Monday, 11 December 2023

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 25


(ராமன் மேற்கொண்டு விவரங்கள் கேட்கவும், விஸ்வாமித்திரர் தாடகையின் பிறப்பு, அவளது திருமணம், அவளுக்குக் கிடைத்த சாபம் ஆகியவற்றைப் பற்றிக் கூறி, அவளை வதம் செய்வது தவறல்ல என்று ராமனை ஒத்துக்கொள்ள வைக்கிறார்.)


अथ तस्याप्रमेयस्य मुनेर्वचनमुत्तमम्।
श्रुत्वा पुरुषशार्दूल: प्रत्युवाच शुभां गिरम्।।1.25.1।।

மனிதர்களுள் சிறந்த ராமன், அளவற்ற திறமையுடைய விஸ்வாமித்திரரின் உத்தமமான வார்த்தைகளைக் கேட்டு, மென்மையான குரலில் பதில் கூறினான்.

 

अल्पवीर्या यदा यक्षा श्श्रूयन्ते मुनिपुङ्गव।
कथन्नागसहस्रस्य धारयत्यबला बलम्।।1.25.2।।

“முனி புங்கவரே! யக்ஷர்கள் அவ்வளவு பலம் பொருந்தியவர்கள் அல்ல என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படியிருக்க, பலம் குறைந்த ஒரு பெண்ணுக்கு எப்படி ஆயிரம் யானைகளின் பலம் இருக்கக்கூடும்?”

 

विश्वामित्रोऽब्रवीद्वाक्यं शृण येन बलोत्तरा।
वरदानकृतं वीर्यं धारयत्यबला बलम्।।1.25.3।।

விஸ்வாமித்திரர் கூறினார்: “எவ்வாறு அபலையான ஒரு பெண் இப்படிப்பட்ட வீர்யத்தையும் , பலத்தையும் ஒரு வரத்தால் அடைந்தாள் என்பதைக் கூறுகிறேன், கேள்!

 

पूर्वमासीन्महायक्षस्सुकेतुर्नाम वीर्यवान्।
अनपत्यश्शुभाचारस्स च तेपे महत्तप:।।1.25.4।।

முன்னொரு காலத்தில் பெரும் வலிமை படைத்த, ஸுகேது என்ற பெயர் கொண்ட ஒரு மகாயக்ஷன் இருந்தான். அவனுக்குக் குழந்தைகள் இருக்கவில்லை. நன்னடத்தையுள்ள அவன் மிகவும் தீவிரமாகத் தவம் இருந்தான்.

 

पितामहस्तु सुप्रीतस्तस्य यक्षपते स्तदा।
कन्यारत्नं ददौ राम ताटकां नाम नामत:।।1.25.5।।

ராமா! அவனுடைய தவத்தால் மிகவும் மகிழ்ந்த பிரம்மதேவர், அந்த யக்ஷராஜனுக்குத் தாடகை என்ற பெயருள்ள மணி போன்ற புதல்வியை வரமாக அளித்தார்.

 

ददौ नागसहस्रस्य बलं चास्या: पितामह:।
नत्वेव पुत्रं यक्षाय ददौ ब्रह्मा महायशा:।।1.25.6।।

மிகுந்த புகழ் பெற்றபிதாமகரான பிரம்ம தேவர், ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட புதல்வியை அவனுக்கு அளித்தாரேயன்றிப் புதல்வர்களை அளிக்கவில்லை.

 

तां तु जातां विवर्धन्तीं रूपयौवनशालिनीम्।
झर्झपुत्राय सुन्दाय ददौ भार्यां यशस्विनीम्।।1.25.7।।

(ஸுகேது)அவள் வளர்ந்து, அழகும் இளமையும் சேர்ந்து ஒளிர்ந்து கொண்டிருந்த போது, ஜர்ஜனின்புதல்வனாகிய சுந்தனுக்கு அவளைத் திருமணம் செய்து கொடுத்தான்.

 

कस्यचित्त्वथ कालस्य यक्षी पुत्रमजायत।
मारीचं नाम दुर्धर्षं यश्शापाद्राक्षसोऽभवत्।।1.25.8।।

சிறிது காலத்துக்குப் பிறகு, அந்த யக்ஷி, யாராலும் தாக்கப் படமுடியாத, மாரீசன் என்ற ஒரு மகனைப் பெற்றாள். ஆனால், ஒரு சாபத்தின் விளைவாக அவன் ராக்ஷஸனாக மாறிவிட்டான்.

 

सुन्दे तु निहते राम सागस्त्यमृषिसत्तमम्।
ताटका सह पुत्रेण प्रधर्षयितुमिच्छति।।1.25.9।।

சுந்தன் இறந்த பிறகு, தாடகை, தன் மகன் மாரீசனுடன் சேர்ந்து, ரிஷிகளுள் சிறந்தவரான அகஸ்தியரைத் தாக்க விரும்பினாள்.

 

भक्षार्थं जातसंरम्भा गर्जन्ती साभ्यधावत।0
आपतन्तीं तु तां दृष्ट्वा अगस्त्यो भगवानृषि:।।1.25.10।।

राक्षसत्वं भजस्वेति मारीचं व्याजहार स:। 1

அகஸ்தியரை நோக்கிக் கர்ஜித்துக்கொண்டே அவரை உண்பதற்காகத் தாடகை பாய்ந்தாள். அதைக்கண்ட அகஸ்தியர், அவளுடைய மகன் மாரீசனை ராக்ஷஸனாகும் படி சபித்தார்.

 

अगस्त्य: परमक्रुद्धस्ताटकामपि शप्तवान्।।1.25.11।।

पुरुषादी महायक्षी विरूपा विकृतानना।
इदं रूपं विहायाथ दारुणं रूपमस्तु ते।।1.25.12।।

மிகுந்த கோபம் கொண்ட அகஸ்தியர் தாடகையையும் “இந்த யக்ஷிணியின் வடிவத்தைத் துறந்து,  பயங்கரமான உருவத்துடனும், அருவருப்பான முகத்துடனும், நரமாமிசம் உண்ணும் ராக்ஷஸியாக மாறுவாய்’ என்று சபித்தார்.

 

सैषा शापकृतामर्षा ताटका क्रोधमूर्छिता।
देशमुत्सादयत्येनमगस्त्यचरितं शुभम्।।1.25.13।।

அந்த சாபத்தால் மிகவும் கோபமுற்ற தாடகை, மதியிழந்து, அகஸ்தியர் நடமாடிய இந்தப் புனிதபூமியைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறாள்.

 

एनां राघव दुर्वृत्तां यक्षीं परमदारुणाम्।
गोब्राह्मणहितार्थाय जहि दुष्टपराक्रमाम्।।1.25.14।।

ராமா! தீய நடவடிக்கைகள் கொண்ட, குரூரமான, மிகுந்த கெடுதல் செய்யும் சக்தி கொண்ட இந்த யக்ஷியை, அந்தணர்களையும், பசுக்களையும் காக்கும் பொருட்டு வதம் செய்வாய்.

 

न ह्येनां शापसम्स्पृष्टां कश्चिदुत्सहते पुमान्।
निहन्तुं त्रिषु लोकेषु त्वामृते रघुनन्दन।।1.25.15।।

ரகு நந்தனனே! சாபத்திற்குட்பட்ட இந்த யக்ஷிணியைக் கொல்ல, இந்த மூவுலகிலும், உன்னைத் தவிர யாராலும் முடியாது.

 

न हि ते स्त्रीवधकृते घृणा कार्या नरोत्तम।
चातुर्वण्यहितार्थाय कर्तव्यं राजसूनुना।।1.25.16।।

நரோத்தமனே! ஒரு பெண்ணைக்கொல்வதா என்று நீ தயங்க வேண்டாம். ஒரு அரசகுமாரனான உனக்கு, நால்வகை வர்ணத்தவரையும் பாதுகாக்கும் கடமை இருக்கிறது.

 

नृशंसमनृशंसं वा प्रजारक्षणकारणात्।
पातकं वा सदोषं वा कर्तव्यं रक्षता सता।।1.25.17।।

ஒரு செயல், கொடுமையானதாயினும், நன்மை பயப்பதாயினும், பாவம் நிறைந்ததாயினும், தவறேயாயினும், தர்மவானான ஒரு அரசன், பிரஜைகளைக் காப்பதன் பொருட்டு, அதைச் செய்தே ஆகவேண்டும்.

 

राज्यभारनियुक्तानामेष धर्मस्सनातन:।
अधर्म्यां जहि काकुत्स्थ धर्मोह्यस्या न विद्यते।।1.25.18।।

ராஜ்ஜிய பாரத்தைச் சுமப்பவர்கள் எப்போதும் நிறைவேற்ற வேண்டிய தர்மம் இது தான். காகுஸ்தனே! அவளைக் கொன்று விடு. அவளுக்குத் தர்மம் என்பதே கிடையாது.

 

श्रूयते हि पुरा शक्रो विरोचनसुतां नृप।
पृथिवीं हन्तुमिच्छन्तीं मन्थरामभ्यसूदयत्।।1.25.19।।

அரசகுமாரனே! முன்பு ஒரு முறை, இந்தப் பூமியை அழிக்க முயன்ற விரோசனனின் மகளாகிய மந்தரை என்பளை இந்திரன் கொன்றார் என்று கேட்டிருக்கிறோம்.

 

विष्णुनापि पुरा राम भृगुपत्नी दृढव्रता।
अनिन्द्रं लोकमिच्छन्ती काव्यमाता निषूदिता।।1.25.20।।
 

அதே போல், முன் காலத்தில், சுக்கிராச்சாரியாரின் தாயும், ப்ருகு ரிஷியின் மனைவியும் ஆன காவ்யா, இந்திரனை அழிக்க விரதம் பூண்டிருந்ததால், விஷ்ணு அவளை அழித்தார்.

 

एतैश्चान्यैश्च बहुभी राजपुत्र महात्मभि:।
अधर्मसहिता नार्यो हता: पुरुषसत्तमै:।।1.25.21।।

அரச குமாரனே! இவ்வாறு மகாத்மாக்களாலும், சிறந்த மனிதர்களாலும், தர்மத்துக்கு விரோதமான பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे पञ्चविंशस्सर्ग:।।


இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் இருபத்தைந்தாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

 


No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...