Thursday, 11 January 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 53

(வசிஷ்டர் விஸ்வாமித்திரரையும் அவருடைய சேனையையும் நல்ல முறையில் உபசரிக்கிறார். விஸ்வாமித்திரர் காமதேனுவைத் தனக்குக் கொடுத்து விடுமாறு கேட்கிறார். வசிஷ்டர் கொடுக்க மறுக்கிறார்.)

 

एवमुक्ता वसिष्ठेन शबला शत्रुसूदन।
विदधे कामधुक्कामान्यस्य यस्य यथेप्सितम्।।1.53.1।।

“எதிரிகளை அழிக்கும் ராமரே! வசிஷ்டர் இவ்வாறு கூறியதுமே, காமதேனு, அவரவர்க்கு வேண்டிய படி அனைவருக்கும் தேவையானவற்றை அளித்து அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றினாள்.

 

इक्षून्मधूं स्तथा लाजान्मैरेयांश्च वरासनान्।
पानानि च महार्हाणि भक्ष्यांश्चोच्चावचां स्तथा।।1.53.2।।

கரும்புச்சாறு, தேன், பொரி வகைகள், உற்சாகமூட்டும் குடிவகைகள் ஆகியவை அனைத்தும் நல்ல பாத்திரங்களில் இருந்து, பல வகையான உணவுப் பதார்த்தங்களுடன் பரிமாறப்பட்டன.

 

उष्णाढ्यस्योदनस्यात्र राशय: पर्वतोपमा:।
मृष्टान्नानि च सूपाश्च दधिकुल्यास्तथैव च।।1.53.3।।

नानास्वादुरसानां च षाडबानां तथैव च।
भाजनानि सुपूर्णानि गौडानि च सहस्रश:।।1.53.4।।

சூடான அன்னம் மலை போல் குவிந்திருந்தது. பலவகையான ருசி மிக்க அன்னங்கள், பருப்பினால் ஆன உணவு வகைகள் ஆகியவையுடன், பாலும், தயிரும் ஆறு போல் ஓடின. ஆயிரக் கணக்கான அறு சுவை நிறைந்த பதார்த்தங்களும், வெல்லத்தைச் சேர்த்துத் தயாரித்த தின்பண்டங்களும் பரிமாறப்பட்டன.

 

सर्वमासीत्सुसन्तुष्ठं हृष्टपुष्टजनायुतम्।
विश्वामित्रबलं राम वसिष्ठेनाभितर्पितम्।।1.53.5।।

ராமரே! வசிஷ்டரின் உபசரிப்பில் நன்கு உணவருந்திய படைவீரர்கள் அனைவரும்,மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.

 

विश्वामित्रोऽपि राजर्षिर्हृष्ट: पुष्टस्तदाभवत् ।
सान्त:पुरवरो राजा सब्राह्मणपुरोहित:।।1.53.6।।

விஸ்வாமித்திர மன்னரும், அவருடைய அந்தப்புர மகளிரும், அந்தணர்களும், புரோகிதர்களும் கூட மிகவும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

 

सामात्यो मन्त्रिसहितस्सभृत्य: पूजितस्तदा।
युक्त: परमहर्षेण वसिष्ठमिदमब्रवीत्।।1.53.7।।

அமைச்சர்களுடனும் தனது சேவகர்களுடனும் சேர்ந்து, வசிஷ்டரின் விருந்தோம்பலால் மிகவும் மகிழ்ந்த விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடம் கூறினார்:

 

पूजितोऽहं त्वया ब्रह्मन् पूजार्हेण सुसत्कृत:।
श्रूयतामभिधास्यामि वाक्यं वाक्यविशारद।।1.53.8।।

“மரியாதைக்குரியவரே! பூஜைக்குரிய தங்களால் நான் அன்புடனும் மரியாதையுடனும் உபசரிக்கப்பட்டேன். அழகாகப் பேசக்கூடியவரே! நான் சொல்வதைக் கேளுங்கள்!”

 

गवां शतसहस्रेण दीयतां शबला मम।
रत्नं हि भगवन्नेतद्रत्नहारी च प्रार्थिव:।।1.53.9।।

तस्मान्मे शबलां देहि ममैषा धर्मतो द्विज।

மரியாதைக்குரியவரே! சபலைக்கு (காமதேனுவுக்கு) பதிலாக நான் நூறாயிரம் பசுக்களைத் தருகிறேன்.  இந்தப்பசு ஒரு ரத்தினத்துக்கு ஒப்பானது. அரசர்களுக்கு ரத்தினங்களை எடுத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. ஆகவே, அந்தணரே! இந்தப் பசு, தர்மப்படி எனக்குத்தான் சொந்தம். இதை எனக்குக் கொடுத்து விடுங்கள்.”

 

एवमुक्तस्तु भगवान्वसिष्ठो मुनिसत्तम:।
विश्वामित्रेण धर्मात्मा प्रत्युवाच महीपतिम्।।1.53.10।।

இவ்வாறு விஸ்வாமித்திரர் கூறியதைக் கேட்ட வசிஷ்டர் பதிலிறுத்தார்:

 

नाहं शतसहस्रेण नापि कोटिशतैर्गवाम्।
राजन् दास्यामि शबलां राशिभी रजतस्य च ।।1.53.11।।

“அரசே!  நூறாயிரம் பசுக்கள் அல்ல; நூறு கோடி பசுக்கள் கொடுத்தாலும், குவியல் குவியலாக வெள்ளியைக் கொடுத்தாலும், நான் சபலையை உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்.

 

न परित्यागमर्हेयं मत्सकाशादरिन्दम ।
शाश्वती शबला मह्यं कीर्तिरात्मवतो यथा।।1.53.12।।

எதிரிகளை அடக்குபவரே! இந்த சபலை என்னிடம் இருந்து பிரிவதைத் தாங்கமாட்டாள். எனக்கும் அவளுக்கும் உள்ள பிணைப்பு, தர்மாத்மாவுக்கும் புகழுக்கும் உள்ளது போன்ற நிரந்தரமான பிணைப்பாகும்.

 

अस्यां हव्यं च कव्यं च प्राणयात्रा तथैव च।
आयत्तमग्निहोत्रं च बलिर्होमस्तथैव च।।1.53.13।।

கடவுளுக்குச் செய்யும் நிவேதனத்துக்கும், பித்ருக்களுக்குச் செய்யும் நிவேதனங்களுக்கும், அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கும், அக்கினி ஹோத்திரத்தை நடத்துவதற்கும், ஹோமங்களை நடத்துவதற்கும், பூத பலிக்கும், நான் இவளையே நம்பியுள்ளேன்.

 

स्वाहाकारवषट्कारौ विद्याश्च विविधा स्तथा।
आयत्तमत्र राजर्षे सर्वमेतन्न संशय:।।1.53.14।।

ராஜரிஷியே! ஸ்வாஹா, வஷட் போன்ற மந்திரங்களும், பலவிதமான கல்விகளும் இவளையே நம்பி இருக்கின்றன என்பதில் சந்தேகமேயில்லை.

 

सर्वस्वमेतत्सत्येन मम तुष्टिकरी सदा।
कारणैर्बहुभी राजन्न दास्ये शबलां तव।।1.53.15।।

இவள் தான் எனக்கு எல்லாமாக இருக்கிறாள். என்னுடைய அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறாள். அரசே! இப்படிப்பட்ட பல காரணங்களால், நான் சபலையைத் தங்களுக்குக் கொடுக்க மாட்டேன்.”

 

वसिष्ठेनैवमुक्तस्तु विश्वामित्रोऽब्रवीत्तत:।
संरब्धतरमत्यर्थं वाक्यं वाक्यविशारद:।।1.53.16।।

சிறப்பாகப் பேசக்கூடிய விஸ்வாமித்திரர், வசிஷ்டரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இன்னும் எழுச்சியுடன் கூறினார்:

 

हैरण्यकक्ष्याग्रैवेयान् सुवर्णाङ्कुशभूषितान्।
ददामि कुञ्जरांस्तेषां सहस्राणि चतुर्दश।।1.53.17।।

கழுத்திலும், இடுப்பிலும், தங்கச்சங்கிலிகளால் அலங்கரிக்கப்பட்ட,  தங்கத்தினால் ஆகிய அங்குசங்களுடன் கூடிய,  பதினான்காயிரம் யானைகளை நான் தங்களுக்குத் தருகிறேன்.

 

हैरण्यानां रथानां च श्वेताश्वानां चतुर्युजाम्।
ददामि ते शतान्यष्टौ किङ्किणीकविभूषितान्।।1.53.18।।

சிறிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட, ஒவ்வொன்றிலும், நான்கு வெண்புரவிகள் பூட்டப்பட்ட எண்ணூறு தங்கத்தேர்களை நான் தங்களுக்குத் தருகிறேன்.

 

हयानां देशजातानां कुलजानां महौजसाम्।
सहस्रमेकं दश च ददामि तव सुव्रत।।1.53.19।।

மகரிஷியே! நல்ல நாட்டிலும், நல்ல குலத்திலும் பிறந்த, வலிமை மிக்க பதினோறாயிரம்  குதிரைகளை நான் தங்களுக்குத் தருகிறேன்.

 

नानावर्णविभक्तानां वयस्स्थानां तथैव च ।
ददाम्येकां गवां कोटिं शबला दीयतां मम।।1.53.20।।

பல நிறங்களில் உள்ள, இளமையான ஒரு கோடி பசுக்களை நான் தங்களுக்குத் தருகிறேன். தயவு செய்து சபலையை எனக்குக் கொடுத்து விடுங்கள்.

 

यावदिच्छसि रत्नं वा हिरण्यं वा द्विजोत्तम।
तावद्ददामि तत्सर्वं शबला दीयतां मम।।1.53.21।।

அந்தணர்களுள் சிறந்தவரே!  நீங்கள் விரும்பும் அளவு ரத்தினங்களையும், தங்கத்தையும் தருகிறேன். வேறு எதைக் கேட்டாலும் தருகிறேன். தயவு செய்து சபலையை எனக்குக் கொடுத்து விடுங்கள். “

 

एवमुक्तस्तु भगवान् विश्वामित्रेण धीमता।
न दास्यामीति शबलां प्राह राजन् कथञ्चन।।1.53.22।।

இவ்வாறு பலவகையாக வேண்டிக்கொண்டும், வசிஷ்டர் அவரிடம் ‘சபலையைக் கொடுக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டார்.

 

एतदेव हि मे रत्नमेतदेव हि मे धनम्।
एतदेव हि सर्वस्वमेतदेव हि जीवितम्।।1.53.23।।

“இது தான் என்னுடைய ரத்தினம். இது தான் என்னுடைய செல்வம். என்னுடைய எல்லாமும் இது தான். என் உயிரே இது தான்.

 

दर्शश्च पूर्णमासश्च यज्ञाश्चैवाप्तदक्षिणा:।
एतदेव हि मे राजन् विविधाश्च क्रियास्तथा।।1.53.24।।

அரசே! அமாவஸ்யை மற்றும் பௌர்ணமியின் போது செய்யப்படும் யாகங்களும், நிறைய தக்ஷிணைகள் கிடைக்கும் யாகங்களும், பலவிதமான சடங்குகளும், இது தான்.

अदोमूला: क्रियास्सर्वा मम राजन्न संशय:।
बहुना किं प्रलापेन न दास्ये कामदोहिनीम्।।1.53.25।।

அரசே! என்னுடைய எல்லாக்காரியங்களுக்கும் அடிப்படையே இந்தப் பசு தான். ஏன் ஆதிகமாகப் பேசவேண்டும்? நான் விருப்பங்களை நிறைவேற்றும் இந்தப் பசுவை உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்.”


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे त्रिपञ्चाशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  ஐம்பத்து மூன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...