ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 27
(விஸ்வாமித்திரர்
ராமனுக்குத் தெய்வீக அஸ்திரங்களை அளிக்கிறார்.)
अथ तां रजनीमुष्य
विश्वामित्रो महायशाः।
प्रहस्य राघवं वाक्यमुवाच मधुराक्षरम्।।1.27.1।।
இரவு முழுவதும் அங்கு
தங்கி விட்டு, விடிந்த பின், பெரும்புகழுடைய விஸ்வாமித்திரர் புன்னகையுடன்
ராமனிடம் கூறினார்:
परितुष्टोऽस्मि भद्रं
ते राजपुत्र महायशः।
प्रीत्या परमया युक्तो ददाम्यस्त्राणि सर्वशः।।1.27.2।।
“புகழ் பெற்ற அரச குமாரனே!
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உனக்கு நன்மை உண்டாகட்டும்! என்னுடைய
எல்லா ஆயுதங்களையும், மிக்க அன்புடன் உனக்கு அளிக்கிறேன்.
देवासुरगणान्वापि
सगन्धर्वोरगानपि।
यैरमित्रान् प्रसह्याजौ वशीकृत्य जयिष्यसि।।1.27.3।।
तानि दिव्यानि भद्रं ते ददाम्यस्त्राणि सर्वशः ।
தேவர்களையும்,
அசுரர்களையும், கந்தர்வர்களையும், நாகர்களையும் கூடப் போரில் வசப்படுத்தி வெற்றி
கொள்ளத்தக்க தெய்வீக அஸ்திரங்கள் அனைத்தையும் உனக்குக் கொடுக்கிறேன். உனக்கு நன்மை
உண்டாகட்டும்!
दण्डचक्रं महद्दिव्यं
तव दास्यामि राघव।।1.27.4।।
धर्मचक्रं ततो वीर कालचक्रं तथैव च।
विष्णुचक्रं तथात्युग्रमैन्द्रमस्त्रं तथैव च।।1.27.5।।
वज्रमस्त्रं नरश्रेष्ठ शैवं शूलवरं तथा।
अस्त्रं ब्रह्मशिरश्चैव ऐषीकमपि राघव।।1.27.6।।
ददामि ते महाबाहो ब्राह्ममस्त्रमनुत्तमम्।
ராகவா! உனக்கு மகத்தான
திவ்யாஸ்திரமான தண்ட சக்கரத்தை அளிக்கிறேன். வீரனே! உனக்கு தர்மசக்கரத்தையும், கால
சக்கரத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், இந்திராஸ்திரத்தையும் அளிக்கிறேன். மனிதருள்
சிறந்தவனே! உனக்கு, வஜ்ராயுதத்தையும், சிவனுடைய மகத்தான சூலத்தையும், பிரம்ம சிரம்
என்னும் அஸ்திரத்தையும், ஐஷிகாஸ்திரத்தையும் அளிக்கிறேன். வலிமையான கரங்களுடையவனே!
உனக்கு உத்தமமான பிரம்மாஸ்திரத்தையும் அளிக்கிறேன்.
गदे द्वे चैव काकुत्स्थ मोदकी शिखरी उभे।।1.27.7।।
प्रदीप्ते नरशार्दूल प्रयच्छामि नृपात्मज।
காகுஸ்தனே! மனிதருள்
சிறந்தவனே! அரசகுமாரனே! ‘மோதகி’, ‘சிகரி’ என்னும் இரண்டு ஒளீவீசும் கதைகளையும்
உனக்கு அளிக்கிறேன்.
धर्मपाशमहं राम कालपाशं
तथैव च।।1.27.8।।
पाशं वारुणमस्त्रं च ददाम्यहमनुत्तमम्।
ராமா! உனக்கு நான் தர்ம
பாசத்தையும், காலபாசத்தையும், வருண பாசத்தையும் மட்டுமல்லாது ஒரு உத்தமமான
அஸ்திரத்தையும் அளிக்கிறேன்.
अशनी द्वे प्रयच्छामि
शुष्कार्द्रे रघुनन्दन।।1.27.9।।
ददामि चास्त्रं पैनाकमस्त्रं नारायणं तथा।
ரகு நந்தனா! உங்ககு
சுஷ்கம் ( உலர்ந்தது), ஆர்த்ரம் ( ஈரமானது) என்னும் இடி வடிவில் ஆன இரண்டு
அஸ்திரங்களையும், பினாகாஸ்திரம், நாராயணாஸ்திரம் ஆகியவைகளையும் கொடுக்கிறேன்.
आग्नेयमस्त्रं दयितं
शिखरं नाम नामतः।।1.27.10।।
वायव्यं प्रथनं नाम ददामि च तवानघ ।
குற்றமற்றவனே, ராமா!
எனக்கு மிகவும் பிடித்த ‘சிகரம்’ என்ற பெயர் கொண்ட ஆக்னேயாஸ்திரத்தையும்,
‘ப்ரதனம்’ என்ற பெயர் கொண்ட வாயு அஸ்திரத்தையும் கொடுக்கிறேன்.
अस्त्रं हयशिरो नाम
क्रौञ्चमस्त्रं तथैव च।
शक्तिद्वयं च काकुत्स्थ ददामि तव राघव।।1.27.11।।
ககுஸ்த வம்சத்தில்
பிறந்த ராகவனே! உனக்கு ‘ஹயசிரம்’( குதிரைத்தலை),
என்ற அஸ்திரத்தையும், க்ரௌஞ்சாஸ்திரத்தையும், இரண்டு விதமான சக்திகளையும்,கொடுக்கிறேன்.
कङ्कालं मुसलं घोरं
कापालमथ कङ्कणम्।
धारयन्त्यसुरा यानि ददाम्येतानि सर्वशः।।1.27.12।।
(இவை மட்டுமன்றி,)
அசுரர்கள் பயன்படுத்தும் பயங்கரமான ‘கங்காலம்’, ‘முஸலம்’, ‘காபாலம்’, ‘கங்கணம்’
ஆகிய அனைத்து அஸ்திரங்களையும் கொடுக்கிறேன்.
वैद्याधरं महास्त्रं च
नन्दनं नाम नामतः।
असिरत्नं महाबाहो ददामि च नृपात्मज।।1.27.13।।
வலிமையான கரங்கள் கொண்ட
அரசகுமாரனே! உனக்கு ‘மகா அஸ்திரம்’, ‘வைத்யாதரம்’ ஆகிய அஸ்திரங்களையும், ‘நந்தனம்’
என்ற பெயருடைய ஒரு அருமையான வாளையும் கொடுக்கிறேன்.
गान्धर्वमस्त्रं दयितं
मानवं नाम नामतः।
प्रस्वापनप्रशमने दद्मि सौरं च राघव।।1.27.14।।
ராகவனே! தூக்கத்தை
உண்டாக்குகின்ற, மற்றும் கட்டுப்படுத்துகிற ‘ கந்தர்வாஸ்திரம்’, ‘மானவாஸ்திரம்’
என்ற இரண்டு பிரியமான அஸ்திரங்களையும், சௌராஸ்திரத்தையும், உனக்குக் கொடுக்கிறேன்.
दर्पणं शोषणं चैव
सन्तापनविलापने।
मदनं चैव दुर्धर्षं कन्दर्पदयितं तथा।।1.27.15।।
पैशाचमस्त्रं दयितं मोहनं नाम नामतः।
प्रतीच्छ नरशार्दूल राजपुत्र महायशः।।1.27.16।।
பெரும் புகழ் கொண்டவனே!
மனிதருள் சிறந்த அரசகுமாரனே! ‘தர்ப்பணம்’, ‘சோஷணம்’, ‘சந்தாபனம்’, ‘விலாபனம்’ ஆகிய
அஸ்திரங்களையும், காமதேவனுக்குப் பிடித்தமான மதனாஸ்திரத்தையும், பைசாசர்களுக்குப்
பிடித்தமான மோகனாஸ்திரத்தையும் பெற்றுக்கொள்.
तामसं नरशार्दूल सौमनं च महाबल।
संवर्धं चैव दुर्धर्षं मौसलं च नृपात्मज।।1.27.17।।
सत्यमस्त्रं महाबाहो तथा मायाधरं परम्।
घोरं तेजः प्रभं नाम परतेजोऽपकर्षणम्।।1.27.18।।
सौम्यास्त्रं शिशिरं नाम त्वष्टुरस्त्रं सुदामनम्।
दारुणं च भगस्यापि शितेषु मथ मानवम्।।1.27.19।।
மகாபலம் பொருந்திய
அரசகுமாரனே! மனிதருள் புலி போன்றவனே! ‘தாமஸம்’, ‘சௌமனஸ்’ ஆகிய அஸ்திரங்களையும்,
வெல்ல முடியாத ஸம்வர்த்தனாஸ்திரத்தையும், மௌசலாஸ்திரத்தையும், சத்யாஸ்திரத்தையும்,
மாயாதராஸ்திரத்தையும், எதிரிகளின் சக்தியை அழிக்கக்கூடிய தேஜப்ரபாஸ்திரத்தையும்,
‘சிசிரம்’ என்ற பெயர் கொண்ட மென்மையான அஸ்திரத்தையும், பயங்கரமான
த்வஷ்டாஸ்திரத்தையும், பகனுடைய கூரிய அம்பு கொண்ட ஷிதேஷு என்னும் அஸ்திரத்தையும்,
மானவாஸ்திரத்தையும் பெற்றுக்கொள்.
एतान् राम महाबाहो
कामरूपान् महाबलान् ।
गृहाण परमोदारान् क्षिप्रमेव नृपात्मज।।1.27.20।।
வலிமையான கரங்கள் உடைய
அரசகுமாரனே! நினைத்த மாதிரியான வடிவம் எடுக்கக்கூடிய, மகாபலம் பொருந்திய, இந்த
உயர்ந்த அஸ்திரங்களை விரைவில் பெற்றுக்கொள்.”
स्थितस्तु प्राङ्मुखो
भूत्वा शुचिर्मुनिवरस्तदा।
ददौ रामाय सुप्रीतो मन्त्रग्राममनुत्तमम्।।1.27.21।।
பின்னர், முனிவருள்
சிறந்த விஸ்வாமித்திரர், தன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டு, கிழக்கு நோக்கி
உறுதியாக நின்று கொண்டு, மிகுந்த அன்புடனும், மகிழ்ச்சியுடனும், மிக உயர்ந்த
மந்திரங்களை (அஸ்திரங்களை) ராமனுக்கு அளித்தார்.
सर्वसङ्ग्रहणं येषां दैवतैरपि
दुर्लभम्।
तान्यस्त्राणि तदा विप्रो राघवाय न्यवेदयत्।।1.27.22।।
தேவர்களால் கூடப் பெற
முடியாத அஸ்திரங்கள் அனைத்தையும் விஸ்வாமித்திரர் ராமனுக்கு அளித்தார்.
जपतस्तु मुनेस्तस्य
विश्वामित्रस्य धीमतः।
उपतस्थुर्महार्हाणि सर्वाण्यस्त्राणि राघवम्।।1.27.23।।
அறிவாற்றல் நிறைந்த விஸ்வாமித்திரர்
இந்த உத்தமமான அஸ்திரங்களுக்குண்டான மந்திரங்களை ஜபித்தவுடன், அந்த அஸ்திரங்கள்
அனைத்தும், ராமன் முன் வந்து நின்றன.
ऊचुश्च मुदितास्सर्वे
रामं प्राञ्जलयस्तदा।
इमे स्म परमोदाराः किङ्करास्तव राघव।।1.27.24।।
அந்த அஸ்திர தேவதைகள்,
கைகளைக் கூப்பிக்கொண்டு, “இனி நாங்கள் தங்களுடைய சேவகர்கள்” என்று ராமனிடம்
கூறினார்கள்.
प्रतिगृह्य च
काकुत्स्थः समालभ्य च पाणिना।
मानसा मे भविष्यध्वमिति तानभ्यचोदयत्।।1.27.25।।
காகுஸ்தனான ராமன் அந்த அஸ்திரங்களைக் கைகளால் தொட்டுப் பெற்றுக்கொண்டு, ‘என்
மனத்தில் வாசம் செய்யுங்கள்’ (நான் நினைத்த போது எனக்கு சேவை செய்யுங்கள்.) என்று
ஆணையிட்டான்.
ततः प्रीतमना रामो
विश्वामित्रं महामुनिम्।
अभिवाद्य महातेजा गमनायोपचक्रमे।।1.27.26।।
பின்னர், ராமன்
முகமலர்ச்சியுடன் விஸ்வாமித்திர மகாமுனிவருக்கு வணக்கம் தெரிவித்து, அங்கிருந்து
புறப்படத்தயாரானான்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे सप्तविंशस्सर्गः।।
இத்துடன், வால்மீகியின்
ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் இருபத்தேழாவது ஸர்க்கம்,
நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment