Saturday, 30 December 2023

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 42

 (அம்சுமான் கங்கையை பூமிக்கு வரவழைக்கத் தவம் செய்கிறான். பின்னர் பகீரதன் தொடர்கிறான். பிரம்மாவிடம் இருந்து வரம் பெறுகிறான். பிரம்மா சிவ பெருமானால் தான் கங்கையைத் தாங்க முடியும் என்று கூறுகிறார்.)

कालधर्मं गते राम सगरे प्रकृतीजना:।
राजानं रोचयामासुरंशुमन्तं सुधार्मिकम्।।1.42.1।।

“ராமா! காலப்போக்கில் சகரர் மரணம் எய்திய பின்னர், அவருடைய மந்திரிகளும், குடிமக்களும் சேர்ந்து, தர்மாத்மாவான அம்சுமானை அரசனாக நியமித்தார்கள்.

 

स राजा सुमहानासीदंशुमान् रघुनन्दन ।
तस्य पुत्रो महानासीद्दिलीप इति विश्रुत:।।1.42.2।।

ரகு நந்தனா! அந்த அம்சுமான் மிகவும் சிறந்த அரசனாக ஆனான். அந்த அம்சுமானுக்கு திலீபன் என்ற சிறந்த புத்திரன் இருந்தான்.


तस्मिन् राज्यं समावेश्य दिलीपे रघुनन्दन।
हिमवच्छिखरे पुण्ये तपस्तेपे सुदारुणम्।।1.42.3।।

அம்சுமான் தன் மகன் திலீபனிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்து விட்டு, இமயமலையின் புனிதமான சிகரத்தில் தவம் செய்யலானார்.

 

द्वात्रिंशच्च सहस्राणि वर्षाणि सुमहायशा:।
तपोवनं गतो राम स्वर्गं लेभे तपोधन:।।1.42.4।।

ராமா! புகழ் பெற்ற அம்சுமான் முப்பத்திரண்டாயிரம் ஆண்டுகள் தவம் செய்த பிறகு தவச்செல்வராக ஸ்வர்க்கம் புகுந்தார்.

 

दिलीपस्तु महातेजाश्श्रुत्वा पैतामहं वधम्।
दु:खोपहतया बुद्ध्या निश्चयं नाध्यगच्छत।।1.42.5।।

தனது முன்னோர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட  திலீபன் மிகுந்த துயரம் அடைந்தார். ஆனால், அவரால் (கங்கையை வரவழைப்பது சம்பந்தமாக) எந்தவித தீர்மானத்துக்கும் வர இயலவில்லை.

 

कथं गङ्गावतरणं कथं तेषां जलक्रिया।
तारयेयं कथं चैतानिति चिन्तापरोऽभवत्।।1.42.6।।

எவ்வாறு கங்கையை பூமிக்கு வரவழைப்பது? அவர்களுக்கு( தன் முன்னோர்களுக்கு) எவ்வாறு ஜலக்ரியை செய்விப்பது?

ஆவர்களை எவ்வாறு இந்த பிறவிக்கடலைக் கடக்க வைத்து மோக்ஷத்துக்கு அனுப்பி வைப்பது என்று சிந்திக்கலானார்.

 

तस्य चिन्तयतो नित्यं धर्मेण विदितात्मन:।
पुत्रो भगीरथो नाम जज्ञे परमधार्मिक:।।1.42.7।।

அறிவாற்றலுக்குப் பெயர் பெற்ற, தர்மவழியில் நடக்கின்ற திலீபன் இவ்வாறு தன் முன்னோர்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில், அவருக்கு பகீரதன் என்னும் பரம தார்மீகனான ஒரு புதல்வன் பிறந்தான்.

 

दिलीपस्तु महातेजा यज्ञैर्बहुभिरिष्टवान्।
त्रिंशद्वर्षसहस्राणि राजा राज्यमकारयत्।।1.42.8।।

மிகுந்த தேஜஸ் உடைய ராஜா திலீபன் பல யாகங்கள் செய்து, முப்பதாயிரம் ஆண்டுகள் மிகச் சிறப்பாக ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தார்.

 

अगत्वा निश्चयं राजा तेषामुद्धरणं प्रति ।
व्याधिना नरशार्दूल कालधर्ममुपेयिवान्।।1.42.9।।

மனிதருள் சிறந்தவனே! ராஜா திலீபன், தன் முன்னோர்களைக் கடைத்தேற்றுவது பற்றி, எந்த ஒரு முடிவான தீர்மானமும் செய்யாமல், நோய்வாய்ப்பட்டு, மரணம் அடைந்தார்.

 

इन्द्रलोकं गतो राजा स्वार्जितेनैव कर्मणा।
राज्ये भगीरथं पुत्रमभिषिच्य नरर्षभ:।।1.42.10।।

ராமா! ராஜா திலீபன் தனது புதல்வன் பகீரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்து விட்டுத் தனது நல்ல காரியங்களின் காரணமாக இந்திரலோகம் அடைந்திருந்தார்.

 

भगीरथस्तु राजर्षिर्धार्मिको रघुनन्दन।
अनपत्यो महातेजा: प्रजाकामस्स चाप्रज:।।1.42.11।।

ரகு நந்தனா! தார்மீகரும், மகா தேஜஸ் உடையவருமான ராஜரிஷி பகீரதன், புத்திர பாக்யம் இல்லாதவராய், புத்திரர்கள் வேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனால் அவருக்குப் புத்திரர்கள் உண்டாகவில்லை.

 

मन्त्रिष्वाधाय तद्राज्यं गङ्गावतरणे रत:।
स तपो दीर्घमातिष्ठद्गोकर्णे रघुनन्दन।।1.42.12।।

ऊर्ध्वबाहु: पञ्चतपा मासाहारो जितेन्द्रिय:।

ராமா! பகீரதர் கங்கையை எவ்வாறாயினும் பூமிக்குக் கொண்டு வர வேண்டித், தனது ராஜ்ஜியத்தை அமைச்சர்களிடம் ஒப்படைத்து விட்டுக், கோகர்ணம் என்னும் புனிதமான இடத்தில் கைகளிரண்டையும் தூக்கிக் கொண்டு, மாதத்துக்கு ஒரு முறை மட்டும் உணவு உட்கொண்டு, புலன்களைக் கட்டுப்படுத்தி, நீண்ட காலம் தவம் செய்தார்.



तस्य वर्षसहस्राणि घोरे तपसि तिष्ठत:।।1.42.13।।

अतीतानि महाबाहो तस्य राज्ञो महात्मन:।

सुप्रीतो भगवान् ब्रह्मा प्रजानां पतिरीश्वर:।।1.42.14।।

ராமா! அதே நிலையில் பகீரதர் ஆயிரம் ஆண்டுகள் தீவிரமாகத் தவம் புரிந்தார். அனைத்து உயிர்களுக்கும் தலைவரான பிரம்மதேவர் பகீரதருடைய தவத்தால் மகிழ்ந்தார்.

 

ततस्सुरगणैस्सार्धमुपागम्य पितामह:।
भगीरथं महात्मानं तप्यमानमथाब्रवीत्।।1.42.15।।

பிதாமகரான பிரம்மதேவர், பிற தேவகணங்களுடன், தவம் புரிந்து கொண்டிருந்த மகாத்மா பகீரதரிடம் வந்து இவ்வாறு கூறினார்:

 

भगीरथ महाभाग प्रीतस्तेऽहं जनेश्वर।
तपसा च सुतप्तेन वरं वरय सुव्रत।।1.42.16।।

“பாக்கியசாலியான அரசனே! பகீரதா! உன்னுடைய தீவிரமான இந்தத் தவத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். உனக்கு வேண்டும் வரத்தைக்கேள்!”



तमुवाच महातेजा: सर्वलोकपितामहम्।
भगीरथो महाभाग: कृताञ्जलिरुपस्थित:।।1.42.17।।

மகா தேஜஸ் உடைய பகீரதன் தன் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, பிரம்மதேவரின் முன்பு நின்று கொண்டு இவ்வாறு கூறினார்:

 

यदि मे भगवन् प्रीतो यद्यस्ति तपस: फलम्।
सगरस्यात्मजास्सर्वे मत्तस्सलिलमाप्नुयु:।।1.42.18।।

“பகவானே! தாங்கள் என் தவத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளீர்கள் என்றால், அந்தத் தவத்துக்குப் பலன் உண்டு என்றால், எனது முன்னோர்களான சகர புத்திரர்கள், என் மூலம் கங்கை நீரால், ஈமச்சடங்குகள் கிடைக்கப் பெறட்டும்!”

 

गङ्गायास्सलिलक्लिन्ने भस्मन्येषां महात्मनाम्।
स्वर्गं गच्छेयुरत्यन्तं सर्वे मे प्रपितामहा:।।1.42.19।।

கங்கையின் புனித நீரால் கழுவப்பட்டு, என் புகழ்மிக்க முன்னோர்கள் இறுதியாக ஸ்வர்க்கத்தை அடையவேண்டும்.”

 

देया च सन्ततिर्देव नावसीदेत्कुलं च न:।
इक्ष्वाकूणां कुले देव एष मेऽस्तु वर:पर:।।1.42.20।।

ப்ரபோ! என்னுடைய இக்ஷ்வாகு குலத்துக்கு சந்ததி வேண்டும். என்னுடன் அந்த வம்சம் முடிந்து விடக்கூடாது. இது தான் நான் கேட்கும் இன்னொரு வரம்.”

 

उक्तवाक्यं तु राजानं सर्वलोकपितामह:।
प्रत्युवाच शुभां वाणीं मधुरां मधुराक्षराम्।।1.42.21।।

பகீரதருடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட பிதமகரான பிரம்ம தேவர், இனிமையான குரலில் , இனிமையான வார்த்தைகளில் பதில் கூறினார்:

 

मनोरथो महानेष भगीरथ महारथ।
एवं भवतु भद्रं ते इक्ष्वाकुकुलवर्धन।।1.42.22।।

“மகாரதனே! பகீரதா! உன்னுடைய விருப்பம் மகத்தானது. இக்ஷ்வாகு வம்சத்தை விளங்க வைப்பவனே! உனது விருப்பம் நிறைவேறும். உனக்கு மங்களம் உண்டாகட்டும்!

 

इयं हैमवती गङ्गा ज्येष्ठा हिमवतस्सुता।
तां वै धारयितुं शक्तो हरस्तत्र नियुज्यताम्।।1.42.23।।

ஹிமவானின் மூத்த மகளாகிய கங்கையைத் தாங்கும் சக்தி சிவபெருமானிடம் மட்டுமே உள்ளது. ஆகவே, அவரிடம் வேண்டிக்கொள்.

 

गङ्गाया: पतनं राजन् पृथिवी न सहिष्यति।
तां वै धारयितुं वीर नान्यं पश्यामि शूलिन:।।1.42.24।।

அரசே! ஆகாயத்திலிருந்து கங்கை கீழிறங்கி வந்தால், அவளுடைய வேகத்தை இந்தப் பூமியில் தாங்க, சூலம் ஏந்திய சிவனைத்தவிர வேறு யாரையும் நான் காணேன்.”

 

तमेवमुक्त्वा राजानं गङ्गां चाभाष्य लोककृत्।
जगाम त्रिदिवं देवस्सहदेवैर्मरुद्गणै:।।1.42.25।।

படைப்புக்கடவுளான பிரம்மதேவர், பகீரத மன்னரிடமும் அதன் பின்னர் கங்கையிடமும் உரையாடிவிட்டுத் தேவர்களுடனும், மருத்கணங்களுடனும், ஸ்வர்க்கத்துக்குத் திரும்பிச் சென்றார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे द्विचत्वारिंशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  நாற்பத்திரண்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...