Sunday, 4 February 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 71

(ஜனகர் தன்னுடைய குலத்தின் வரலாறைக் கூறுகிறார். பின்னர், சீதையையும், ஊர்மிளையையும், முறையே ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும், திருமணம் செய்து கொடுக்கச் சம்மதிக்கிறார்.)



एवं ब्रुवाणं जनक: प्रत्युवाच कृताञ्जलि:।
श्रोतुमर्हसि भद्रं ते कुलं न: परिकीर्तितम्।।1.71.1।।

வசிஷ்டர் தசரதரின் குலவரலாற்றைக் கூறி முடித்ததும், கைகளைக்கூப்பிக்கொண்டு, “ தங்களுக்கு  நன்மை உண்டாகட்டும்! எங்களுடைய குலத்தின் வரலாற்றை இப்போது கூறுகிறேன், கேளுங்கள்.

 

प्रदाने हि मुनिश्रेष्ठ कुलं निरवशेषत:।
वक्तव्यं कुलजातेन तन्निबोध महामुने।।1.71.2।।

முனிஸ்ரேஷ்டரே! ஒரு நல்ல குலத்தில் பிறந்த ஒருவர் தனது மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் போது, தனது வம்சத்தின் வரலாற்றைக் கூறவேண்டும். ஆகவே, அதைக் கூறுகிறேன், கேளுங்கள்!”

 

राजाऽभूत् त्रिषु लोकेषु विश्रुत स्स्वेन कर्मणा।
निमि: परमधर्मात्मा सर्वसत्त्ववतां वर:।।1.71.3।।

மிகவும் பலசாலியும், தனது செயல்களினால், மூன்று உலகங்களிலும் புகழ் பெற்றவரும், பரம தர்மாத்மாவுமான நிமி என்ற அரசர் ஒருவர் இருந்தார்.

तस्य पुत्रोमिथिर्नाम मिथिला येन निर्मिता।
प्रथमो जनको नाम जनकादप्युदावसु:।।1.71.4।।

அவருடைய புதல்வர் மிதி என்பவர். அவர் உருவாக்கிய இந்த  நகரம் மிதிலை எனப்பட்டது. அவர் தான் முதலில் ஜனகர் எனப்பட்டவர். அவருடைய புதல்வர் உதாவசு என்பவர்.

 

उदावसोस्तु धर्मात्मा जातो वै नन्दिवर्धन:।
नन्दिवर्धनपुत्रस्तु सुकेतुर्नाम नामत:।।1.71.5।।

தர்மாத்மாவான உதாவசுவின் புதல்வர் நந்தி வர்த்தனர் என்பவர். நந்தி வர்த்தனரின் புதல்வர் சுகேது.

 

सुकेतोरपि धर्मात्मा देवरातो महाबल:।
देवरातस्य राजर्षेर्बृहद्रथ इति स्मृत:।।1.71.6।।

சுகேதுவின் புதல்வர் தர்மாத்மாவான தேவரதர். தேவரதரின் புதல்வர்ப்ருஹத்ரதர் என்பவர்.

 

बृहद्रथस्य शूरोऽभून्महावीर: प्रतापवान्।
महावीरस्य धृतिमान् सुधृतिस्सत्यविक्रम:।।1.71.7।।

ப்ருஹத்ரதரின் புதல்வர் வீரம் நிறைந்த மகாவீரர். மகாவீரருடைய புதல்வர், தைரியம் நிறைந்த சத்தியவிக்ரமரான சுத்ருதி என்பவர்.

 

सुधृतेरपि धर्मात्मा दृष्टकेतुस्सुधार्मिक:।
दृष्टकेतोस्तु राजर्षेर्हर्यश्व इति विश्रुत:।।1.71.8।।

சுத்ருதிக்கு த்ருஷ்டகேது என்னும் தர்மாத்மாவான புதல்வர்

பிறந்தார். ராஜரிஷியான த்ருஷ்டகேதுவுக்கு ஹர்யஸ்வர் என்னும் புதல்வர் பிறந்தார்.

हर्यश्वस्य मरु: पुत्रो मरो: पुत्र: प्रतिन्धक:।
प्रतिंधकस्य धर्मात्मा राजा कीर्तिरथस्सुत:।।1.71.9।।

ஹர்யவசுவின் புதல்வராக மருவும், மருவின் புதல்வராக

ப்ரதிந்தகரும், ப்ரதிந்தகரின் புதல்வராக

கீர்த்திரதரும் பிறந்தார்கள்.

 

पुत्र: कीर्तिरथस्यापि देवमीढ इति स्मृत:।
देवमीढस्य विबुधो विबुधस्य महीध्रक:।।1.71.10।।

கீர்த்திரதரின் புதல்வர் தேவமீடர் என்று அறியப்பட்டார். தேவமீடரின் புதல்வர் விபுதர்; விபுதரின் புதல்வர் மஹீத்ரகர்.

 

महीध्रकसुतो राजा कीर्तिरातो महाबल:।
कीर्तिरातस्य राजर्षेर्महारोमा व्यजायत।।1.71.11।।

மஹீத்ரகரின் புதல்வர் பலம் பொருந்திய கீர்த்திராதர். ராஜரிஷியான கீர்த்திராதரின் புதல்வர் மஹாரோமா எனப்பட்டவர்.

 

महारोम्णस्तु धर्मात्मा स्वर्णरोमा व्यजायत।
स्वर्णरोम्णस्तु राजर्षेर्ह्रस्वरोमा व्यजायत।।1.71.12।।

மஹாரோமாவுக்கு தர்மாத்மாவான ஸ்வர்ணரோமாவும், ஸ்வர்ணரோமாவுக்கு ஹ்ரஸ்வரோமாவும் புதல்வர்களாகப் பிறந்தார்கள்.

 

तस्य पुत्रद्वयं जज्ञे धर्मज्ञस्य महात्मन:।
ज्येष्ठोऽहमनुजो भ्राता मम वीर: कुशध्वज:।।1.71.13।।

தர்மத்தை நன்கு அறிந்தவரான ஹ்ரஸ்வரோமாவின் இரு புதல்வர்களில், நான் மூத்தவன். என்னுடைய தம்பி, வீரம் பொருந்திய குசத்வஜன்.

मां तु ज्येष्ठं पिता राज्ये सोऽभिषिच्य नराधिप:।
कुशध्वजं समावेश्य भारं मयि वनं गत:।।1.71.14।।

என்னுடைய தந்தையாரான ஹ்ரஸ்வரோமா, மூத்தவனான எனக்கு ராஜ்யாபிஷேகம் செய்வித்து விட்டு, எனது தம்பியை எனக்குத் துணையாக இருக்கும் படி வைத்து விட்டு, வனத்துக்குச் சென்றுவிட்டார்.

 

वृद्धे पितरि स्वर्याते धर्मेण धुरमावहम्।
भ्रातरं देवसङ्काशं स्नेहात्पश्यन् कुशध्वजम्।।1.71.15।।

எனது தந்தையார் வயது முதிர்ந்த நிலையில் ஸ்வர்க்கத்துக்குச் சென்ற பின்னர், என்னுடைய தேவர்களுக்கு நிகரானவனாகிய தம்பி குசத்வஜனை, அன்புடன் காத்து, இந்த நாட்டை தர்மப்படி ஆண்டு வருகிறேன்.

 

कस्य चित्त्वथकालस्य साङ्काश्यादगमत्पुरात्।
सुधन्वा वीर्यवान्राजा मिथिलामवरोधक:।।1.71.16।।

சிறிது காலத்துக்குப் பிறகு சுதன்வா என்னும் வலிமை பொருந்திய மன்னன் சங்காஸ்யம் என்னும் நகரிலிருந்து  மிதிலையை முற்றுகையிட்டான்.

 

स च मे प्रेषयामास शैवं धनुरनुत्तमम्।
सीता कन्या च पद्माक्षी मह्यं वै दीयतामिति।।1.71.17।।

அவன், சிவபெருமானுடைய வில்லையும், தாமரையைப் போன்ற கண்களுடைய சீதையையும் அவனுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று செய்தி அனுப்பினான்.

 

तस्याप्रदानाद्ब्रह्मर्षे युद्धमासीन्मया सह।
स हतोऽभिमुखो राजा सुधन्वा तु मया रणे।।1.71.18।।

பிரம்மரிஷியே! நான் அவன் கேட்டவற்றைக் கொடுக்க மறுத்ததால், அவன் என் மேல் போர் தொடுத்தான். அந்தப் போரில், சுதன்வா என்னால் கொல்லப்பட்டான்.

 

निहत्य तं मुनिश्रेष्ठ सुधन्वानं नराधिपम्।
साङ्काश्ये भ्रातरं वीरमभ्यषिञ्चं कुशध्वजम्।।1.71.19।।

முனிஸ்ரேஷ்டரே! சுதன்வாவைப் போரில் மாய்த்த பிறகு, என்னுடைய தம்பியாகிய குசத்வஜனுக்கு, சாங்காஸ்யம் என்ற அவனுடைய நாட்டுக்கு அரசனாகப் பட்டம் சூட்டிவிட்டேன்.

 

कनीयानेष मे भ्राता अहं ज्येष्ठो महामुने।
ददामि परमप्रीतो वध्वौ ते मुनिपुङ्गव।।1.71.20।।

सीतां रामाय भद्रं ते ऊर्मिला लक्ष्मणाय च।

மகாமுனிவரே! இவன் என்னுடைய தம்பி. நான் அவனுக்கு மூத்தவன். முனிபுங்கவரே! மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் சீதையை ராமனுக்கும், ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கும் திருமணம் செய்து கொடுக்கிறேன். தங்களுக்கு நன்மை உண்டாகட்டும்!”

 

वीर्यशुल्कां मम सुतां सीतां सुरसुतोपमाम् ।।1.71.21।।
द्वितीयामूर्मिलां चैव त्रिर्ददामि न संशय:।

 (ராம லக்ஷ்மணர்களுடைய) வீரத்துக்குப் பரிசாக, தேவர்களின் புதல்வி போன்ற என் மகள் சீதையை ராமனுக்கும், என் இளைய மகள் ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கும் திருமணம் செய்து கொடுப்பதாக மூன்று முறை அறிவிக்கிறேன்.

 

ददामि परमप्रीतो वध्वौ ते रघुनन्दन।।1.71.22।।
रामलक्ष्मणयो राजन् गोदानं कारयस्व ह।

पितृकार्यं च भद्रं ते ततो वैवाहिकं कुरु।।1.71.23।।

ரகு நந்தனரே! (தசரதரும் ரகு வம்சத்தில் பிறந்திருப்பதால், அவருக்கும் அந்தப் பெயர் உண்டு.) இந்த மணப்பெண்களை, மிகுந்த மகிழ்ச்சியுடன் ராம லக்ஷ்மணர்களுக்குக் கொடுக்கிறேன். தங்கள் பித்ருக்களுக்காகச் செய்ய வேண்டிய கோதானத்தைத் தாங்கள் செய்யுங்கள். தங்களுக்கு நன்மை உண்டாகட்டும். அதன் பின்னர் இந்தத் திருமணத்தைத் தாங்கள் நடத்தலாம்.

 

मखा ह्यद्य महाबाहो तृतीये दिवसे प्रभो।
फल्गुन्यामुत्तरे राजंस्तस्मिन्वैवाहिकं कुरु।।1.71.24।।

रामलक्ष्मणयो राजन् दानं कार्यं सुखोदयम् ।।

வலிமையான கரங்களுடைய அரசரே! இன்று மக நக்ஷத்திரம். இன்றிலிருந்து மூன்றாம் நாள், உத்திர நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் திருமணத்தை நடத்தலாம். ராம லக்ஷ்மணர்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய வகையில் நிறைய தானமும் செய்யலாம்.

 
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे एकसप्ततितमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  எழுபத்து ஒன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...