்தார்கள்.

 

उच्चैश्श्रवा हयश्रेष्ठो मणिरत्नं च कौस्तुभम्।
उदतिष्ठन्नरश्रेष्ठ तथैवामृतमुत्तमम्।।1.45.38।।

மனிதருள் சிறந்தவனே! குதிரைகளுள் சிறந்த ‘உச்சைஸ்ரவஸ்’ என்னும் தெய்வீகக் குதிரையும், மணிகளுள் சிறந்த ‘கௌஸ்துபமும்’, இறுதியாக அமிர்தமும், அந்தப் பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்தன.

 

अथ तस्य कृते राम महानासीत्कुलक्षय:।
अदितेस्तु तत: पुत्रा दिते: पुत्रानसूदयन्।।1.45.39।।

ராமா! அந்த அமிர்தத்தைப் பங்கீட்டுக் கொள்வதில் ஏற்பட்ட சண்டையில், திதியின் புதல்வர்களிலும், அதிதியின் புதல்வர்களிலும் அநேகம் பேர் அழிந்தனர். பின்னர் அதிதியின் புதல்வர்களான தேவர்கள், திதியின் புதல்வர்களான தைத்யர்களைக் கொன்றனர்.

 

एकतोऽभ्यागमन् सर्वे ह्यसुरा राक्षसैस्सह।
युद्धमासीन्महाघोरं वीर त्रैलोक्यमोहनम्।।1.45.40।।

ராமனே! அசுரர்களும், ராக்ஷஸர்களும் ஒரு அணியில் சேர்ந்து கொண்டு தேவர்களுடன் பயங்கரமாகப் போரிட்டதில் மூன்று உலகங்களிலும் குழப்பம் ஏற்பட்டது.

 

यदा क्षयं गतं सर्वं तदा विष्णुर्महाबल:।
अमृतं सोऽहरत्त्तूर्णं मायामास्थाय मोहिनीम्।।1.45.41।।

எல்லாம் முழுமையாக அழிந்த பிறகு விஷ்ணுவானவர் மோஹினி என்ற மிக அழகான பெண்ணாக உருக்கொண்டு, அந்த அமிர்த கலசத்தைக் களவாடிச் சென்றார்.

 

ये गताऽभिमुखं विष्णुमक्षयं पुरुषोत्तमम्।
सम्पिष्टास्ते तदा युद्धे विष्णुना प्रभविष्णुना।।1.45.42।।

அழிவற்ற பரம புருஷனான விஷ்ணுவை எதிர்த்தவர்கள் அவரால் அழிக்கப் பட்டார்கள்.

 

अदितेरात्मजा वीरा दिते: पुत्रान्निजघ्निरे।
तस्मिन् घोरे महायुद्धे दैतेयादित्ययोर्भृशम्।।1.45.43।।

தைத்யர்களுக்கும், ஆதித்யர்களுக்கும் நடந்த கோரமான யுத்தத்தில்  அதிதியின் புதல்வர்கள் திதியின் புதல்வர்களைக் கொன்றார்கள்.


निहत्य दितिपुत्रांश्च राज्यं प्राप्य पुरन्दर:।
शशास मुदितो लोकान् सर्षिसङ्घान् सचारणान्।।1.45.44।।

திதியின் புதல்வர்களைக் கொன்றபின் ராஜ்ஜியத்தைப் பெற்ற இந்திரன் ரிஷிகளுடனும், தெய்வீகப் பாடகர்களுடனும், மகிழ்ச்சியாக தேவலோகத்தை ஆண்டுவந்தான்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे पञ्चचत्वारिंशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  நாற்பத்தைந்தாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...