ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 20
(தசரதர் ராமனை அனுப்ப
மறுத்ததும், விஸ்வாமித்திரர் மிகவும் கோபம் கொள்கிறார்.)
तच्छ्रुत्वा
राजशार्दूलो विश्वामित्रस्य भाषितम्।
मुहूर्तमिव निस्संज्ञस्संज्ञावानिदमब्रवीत्।।1.20.1।।
விஸ்வாமித்திரர் கூறியதைக்
கேட்ட தசரதர் சிறிது நேரம் நினைவிழந்தவரைப் போல இருந்தார். பின், மீண்டும் சுய
நினைவு பெற்று இவ்வாறு கூறினார்.
ऊनषोडशवर्षो मे रामो
राजीवलोचन:।
न युद्धयोग्यतामस्य पश्यामि सह राक्षसै:।।1.20.2।।
“தாமரைக் கண்ணனான
என்னுடைய ராமனுக்கு இன்னும் பதினாறு ஆண்டுகள் கூட நிரம்பவில்லை. ராக்ஷஸர்களுடன்
போரிடும் திறமை அவனுக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.
इयमक्षौहिणी पूर्णा यस्याहं पतिरीश्वर:।
अनया संवृतो गत्वा योद्धाऽहं तैर्निशाचरै:।।1.20.3।।
இந்த அக்ஷௌஹிணி சேனை முழுவதற்கும் நான் தலைவன். இதனுடன் சென்று, நானே போரிட்டு அந்த ராக்ஷஸர்களுடன் போரிடுவேன். (அக்ஷௌஹிணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது -- விக்கிபீடியா.)
इमे शूराश्च विक्रान्ता
भृत्या मेऽस्त्रविशारदा:।
योग्या रक्षोगणैर्योद्धुं न रामं नेतुमर्हसि।।1.20.4।।
என்னுடைய படை வீரர்கள்,
வீரத்திலும், வலிமையிலும், ஆயுதங்களைத் திறம்பட உபயோகிப்பதிலும் தேர்ந்தவர்கள்.
அவர்களால் ராக்ஷஸக் கூட்டங்களைப் போரில் முறியடிக்க முடியும். ராமனைத் தாங்கள்
அழைத்துச் செல்ல வேண்டாம்.
अहमेव
धनुष्पाणिर्गोप्ता समरमूर्धनि।
यावत्प्राणान्धरिष्यामि तावद्योत्स्ये निशाचरै:।।1.20.5।।
என் கையில் வில்லை
ஏந்திக்கொண்டு, நானே தங்கள் வேள்வியைப் பாதுகாக்கிறேன். என் உயிர் உள்ளவரை,
ராக்ஷஸர்களுடன் போரிடுவேன்.
निर्विघ्ना व्रतचर्या
सा भविष्यति सुरक्षिता।
अहं तत्रागमिष्यामि न रामं नेतुमर्हसि।।1.20.6।।
நானே அங்கு வந்து
வேள்வியின் நியமங்கள் சரியாக நடக்கும் படியும், எந்த விதவான தடையும் இன்றிப்
பாதுகாப்புடன், வேள்வி பூர்த்தியாகும் படியும் பார்த்துக்கொள்கிறேன். ராமனைத்
தாங்கள் அழைத்துச் செல்ல வேண்டாம்.
बालो ह्यकृतविद्यश्च न
च वेत्ति बलाबलम्।
न चास्त्रबलसंयुक्तो न च युद्धविशारद:।।1.20.7।।
न चासौ रक्षसां योग्य: कूटयुद्धा हि ते ध्रुवम् ।
ராமன் இன்னும் சிறுவன்
தான். அவனுக்குப் போர்க்கலையில் அவ்வளவாகப் பயிற்சி இல்லை. எதிரிகளின் பலத்தையும்,
பலவீனத்தையும் அவன் அறிய மாட்டான். ஆயுதங்களைத் திறம்பட உபயோகிக்கும் திறமையை அவன்
இன்னும் அடையவில்லை. ராக்ஷஸர்கள் நிச்சயம், ஏமாற்றிப் போர் செய்வார்கள் என்பதைத்
தாங்கள் அறிவீர்கள். ராமனால் அவர்களைப் போரில் எதிர்த்து வெற்றிகொள்ள முடியாது.
विप्रयुक्तो हि रामेण
मुहूर्तमपि नोत्सहे।।1.20.8।।
जीवितुं मुनिशार्दूल न रामं नेतुमर्हसि।
ராமனைப் பிரிந்து ஒரு
கணம் கூட வாழ நான் விரும்பமாட்டேன். தவமுனிவர்களுள் சிறந்தவரே! தயவு செய்து ராமனை
அழைத்துச் செல்ல வேண்டாம்.
यदि वा राघवं
ब्रह्मन्नेतुमिच्छसि सुव्रत।।1.20.9।।
चतुरङ्गसमायुक्तं मया च सहितं नय।
விரதத்தில் சிறந்த
முனிவரே! தாங்கள், ராமனைத் தங்களுடன் அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, என்னுடைய
சதுரங்க சேனை( தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நான்கு வகைப்
படைகள்) யுடன் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.
षष्टिर्वर्षसहस्राणि
जातस्य मम कौशिक।।1.20.10।।
दु:खेनोत्पादितश्चायं न रामं नेतुमर्हसि।
குசிக வம்சத்தில்
பிறந்தவரே! நான் பிறந்து அறுபதாயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. மிகவும் சிரமப்பட்டு
முயற்சி செய்தபின் ராமன் பிறந்திருக்கிறான். ஆகவே, அவனை அழைத்துச் செல்லாதீர்கள்.
चतुर्णामात्मजानां हि
प्रीति:परमिका मम।।1.20.11।।
ज्येष्ठं धर्मप्रधानं च न रामं नेतुमर्हसि।
எனது நான்கு
புதல்வர்களில், ராமன் மேல் தான் எனக்கு அன்பு அதிகம். தர்மமே பிரதானமாக உள்ள ராமனை
அழைத்துச் செல்ல வேண்டாம்.
किंवीर्या राक्षसास्ते
च कस्य पुत्राश्च ते च के।।1.20.12।।
कथं प्रमाणा: के चैतान्रक्षन्ति मुनिपुङ्गव।
முனிவர்களுள்
சிறந்தவரே! இந்த ராக்ஷஸர்களின் வலிமை எத்தகையது? அவர்கள் யாருடைய புத்திரர்கள்?
அவர்களுடைய உடல் எவ்வளவு பெரியது? அவர்கள் யாருடைய பாதுகாப்பில் இருக்கிறார்கள்?
कथं च प्रतिकर्तव्यं
तेषां रामेण रक्षसाम्।।1.20.13।।
मामकैर्वा बलैर्ब्रह्मन्मया वा कूटयोधिनाम्।3
அந்தணரே! துரோகமும்,
வஞ்சகமும் நிறைந்த அந்த ராக்ஷஸர்களை, ராமனோ, என் படைகளோ, நானோ, எதிர் கொள்ளும்
விதம் யாது?
सर्वं मे शंस भगवन्कथं
तेषां मया रणे।।1.20.14।।
स्थातव्यं दुष्टभावानां वीर्योत्सिक्ता हि राक्षसा:।4
तस्य तद्वचनं श्रुत्वा विश्वामित्रोऽभ्यभाषत।।1.20.15।।
மரியாதைக்குரியவரே!
தங்கள் வலிமையால் அகந்தையுடன் நடந்து கொள்ளும், அந்தத் தீய குணம் கொண்ட
ராக்ஷஸர்களைப் போரில் எதிர்த்து நிற்கும் முறை யாது. இதையெல்லாம் எனக்குச்
சொல்லுங்கள்.” இவ்வாறு தசரதர் பேசியதைக் கேட்ட விஸ்வாமித்திரர் பேசலானார்:
पौलस्त्यवंशप्रभवो रावणो नाम राक्षस:।
स ब्रह्मणा दत्तवरस्त्रैलोक्यं बाधते भृशम्।।1.20.16।।
महाबलो महावीर्यो राक्षसैर्बहुभिर्वृत:।
“புகழ் பெற்ற புலஸ்தியருடைய வம்சத்தில் பிறந்த ராவணன் என்னும் ராக்ஷஸன் மிகுந்த
பலமும், திறமையும் பெற்றவன். அவன் பிரம்மதேவனிடம் பெற்ற வரத்தால் (ஆணவம் கொண்டு),
பல ராக்ஷஸர்களுடன் மூன்று உலகங்களையும் மிகவும் துன்புறுத்தி வருகிறான்.
श्रूयते हि महावीर्यो
रावणो राक्षसाधिप:।।1.20.17।।
साक्षाद्वैश्रवणभ्राता पुत्रो विश्रवसो मुने:।
ராக்ஷஸர்களின் அரசனான
ராவணன், குபேரனின் சகோதரனும் விஸ்ரவஸ் என்னும் முனிவரின் புதல்வனும் ஆவான். அவன்
மகா பலசாலி என்றும், மகாவீர்யம் பொருந்தியவன் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.
यदा स्वयं न यज्ञस्य
विघ्नकर्ता महाबल:।।1.20.18।।
तेन सञ्चोदितौ द्वौ तु राक्षसौ वै महाबलौ।
मारीचश्च सुबाहुश्च यज्ञविघ्नं करिष्यत:।।1.20.19।।
மகா பலசாலியாக
இருந்தாலும், ராவணன், தானே இந்த வேள்விகளைத் தடை செய்வதில்லை. அவனால் தூண்டப்பட்ட
மாரீசன், சுபாஹு என்னும் இரு ராக்ஷஸர்கள் தான் எனது வேள்விக்கு இடைஞ்சல்
கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். “
इत्युक्तो मुनिना तेन
राजोवाच मुनिं तदा।
न हि शक्तोऽस्मि सङ्ग्रामे स्थातुं तस्य दुरात्मन:।।1.20.20।।
இவ்வாறு ரிஷி
விஸ்வாமித்திரர் சொல்லக்கேட்ட தசரத மன்னர், முனிவரைப் பார்த்து, “அந்தத் தீய மனம்
கொண்ட ராக்ஷஸர்களை என்னால் போரில் எதிர்த்து நிற்க முடியாது.
स त्वं प्रसादं धर्मज्ञ
कुरुष्व मम पुत्रके।
मम चैवाल्पभाग्यस्य दैवतं हि भवान्गुरु:।।1.20.21।।
தாங்கள் தர்மம்
அறிந்தவர். தயவு செய்து சிறுவனான என் மகன் மீதும், அபாக்கியவானான என் மீதும் கருணை
காட்டுங்கள். தாங்கள் தான் என்னுடைய குருவும் என்னுடைய கடவுளும் ஆவீர்கள்.
देवदानवगन्धर्वा
यक्षा:पतगपन्नगा:।
न शक्ता रावणं सोढुं किं पुनर्मानवा युधि।।1.20.22।।
தேவர்களும்,
தானவர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், பெரிய பறவைகளும், மகத்தான
சர்ப்பங்களும் ராவணனுக்கு முன் நிற்க முடியாதென்றால், சாதாரண மனிதர்கள்
எம்மாத்திரம்?
स हि वीर्यवतां
वीर्यमादत्ते युधि राक्षस:।
तेन चाहं न शक्तोऽस्मि संयोद्धुं तस्य वा बलै:।।1.20.23।।
सबलो वा मुनिश्रेष्ठ सहितो वा ममात्मजै:।
அந்த ராக்ஷஸன்
பலசாலிகளான போர்வீரர்களின் பலத்தையும் எடுத்துக் கொண்டு விடுவான். முனிவர்களுள்
முதன்மையானவரே! என் படைகளுடனோ அல்லது என் புதல்வர்களுடனோ, என்னால் அவனைப் போரில்
எதிர்க்க முடியாது.
कथमप्यमरप्रख्यं
सङ्ग्रामाणामकोविदम्।
बालं मे तनयं ब्रह्मन् नैव दास्यामि पुत्रकम्।।1.20.24।।
அந்தணரே! என் மகன்
தேவனைப் போல் இருந்தாலும், போரில் அனுபவம் இல்லாதவன். ஆகவே, பாலகனான என்
அன்புக்குரிய புதல்வனை, நான் தங்களுடன் அனுப்ப மாட்டேன்.
अथ कालोपमौ युध्दे सुतौ
सुन्दोपसुन्दयो:।।1.20.25।।
यज्ञविघ्नकरौ तौ ते नैव दास्यामि पुत्रकम्।
மேலும், தங்களுடைய
வேள்விக்குப் பங்கம் விளைவிப்பவர்கள், சுந்தன், உபசுந்தன் ஆகியோரின் புத்திரர்களான
மாரீசனும், சுபாஹுவும். அவர்கள் யுத்தத்தில், யமதர்ம ராஜனைப் போல் இருப்பார்கள்.
ஆகவே, என் மகனை நான் தங்களுடன் அனுப்ப மாட்டேன்.
मारीचश्च सुबाहुश्च
वीर्यवन्तौ सुशिक्षितौ।
तयोरन्यतरेणाहं योध्दा स्यां ससुहृद्गण:।।1.20.26।।
மாரீசனும், சுபாஹுவும்,
பலசாலிகள் மட்டும் அல்ல, போர் புரிவதில் நல்ல அனுபவம் உள்ளவர்கள். என்னுடைய சிறந்த
நண்பர்களுடன், அவர்களில் யாராவது ஒருவருடன் என்னால் போர் புரிய முடியும்.
इति
नरपतिजल्पनाद्द्विजेन्द्रं
कुशिकसुतं सुमहान्विवेश मन्यु:।
सुहुत इव मखेऽग्निराज्यसिक्त
स्समभवदुज्ज्वलितो महर्षिवह्नि:।।1.20.27।।
தவமுனிவர்களில்
சிறந்தவரும், சுசிக வம்சத்தவரும், மகானுமான விஸ்வாமித்திரர், இவ்வாறு தசரத மன்னர்
பேசியதைக் கேட்டதும், வேள்வியில் நெய்யை இட்டவுடன் சீறிப் பெருகும் நெருப்பைப்
போலப் பெருஞ்சினம் கொண்டார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय
आदिकाव्ये बालकाण्डे विंशस्सर्ग:।।
Thus ends the twentieth sarga of Balakanda of the
holy Ramayana the first epic composed by sage Valmiki.
இத்துடன், வால்மீகியின்
ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் இருபதாவது ஸர்க்கம், நிறைவு
பெறுகிறது.
***
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment