Monday, 29 January 2024

  

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 70

(ஜனகர் தனது சகோதரனான குசத்வஜனை அழைத்து வரத் தூதுவர்களை அனுப்புகிறார். தசரதர் கேட்டுக்கொண்டதற் கிணங்க, வசிஷ்டர் இக்ஷ்வாகு வம்சத்தின் கதையைக் கூறுகிறார்.)

 

तत: प्रभाते जनक: कृतकर्मा महर्षिभि:।
उवाच वाक्यं वाक्यज्ञ श्शतानन्दं पुरोहितम्।।1.70.1।।

அதன் பின்னர், மறு நாள் விடிந்ததும், மகரிஷிகள் அனைவரும் தங்களுடைய அன்றாடக் கடமைகளை முடித்தவுடன், வாக்குத்திறம் மிக்க ஜனக மன்னர், தலைமைப் புரோகிதராகிய சதானந்தரிடன் கூறினார்:

 

भ्राता मम महातेजा यवीयानतिधार्मिक:।
कुशध्वज इति ख्यात: पुरीमध्यवसच्छुभाम्।।1.70.2।।

वार्याफलकपर्यन्तां पिबन्निक्षुमतीं नदीम्।
साङ्काश्यां पुण्यसङ्काशां विमानमिव पुष्पकम्।।1.70.3।।

“சிறந்த தார்மீகனும், என்னுடைய தம்பியுமான குசத்வஜன்  புனிதமான இக்ஷுமதி நதியின் கரைகளில், அம்புகளால் ஏற்படுத்தப் பட்டுள்ள தடுப்புச் சுவருடன், புஷ்பக விமானத்தைப் போல் காணப்படும் ‘சங்காஸ்யம்’ என்ற பெயருடைய தேசத்தை ஆண்டு வருகிறான்.

 

तमहं द्रष्टुमिच्छामि यज्ञगोप्ता स मे मत:।
प्रीतिं सोऽपि महातेजा इमां भोक्ता मया सह।।1.70.4।।

என்னுடைய யாகத்தைப் பாதுகாப்பவனாக நான் ஏற்றுக்கொண்டுள்ள அவனைக் காண விரும்புகிறேன். என்னுடைய சகோதரனும், என்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.”

 

एवमुक्ते तु वचने शतानन्दस्य सन्निधौ।
आगता: केचिदव्यग्रा जनकस्तान् समादिशत्।।1.70.5।।

சதானந்தரின் முன்னிலையில் இந்த வார்த்தைகளை ஜனக மன்னர் கூறியதுமே, அங்கே வந்து நின்ற சேவகர்களுக்கு, ஜனகர் கட்டளை பிறப்பித்தார்.

 

शासनात्तु नरेन्द्रस्य प्रययुश्शीघ्रवाजिभि:।
समानेतुं नरव्याघ्रं विष्णुमिन्द्राज्ञया यथा।।1.70.6।।

ஜனக மன்னரின் கட்டளைப் படி, இந்திரனின் ஆணைப்படி, அவனுடைய தம்பியாகிய உபேந்திரனை (விஷ்ணு) அழைத்து வருவது போல், குசத்வஜ மன்னரை அழைத்து வர, அவர்கள் குதிரை மீதேறிப் புறப்பட்டார்கள்.

 

साङ्काश्यां ते समागत्य ददृशुश्च कुशध्वजम्।
न्यवेदयन्यथावृत्तं जनकस्य च चिन्तितम्।।1.70.7।।

அந்தத் தூதுவர்கள் சாங்காஸ்யம் என்ற நகரை அடைந்து குசத்வஜ மன்னரைச் சந்தித்து, நடந்தவனவற்றையெல்லாம் விவரித்து, ஜனகமன்னரின் விருப்பத்தையும் எடுத்துரைத்தார்கள்.

 

तद्वृत्तं नृपति श्शृत्वा दूतश्रेष्ठैर्महाबलै:।
अज्ञायाऽथ नरेन्द्रस्य आजगाम कुशध्वज:।।1.70.8।।

ஜனக மன்னரின் வலிமை நிறைந்த விஸ்வாசமுள்ள தூதுவர்கள் சொன்னதைக் கேட்ட குசத்வஜ மன்னர், உடனே, ஜனகரின் கட்டளைப் படி மிதிலைக்கு வந்து சேர்ந்தார்

 

स ददर्श महात्मानं जनकं धर्मवत्सलम्।
सोऽभिवाद्य शतानन्दं राजानं चापि धार्मिकम्।।1.70.9।।

राजार्हं परमं दिव्यमासनं चाऽध्यरोहत।

அங்கே, தர்மத்தில் பெருவிருப்புக்கொண்ட ஜனக மன்னரையும், குரு சதானந்தரையும் மரியாதையுடன் வணங்கி, அரசருக்கேற்ற சிறந்த ஆசனத்தில் அமர்ந்தார்.

 

उपविष्टावुभौ तौ तु भ्रातरावतितेजसौ।।1.70.10।।
प्रेषयामासतुर्वीरौ मन्त्रिश्रेष्ठं सुदामनम्।

மிகுந்த தேஜஸ் உடைய அந்த இரண்டு சகோதரர்களும், அருகருகே அமர்ந்து, மந்திரிகளுள் சிறந்தவரான சுதாமனரைத் தசரதரிடம் இவ்வாறு கூறி அனுப்பினார்கள்.

 

गच्छ मन्त्रिपते शीघ्रमैक्ष्वाकुममितप्रभम्।।1.70.11।।
आत्मजैस्सह दुर्धर्षमानयस्व समन्त्रिणम्।

“மந்திரிகளின் தலைவரே! விரைவாகச் சென்று, அளவற்ற தேஜஸ் உடைய இக்ஷ்வாகு வம்சத்து அரசரான தசரதரை, அவரது அமைச்சர்களுடனும், தன் இரு புதல்வர்களுடனும், அழைத்து வாருங்கள்.”

 

औपकार्यां स गत्वा तु रघूणां कुलवर्धनम्।।1.70.12।।
ददर्श शिरसा चैनमभिवाद्येदमब्रवीत्।

சுதாமனரும், தசரதர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று , ரகு குலத்தை வளர்த்து வரும் தசரதரைக் கண்டு, தலை குனிந்து வணங்கி, இவ்வாறு கூறினார்.

 

अयोध्याधिपते वीर वैदेहो मिथिलाधिप:।।1.70.13।।
स त्वां द्रष्टुं व्यवसितस्सोपाध्यायपुरोहितम्।

“மகாவீரரான அயோத்தி மன்னரே! தங்களைத் தங்கள் குருமார்களுடனும், முதன்மைப் புரோகிதருடனும், விதேஹ மன்னர் பார்க்க விரும்புகிறார். “

 

मंत्रिश्रेष्ठवच श्शृत्वा राजा सर्षिगणस्तदा।।1.70.14।।
सबंधुरगमत्तत्र जनको यत्र वर्तते।

மந்திரிஸ்ரேஷ்டரின் வார்த்தைகளைக் கேட்ட தசரத மன்னர், ரிஷிகளுடனும், உறவினர்களுடனும், ஜனக மன்னர் காத்திருந்த இடத்தைச் சென்றடைந்தார்.

 

स राजा मन्त्रिसहित स्सोपाध्याय: सबान्धव:।।1.70.15।।
वाक्यं वाक्यविदां श्रेष्ठो वैदेहमिदमब्रवीत्।

பேச்சுத்திறமை மிக்க தசரதர், தனது அமைச்சர்களுடனும், உறவினர்களுடனும் அங்கு வந்து, விதேஹ மன்னரிடம் கூறினார்:

 

विदितं ते महाराज इक्ष्वाकुकुलदैवतम्।।1.70.16।।
वक्ता सर्वेषु कृत्येषु वसिष्ठो भगवानृषि:।

‘பேரரசே! பகவான் வசிஷ்டர் தான் இக்ஷ்வாகு குலத்தின் ஆன்மீக குரு என்பதையும், அவர் தான் எங்கள் சார்பில் பேசுவார் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

 

विश्वामित्राभ्यनुज्ञातस्सह सर्वैर्महर्षिभि:।।1.70.17।।
एष वक्ष्यति धर्मात्मा वसिष्ठो मे यथाक्रमम्।

அனைத்து மகரிஷிகளுடைய அனுமதியையும், விஸ்வாமித்திரரின் அனுமதியையும் பெற்றபின், வசிஷ்ட மகரிஷி என்னுடைய குலத்தைப் பற்றிக் கூறுவார்.”

एवमुक्त्वा नरश्रेष्ठे राज्ञां मध्ये महात्मनाम्।।1.70.18।।

तूष्णींभूते दशरथे वसिष्ठो भगवानृषि:।
उवाच वाक्यं वाक्यज्ञो वैदेहं सपुरोधसम्।।1.70.19।।

இவ்வாறு தசரத மன்னர் கூறியபின் பேச்சுத்திறமை மிக்க வசிஷ்டர், விதேஹ மன்னர் ஜனகரையும், அவருடைய புரோகிதர்களையும் பார்த்து இவ்வாறு கூறினார்:

 

अव्यक्तप्रभवो ब्रह्मा शाश्वतो नित्य अव्यय:।
तस्मान्मरीचि स्संजज्ञे मरीचे: काश्यप: सुत:।।1.70.20।।

“உருவமற்ற பரம்பொருள் தன்னை சாஸ்வதமான, அழிவற்ற பிரம்மனாகப் படைத்துக் கொண்டது. பிரம்மாவிடம் இருந்து மரீசியும், மரீசியிடம் இருந்து காஸ்யபரும் பிறந்தார்கள்.

 

विवस्वान् काश्यपाज्जज्ञे मनुर्वैवस्वत स्स्मृत:।
मनु: प्रजापति: पूर्वमिक्ष्वाकुस्तु मनोस्सुत:।।1.70.21।।

காஸ்யபருக்கு விவஸ்வானும், விவஸ்வானுக்கு மனுவும் பிறந்தனர். பிரஜாபதி என்றும், வைவஸ்வதன் என்றும் அழைக்கப்பட்ட மனுவின் புதல்வர் தான் இக்ஷ்வாகு.

 

तमिक्ष्वाकुमयोध्यायां राजानं विद्धि पूर्वकम्।
इक्ष्वाकोस्तु सुतश्श्रीमान् कुक्षिरित्येव विश्रुत:।।1.70.22।।

அந்த இக்ஷ்வாகு தான் அயோத்தியின் மூத்த அரசர். அவருடைய புதல்வர் தான் புகழ் பெற்ற குக்ஷி என்பவர்.

 

कुक्षेरथात्मज: श्रीमान् विकुक्षिरुदपद्यत।
विकुक्षेस्तु महातेजा बाण: पुत्र: प्रतापवान्।।1.70.23।।

குக்ஷியின் புதல்வர் விகுக்ஷி என்பவர். அவருடைய அறிவாற்றலும், வலிமையும் மிக்க புதல்வர் தான் பாணர் என்பவர்.

 

बाणस्य तु महातेजा अनरण्य: प्रतापवान्।
अनरण्यात्पृथुर्जज्ञे त्रिशङ्कुस्तु पृथोस्सुत:।।1.70.24।।

பாணரின் புதல்வர் மகாதேஜஸும் புகழும் உடைய அனரண்யர் என்பவர். அனரண்யரின் புதல்வர் ப்ருது. ப்ருதுவின் புதல்வர் திரிசங்கு.

 

त्रिशङ्कोरभवत्पुत्रो दुन्दुमारो महायशा:।
युवनाश्वसुतस्त्वासीन्मान्धाता पृथिवीपति:।।1.70.25।।

திரிசங்குவின் புகழ் பெற்ற புதல்வர் துந்துமாரர். அவருக்கு யுவனாஸ்வர் என்ற பெயரும் உண்டு. அந்த யுவனாஸ்வரின் புதல்வர் தான் மாந்தாதா என்னும் அரசர்.

 

मान्धातुस्तु सुत श्श्रीमान् सुसन्धिरुदपद्यत।
सुसन्धेरपि पुत्रौ द्वौ ध्रुवसन्धि: प्रसेनजित्।।1.70.26।।

மாந்தாதாவின் புதல்வர் செல்வச்செழிப்பு மிக்க சுசந்தி என்பவர். சுசந்திக்கு த்ருவசந்தி, ப்ரசேனஜித் என்ற இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.

 

यशस्वी ध्रुवसन्धेस्तु भरतो नाम नामत:।
भरतात्तु महातेजा असितो नाम जातवान्।।1.70.27।।

த்ருவசந்தியின் புதல்வர் புகழ் பெற்ற பரதர். அந்தப் பரதரின் புதல்வர் அசிதர்.

 

यस्यैते प्रतिराजान उदपद्यन्त शत्रव:।
हैहयास्तालजंघाश्च शूराश्च शशिबिन्दव:।।1.70.28।।
ஹைஹயர்கள், தாலஜங்கர்கள், சசிபிந்துக்கள் ஆகியோர் அசிதரின் பகைவர்கள் ஆனார்கள்.

 

तांस्तु स प्रतियुध्यन् वै युद्धे राजा प्रवासित:।
हिमवन्तमुपागम्य भृगुप्रस्रवणेऽवसत्।।1.70.29।।

असितोऽल्पबलो राजा मन्त्रिभिस्सहितस्तदा।

குறைந்த படைபலம் கொண்ட அசித மன்னர், அவர்களிடையே நடந்த போரில் தோல்வியடைந்து, அமைச்சர்களுடனும், ஆலோசகர்களுடனும், இமயமலைக்குச் சென்று அங்கே ப்ருகுப்ரஸ்ரவணம் என்ற இடத்தில் வசிக்கத் தொடங்கினார்.

 

द्वे चास्य भार्ये गर्भिण्यौ बभूवतुरिति श्रुतम्।।1.70.30।।
एका गर्भविनाशाय सपत्न्यै सगरं ददौ।

அசிதரின் இரு மனைவிகளும் கருவுற்றிருந்தார்கள். அவர்கள் இருவரும், மற்றவளின் கருவை அழிப்பதற்காக, ஒருவர் மற்றொருவரின் உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்து விட்டார்கள்.

 

तत श्शैलवरं रम्यं बभूवाभिरतो मुनि:।।1.70.31।।
भार्गवश्च्यवनो नाम हिमवन्तमुपाश्रित:।

அந்தக் காலத்தில், ப்ருகு வம்சத்தில் பிறந்த ச்யவனர் என்பவர் அழகிய இமயமலையில் வசிக்க விரும்பினார்.

 

तत्रैका तु महाभागा भार्गवं देववर्चसम्।।1.70.32।।
ववन्दे पद्मपत्राक्षी काङ्क्षन्ती सुतमात्मन:।

அந்த இருவரில் ஒரு அரசி, தேவர்களைப் போன்ற ஒளியுடைய ச்யவனரை அணுகித் தனக்கு நல்லபடியாக மகன் பிறக்க ஆசீர்வதிக்க வேண்டி, அவரை வணங்கினாள்.

तमृषिं साऽभ्युपागम्य कालिंदी चाभ्यवादयत्।।1.70.33।।
स तामभ्यवदद्विप्र: पुत्रेप्सुं पुत्रजन्मनि।

காளிந்தி என்ற பெயருடைய அவள், அந்த ரிஷியை வணங்கித் தனக்குப் புதல்வன் பிறப்பதைப் பற்றி அவரிடம் கேட்டாள்.

 

तव कुक्षौ महाभागे सुपुत्रस्सुमहाबल:।।1.70.34।।

महावीर्यो महातेजा अचिरात्सञ्जनिष्यति।
गरेण सहित श्श्रीमान् मा शुच: कमलेक्षणे।।1.70.35।।

“மகாபாக்கியசாலியே! உன்னுடைய கர்ப்பத்தில் இருந்து மகாபலசாலியாகவும், மகா தேஜஸ் உடையவனாகவும் ஒரு புதல்வன், விஷத்துடனேயே, விரைவில் பிறப்பான். கவலைப்படாதே!” என்று அவர் கூறினார்.


च्यवनं तु नमस्कृत्य राजपुत्री पतिव्रता।
पतिशोकातुरा तस्मात्पुत्रं देवी व्यजायत।।1.70.36।।

தனது கணவனை இழந்த சோகத்திலிருந்த அந்த மூத்த அரசி, ச்யவனரின் ஆசியால் ஒரு புதல்வனைப் பெற்றெருத்தாள்.

 

सपत्न्या तु गरस्तस्यै दत्तो गर्भजिघांसया।
सह तेन गरेणैव जात: स सगरोऽभवत्।।1.70.37।।

அவளுடைய சக்களத்தியால் விஷம் கொடுக்கப்பட்டதால், அந்த விஷத்துடனேயே பிறந்த அந்தக் குழந்தை ‘சகரன்’ என்று அழைக்கப்பட்டான். (கரம் என்றால் விஷம். சகரன் என்றால், விஷத்துடன் கூடியவன்,)


सगरस्यासमञ्जस्तु असमञ्जात्तथांऽशुमान्।
दिलीपोंऽशुमत: पुत्रो दिलीपस्य भगीरथ:।।1.70.38।।

भगीरथात्ककुत्स्थश्च ककुत्स्थस्य रघुस्सुत:।

அந்தச் சகர மன்னனின் புதல்வன் அஸமஞ்சஸ். அஸமஞ்சஸின் புதல்வன் அம்சுமான். அம்சுமானின் புதல்வன் பகீரதன்.


रघोस्तु पुत्रस्तेजस्वी प्रवृद्ध: पुरुषादक:।।1.70.39।।
कल्माषपादो ह्यभवत्तस्माज्जातस्तु शंखण:।

பகீரதனின் புதல்வன் ககுஸ்தன். ககுஸ்தனின் புதல்வன் ரகு. ரகுவின் புதல்வனாகிய ப்ரவ்ருத்தன், தேஜஸ்வியாயிருந்தும், குரு வசிஷ்டரின் சாபத்தால் நர மாமிசம் உண்பவனாகவும், கருப்பான பாதங்கள் உடையவனாகவும் ஆனான். ப்ரவ்ருத்தனுக்கு சங்கணன் என்ற புதல்வன் பிறந்தான்.

 

सुदर्शन: शङ्घणस्य अग्निवर्ण स्सुदर्शनात्।।1.70.40।।

शीघ्रगस्त्वग्निवर्णस्य शीघ्रगस्य मरु स्सुत:।
मरो: प्रशुश्रुकस्त्वासीदम्बरीष: प्रशुश्रृकात्।।1.70.41।।

சங்கணனின் புதல்வன் சுதர்சனன். சுதர்சனனின் புதல்வன் அக்னிவர்ணன். அக்னிவர்ணனின் புதல்வன் சீக்ரகன். சீக்ரகனின் புதல்வன் மரு. மருவின் புதல்வன்

ப்ரசுஸ்ருகன். ப்ரசுஸ்ருகனின் புதல்வன் அம்பரீசன்.

 

अम्बरीषस्य पुत्रोऽभून्नहुष: पृथिवीपति:।
नहुषस्य ययातिस्तु नाभागस्तु ययातिज:।।1.70.42।।

அம்பரீசனுக்கு நகுஷன் என்ற புதல்வன் பிறந்தான். நகுஷனின் புதல்வன் யயாதி. யயாதியின் புதல்வன் நாபாகன்.

 

नाभागस्य बभूवाज: अजाद्दशरथोऽभवत्।
अस्माद्दशरथाज्जातौ भ्रातरौ रामलक्ष्मणौ।।1.70.43।।

நாபாகனின் புதல்வன் அஜன். அஜனின் புதல்வனான தசரதன் தான் ராம லக்ஷ்மணரின் தந்தையார்.

आदिवंशविशुद्धानां राज्ञां परमधर्मिणाम्।
इक्ष्वाकुकुलजातानां वीराणां सत्यवादिनाम्।।1.70.44।।

रामलक्ष्मणयोरर्थे त्वत्सुते वरये नृप।
सदृशाभ्यां नृपश्रेष्ठ सदृशे दातुमर्हसि।।1.70.45।।

மனிதருள் சிறந்தவரே! இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த, தூய்மையும், தர்மமும், வீரமும் நிறைந்த ராம லக்ஷ்மணர்கள், அதே அளவு சிறப்புள்ள தங்களது இரு புதல்விகளையும், தங்கள் மனைவிகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களைத் தயை கூர்ந்து ராம லக்ஷ்மணர்களுக்குத் திருமணம் செய்து கொடுங்கள்.”

 

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे सप्ततितमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  எழுபதாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

 

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 69

(தனது சேனை பின் தொடர, தசரத மன்னர் அயோத்தியில் பிரவேசிக்கிறார். ஜனக மன்னர் அவருக்கு மரியாதை செய்கிறார்.)

ततो रात्र्यां व्यतीतायां सोपाध्याय: सबान्धव:।
राजा दशरथो हृष्ट स्सुमन्त्रमिदमब्रवीत्।।1.69.1।।

அந்த இரவு கழிந்த பின்னர், ஆன்மீக குருமார்களும், உறவினர்களும், உடன் இருக்க, தசரதர் மிகுந்த மகிழ்ச்சியுடன் சுமந்திரரிடம் இவ்வாறு கூறினார்:

 

अद्य सर्वे धनाध्यक्षा धनमादाय पुष्कलम्।
व्रजन्त्वग्रे सुविहिता नानारत्नसमन्विता:।।1.69.2।।

“பொக்கிஷ அதிகாரிகள் யாவரும், நிறைய செல்வத்தையும், பலவிதமான ரத்தினங்களையும் எடுத்துக் கொண்டு, முன்னே செல்லுங்கள்.

 

चतुरङ्गबलं चापि शीघ्रं निर्यातु सर्वश:।
ममज्ञासमकालं च यानयुग्यमनुत्तमम्।।1.69.3।।

நால்வகைப் படைகளும், என் கட்டளை கிடைத்த உடனேயே, மிகச் சிறந்த பல்லக்குகளுடன்,  நான்கு திசைகளில் இருந்தும் புறப்படட்டும்.

 

वसिष्ठो वामदेवश्च जाबालिरथ काश्यप:।
मार्कण्डेयश्च दीर्घायु:ऋषि: कात्यायनस्तथा।।1.69.4।।

एते द्विजा: प्रयान्त्वग्रे स्यन्दनं योजयस्व मे।
यथा कालात्ययो न स्या द्दूता हि त्वरयन्ति माम्।।1.69.5।।

வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், நீண்ட ஆயுளைக்கொண்ட மார்க்கண்டேயர், காத்யாயனர் ஆகிய அந்தணர்கள் முன்பே புறப்பட்டுச் செல்லட்டும். என்னுடைய தேரைப் பூட்டித் தயார் நிலையில் வைத்திருங்கள். தாமதம் செய்யாதீர்கள். வந்திருக்கும் தூதுவர்கள் விரைவாக வரச்சொல்லி வேண்டுகிறார்கள். “

 

वचनात्तु नरेन्द्रस्य सा सेना चतुरङ्गिणी।
राजानमृषिभि स्सार्धं व्रजन्तं पृष्ठतोऽन्वगात्।।1.69.6।।

தசரத மன்னர் தந்து குருமார்களான ரிஷிகளுடன் புறப்பட்டவுடனே, அவருடைய நால்வகைப் படைகளும், அவருடைய கட்டளைப் படி அவரைப் பின் தொடர்ந்து சென்றன.

 

गत्वा चतुरहं मार्गं विदेहानभ्युपेयिवान्।
राजा तु जनक श्श्रीमान् श्श्रुत्वा पूजामकल्पयत्।।1.69.7।।

நான்கு நாட்கள் பயணித்து, இவர்கள் அனைவரும் விதேஹ நாட்டைச் சென்றடைந்தார்கள். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஜனக மன்னர், அவர்களை மிகவும் மரியாதையுடன் பூஜித்து வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

 

ततो राजानमासाद्य वृद्धं दशरथं नृपम्।
जनको मुदितो राजा हर्षं च परमं ययौ।।1.69.8।।

ஜனக மன்னர் வயது முதிர்ந்த தசரத மன்னரைச் சந்தித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

 

उवाच च नरश्रेष्ठो नरश्रेष्ठं मुदाऽन्वित:।
स्वागतं ते महाराज दिष्ट्या प्राप्तोऽसि राघव।।1.69.9।।

पुत्रयोरुभयो: प्रीतिं लप्स्यसे वीर्यनिर्जिताम्।

மனிதருள் சிறந்தவரான ஜனக மன்னர் தசரதரைப் பார்த்து, “ ரகு குலத்தில் பிறந்தவரே! பேரரசரே! தங்கள் வரவு நல்வரவாகுக! தாங்கள் இங்கு வந்திருப்பது என்னுடைய பாக்கியம். தங்கள் குமாரர்களின் வீரத்தால் அவர்களுக்குக் கிடைக்கப் போகும் பரிசினைப் பார்த்துத் தாங்கள் மகிழ்வீர்கள்.

 

दिष्ट्या प्राप्तो महातेजा वसिष्ठो भगवानृषि:।।1.69.10।।

सह सर्वैर्द्विजश्रेष्ठैर्देवैरिव शतक्रतु:।

நான் செய்த பாக்கியத்தால், மஹா தேஜஸ் உடைய வசிஷ்ட மகரிஷியும் , பிற அந்தண ஸ்ரேஷ்டர்களுடன், தேவேந்திரன் பிற தேவர்களுடன் வந்திருப்பதைப் போல் வந்திருக்கிறார்.

 

दिष्ट्या मे निर्जिता विघ्ना दिष्ट्या मे पूजितं कुलम्।।1.69.11।।
राघवै स्सह सम्बन्धाद्वीर्यश्रेष्ठैर्महात्मभि:।

கடவுள் அருளால், என்னுடைய தடைகள் அனைத்தும் நீங்கி விட்டன. ரகு வம்சத்தில் பிறந்த மிகச் சிறந்த வீரர்களான  ராம லக்ஷ்மணர்களுடன் ஏற்படப் போகும் திருமண பந்தத்தால் என் குலத்துக்குப் பெருமை சேர்ந்துள்ளது.

 

श्व: प्रभाते नरेन्द्रेन्द्र निर्वर्तयितुमर्हसि।।1.69.12।।
यज्ञस्यान्ते नरश्रेष्ठ विवाहमृषिसम्मतम्।

மனிதருள் சிறந்தவரே! நாளைக் காலை, வேள்வி முழுமை பெற்றவுடனேயே, ரிஷிகளின் சம்மதத்துடன், இந்தத் திருமணத்தை நடத்தி விடுங்கள். “

 

तस्य तद्वचनं श्रुत्वा ऋषिमध्ये नराधिप:।।1.69.13।।
वाक्यं वाक्यविदां श्रेष्ठ: प्रत्युवाच महीपतिम्।

ஜனகரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட  தசரத மன்னர்

ரிஷிகளுக்கு மத்தியில் இவ்வாறு கூறினார்:

 

प्रतिग्रहो दातृवश श्श्रृतमेतन्मया पुरा।।1.69.14।।
यथा वक्ष्यसि धर्मज्ञ तत्करिष्यामहे वयम्।

தர்மாத்மாக்களிடம் இருந்து பரிசினைப் பெற்றுக்கொள்வது இன்பத்தைக் தரும் என்று பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். தாங்கள் எவ்வாறு சொல்கிறீர்களோ, அப்படியே செய்கிறோம்.”

 

धर्मिष्ठं च यशस्यं च वचनं सत्यवादिन:।।1.69.15।।
श्रुत्वा विदेहाधिपति: परं विस्मयमागत:।।

சத்யவாதியும், தர்மிஷ்டரும், புகழுக்குரியவருமான தசரதரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட ஜனகமன்னர் மிகவும் வியப்படைந்தார்.

 

तत स्सर्वे मुनिगणा: परस्परसमागमे।1.69.16।
हर्षेण महता युक्तास्तां निशामवसन् सुखम्।।

பின்னர், அந்த இரவை, முனிவர்கள் அனைவரும், ஒருவருடன் ஒருவர் அளவளாவிக்கொண்டு, மகிழ்ச்சியாகக் கழித்தார்கள்.

 

राजा च राघवौ पुत्रौ निशाम्य परिहर्षित:।।1.69.17।।
उवास परमप्रीतो जनकेन सुपूजित:।

தனது புதல்வர்களான ராமலக்ஷ்மணர்களைக் கண்ட தசரதமன்னர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஜனக மன்னரால் சிறந்த முறையில் கௌரவிக்கப் பட்டதால், மிக்க திருப்தி அடைந்தவராய், அந்த இரவைக் கழித்தார்.

 

जनकोऽपि महातेजा: क्रियां धर्मेण तत्त्ववित्।।1.69.18।।
यज्ञस्य च सुताभ्यां च कृत्वा रात्रिमुवास ह ।

மகாதேஜஸ் உடையவரும்,  சாஸ்திரத்தை நன்கு அறிந்தவருமான ஜனகர், தன் வேள்விக்காகவும், தன் இரு புதல்விகளுக்காகவும், செய்ய வேண்டிய சடங்குகளை இரவிலேயே முடித்து விட்டார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे एकोनसप्ततितमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  அறுபத்தொன்பதாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

 

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 68

(ஜனகமன்னரிடம் இருந்து வந்த செய்தியைக் கேட்டு, அயோத்தி  மன்னர் தசரதர் தனது மந்திரிகளுடன், மிதிலைக்கு வந்து சேருகிறார்.)


जनकेन समादिष्टा दूतास्ते क्लान्तवाहना:।
त्रिरात्रमुषिता मार्गे तेऽयोध्यां प्राविशन् पुरीम्।।1.68.1।।

ஜனகரின் கட்டளைப் படி, அந்தத் தூதுவர்கள் மூன்று நாட்கள் பகலில் பயணித்து, மூன்று இரவுகள் அங்கங்கே தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு, ஓடிக் களைத்த குதிரைகளுடன் அயோத்தி நகரில் பிரவேசித்தனர்.

 

राज्ञो भवनमासाद्य द्वारस्थानिदमब्रुवन्।
शीघ्रं निवेद्यतां राज्ञे दूतान्नो जनकस्य च।।1.68.2।।

அரசருடைய அரண்மனையை அடைந்து, அங்கிருந்த வாயிற் காப்போர்களிடம், “ஜனக மன்னரிடம் இருந்து தூதுவர்கள் வந்திருக்கிறார்கள் என்று உடனே மன்னரிடம் சென்று கூறவும்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

 

इत्युक्ता द्वारपालास्ते राघवाय न्यवेदयन्।
ते राजवचनाद्दूता राजवेश्मप्रवेशिता:।

ददृशुर्देवसङ्काशं वृद्धं दशरथं नृपम्।।1.68.3।।

அவர்கள் அவ்வாறு கூறியதைக் கேட்ட வாயிற்காப்போர்கள் உடனே தசரதருக்கு அந்த செய்தியைச் சொல்லவும், தசரதரின் கட்டளைப்படி, அந்தத் தூதுவர்களை அரசவைக்கு அழைத்துச் சென்றனர். அந்தத் தூதுவர்கள் , ஒரு தேவரைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்த, வயது முதிர்ந்த தசரத மன்னரை அங்கே, கண்டனர்.

 

बद्धाञ्जलिपुटा स्सर्वे दूता विगतसाध्वसा:।
राजानं प्रयता वाक्यमब्रुवन्मधुराक्षरम्।।1.68.4।।

அந்தத் தூதர்கள் அனைவரும், கைகளைக் கூப்பிக் கொண்டு, மன மகிழ்ச்சியுடனும், மரியாதையுடனும், அரசரிடத்தில் இனிமையான வார்த்தைகளில் இவ்வாறு கூறினார்கள்:

 

मैथिलो जनको राजा साग्निहोत्रपुरस्कृतम् ।
कुशलं चाव्ययं चैव सोपाध्यायपुरोहितम्।।1.68.5।।

मुहुर्मुहुर्मधुरया स्नेहसंयुक्तया गिरा।
जनकस्त्वां महाराज पृच्छते सपुरस्सरम्।।1.68.6।।

“பேரரசரே! மிதிலையின் தலைவரான ஜனக மன்னர், தூய வேள்வித்தீயின் முன் நின்று கொண்டு, இனிமையும், அன்பும் நிறைந்த சொற்களால், தங்களுடைய நலத்தையும், தங்கள் ஆன்மீக குருமார்கள் மற்றும் புரோகிதர்களுடைய நலத்தையும், மீண்டும், மீண்டும் விசாரிக்கிறார்.

 

पृष्ट्वा कुशलमव्यग्रं वैदेहो मिथिलाधिप:।
कौशिकानुमते वाक्यं भवन्तमिदमब्रवीत्।।1.68.7।।

மிதிலையின் தலைவரான ஜனக மன்னர், தங்கள் நலத்தை விசாரித்த பின்னர், கௌசிக விஸ்வாமித்திரரின் அனுமதியுடன் தங்களுக்கு இந்தச் செய்தியைத் தெரிவிக்கிறார்.

 

पूर्वं प्रतिज्ञा विदिता वीर्यशुल्का ममात्मजा।
राजानश्च कृतामर्षानिर्वीर्या विमुखीकृता:।।1.68.8।।

“அரசே! முன்பே, என் மகள் சீதையை வீரச்செயல் செய்வோருக்குப் பரிசாகத் திருமணம் செய்து கொடுப்பதாக அறிவித்திருந்தேன். பல மன்னர்கள் தங்கள் வீரத்தை நிரூபிக்க முடியாமல், ஏமாற்றமடைந்து என்னை எதிர்த்தார்கள்.

 

सेयं मम सुता राजन् विश्वामित्रपुरस्सरै:।
यदृच्छयागतैर्वीरैर्निर्जिता तव पुत्रकै:।।1.68.9।।

“அரசே! அப்படிப் பட்ட என் மகள் சீதையை, எதிர்பாராமல், விஸ்வாமித்திரரைப் பின் தொடர்ந்து மிதிலைக்கு வந்த தங்களது புதல்வன் வென்றிருக்கிறான்.

 

तच्च राजन् धनुर्दिव्यं मध्ये भग्नं महात्मना।
रामेण हि महाराज महत्यां जनसंसदि।।1.68.10।।

“பேரரசே! சபையோர் முன்னிலையில், எல்லையற்ற புகழ் வாய்ந்த சிவனுடைய வில்லானது மத்தியில் உடைக்கப்பட்டது.“

 

अस्मै देया मया सीता वीर्यशुल्का महात्मने।
प्रतिज्ञां कर्तुमिच्छामि तदनुज्ञातुमर्हसि।।1.68.11।।

அந்த வீரத்துக்குப் பரிசாக, சீதையை ராமனுக்கு மணமுடித்துக் கொடுத்து, எனது வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்ளத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்.”

 

सोपाध्यायो महाराज पुरोहितपुरस्सर:।
शीघ्रमागच्छ भद्रं ते द्रष्टुमर्हसि राघवौ ।।1.68.12।।

“பேரரசே! தாங்கள் தங்கள் குருமார்களுடனும், புரோகிதர்களுடனும், விரைந்து மிதிலைக்கு வந்து, ராம லக்ஷ்மணர்களைக் காண வேண்டும். தங்களுக்கு நன்மை உண்டாகட்டும்!”

 

प्रीतिं च मम राजेन्द्र निर्वर्तयितुमर्हसि।
पुत्रयोरुभयोरेव प्रीतिं त्वमपि लप्स्यसे।।1.68.13।।

“அரசர்களுக்குள் இந்திரன் போன்றவரே! இதனால் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன், தங்கள் புதல்வர்களைக் கண்டு, தாங்களும், மகிழ்ச்சி அடைவீர்கள்.”

 

एवं विदेहाधिपतिर्मधुरं वाक्यमब्रवीत्।।1.68.14।।

विश्वामित्राभ्यनुज्ञात श्शतानन्दमते स्थित:।
इत्युक्त्वा विरता दूता राजगौरवशङ्किता:।।1.68.15।।

விதேஹ மன்னர் ஜனகர், விஸ்வாமித்திரரின் கட்டளைப் படியும், தன் குருவாகிய சதானந்தரின் அனுமதியுடனும், இவ்வாறு இனிமையான சொற்களைத் தங்களிடம் கூறச் சொன்னார்” என்று கூறி, அந்தத் தூதர்கள், பயம் கலந்த மரியாதையுடன் தங்கள் செய்தியைச் சொல்லி முடித்தார்கள்.

 

दूतवाक्यं च तच्छ्रुत्वा राजा परमहर्षित:।
वसिष्ठं वामदेवं च मन्त्रिणोऽन्यांश्च सोऽब्रवीत्।।1.68.16।।

தூதுவர்களின் சொற்களைக் கேட்டு, மிகவும் மகிழ்ந்த தசரத மன்னர், வசிஷ்டரிடமும், வாமதேவரிடமும், பிற அமைச்சர்களிடமும், கூறினார்:

 

गुप्त: कुशिकपुत्रेण कौसल्यानन्दवर्धन:।
लक्ष्मणेन सह भ्रात्रा विदेहेषु वसत्यसौ।।1.68.17।।

“கௌசல்யையின் ஆனந்தத்தை அதிகரிக்கச் செய்யும், ராமன், தன் தம்பியான லக்ஷ்மணனுடன், விஸ்வாமித்திரரின் பாதுகாப்பில் விதேஹ தேசத்தில் இருக்கிறான்.

 

दृष्टवीर्यस्तु काकुत्स्थो जनकेन महात्मना।
सम्प्रदानं सुतायास्तु राघवे कर्तुमिच्छति।।1.68.18।।

காகுஸ்தனான ராமனின் வீரச் செயலைப் பார்த்து, ஜனக மன்னர், தனது மகளை ராமனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறார்.

 

यदि वो रोचते वृत्तं जनकस्य महात्मन:।
पुरीं गच्छामहे शीघ्रं मा भूत्कालस्य पर्यय:।।1.68.19।।

ஜனகரின் வேண்டுகோளைத் தாங்கள் அனுமதித்தால்,  நேரத்தை வீணாக்காமல், விரைந்து மிதிலைக்குச் செல்வோம்!”

 

मन्त्रिणो बाढमित्याहु: सह सर्वैर्महर्षिभि:।
सुप्रीतश्चाब्रवीद्राजा श्वो यात्रेति स मन्त्रिण:।।1.68.20।।

அனைத்து மகரிஷிகளும், அமைச்சர்களும், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறியவுடன், மிகவும் மகிழ்ந்த தசரத மன்னர், “நாளை மிதிலைக்குப் புறப்படுவோம்” என்று கூறினார்.

 

मन्त्रिणस्तु नरेन्द्रस्य रात्रिं परमसत्कृता:।
ऊषु स्तेमुदिता स्सर्वे गुणै स्सर्वैस्समन्विता:।।1.68.21।।

தசரத மன்னரின் நற்குணங்கள் பொருந்திய அமைச்சர்கள், மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த இரவைக் கழித்தனர். 


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे अष्टषष्टितमस्सर्ग:।।Thus ends

 

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  அறுபத்தெட்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...