Friday, 19 January 2024

  

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 60

(திரிசங்கு உடலுடன் ஸ்வர்க்கத்துக்குப் போகிறான்; ஆனால், இந்திரன் அவனை அங்கிருந்து வெளியேற்றி விடுகிறான். விஸ்வாமித்திரர் அவனுக்காக ஒரு ஸ்வர்க்கத்தையே ஸ்ருஷ்டிக்கிறார்.)


तपोबलहतान् कृत्वा वासिष्ठान् समहोदयान्।
ऋषिमध्ये महातेजा विश्वामित्रोऽभ्यभाषत।।1.60.1।।

மஹா தேஜஸ் உடைய விஸ்வாமித்திரர் தனது தவத்தின் ஆற்றலால் வசிஷ்டரின் புதல்வர்களையும், மகோதயரையும் அழித்த பின்னர் அங்கிருந்த ரிஷிகளிடம் இவ்வாறு கூறினார்:

 

अयमिक्ष्वाकुदायादस्त्रिशंकुरिति विश्रुत:।
धर्मिष्ठश्च वदान्यश्च मां चैव शरणं गत:।।1.60.2।।

तेनानेन शरीरेण देवलोकजिगीषया।

இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த தர்மாத்மாவும், தாராள மனம் கொண்டவனுமான திரிசங்கு எனும் இந்த மன்னன், தனது உடலுடனேயே தேவலோகம் செல்லும் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, என்னைச் சரணடைந்துள்ளான்.

 

यथाऽयं स्वशरीरेण स्वर्गलोकं गमिष्यति।।1.60.3।।

तथा प्रवर्त्यतां यज्ञे भवद्भिश्च मया सह।

இந்த மன்னன் உடலுடன் தேவலோகம் செல்வதற்கான வேள்வியை என்னுடன் சேர்ந்து நீங்களும் செய்ய வேண்டும்.”

 

विश्वामित्रवच श्श्रुत्वा सर्व एव महर्षय:।।1.60.4।।
ऊचुस्समेत्य सहिता धर्मज्ञा धर्मसंहितम्।

விஸ்வாமித்திரரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, தர்ம விதிகளை அறிந்த அந்த ரிஷிகள் அனைவரும் சேர்ந்து இவ்வாறு பேசிக்கொண்டார்கள்:

 

अयं कुशिकदायादो मुनि: परमकोपन:।।1.60.5।।

यदाह वचनं सम्यगेतत्कार्यं न संशय:।
अग्निकल्पो हि भगवान् शापं दास्यति रोषित:।।1.60.6।।

“குசிக வம்சத்தில் பிறந்த இந்த விஸ்வாமித்திர முனிவர் எளிதில் கோபவசப் படுபவர்.அவர் செய்யச் சொன்ன செயல்களை நாம் மிக நன்றாக நிறைவேற்ற வேண்டும். அவர் நெருப்புக்கு நிகரானவர்.  கோபம் வரும் படி நடந்துகொண்டால் சாபம் கொடுத்து விடுவார்.

तस्मात्प्रवर्त्यतां यज्ञ स्सशरीरो यथा दिवम्।
गच्छेदिक्ष्वाकुदायादो विश्वामित्रस्य तेजसा।।1.60.7।।

तथा प्रवर्त्यतां यज्ञ स्सर्वे समधितिष्ठत।

ஆகவே விஸ்வாமித்திரரின் ஆன்மீக தேஜஸ்ஸின் பலத்தால், இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த இந்த மன்னனை சரீரத்துடன் ஸ்வர்க்கத்துக்கு அனுப்ப வேண்டிச் செய்ய வேண்டிய வேள்வியைத் தொடங்குவோம்”  என்று கூறி அவர்கள் வேள்வியைத் தொடங்கினார்கள்.

 

एवमुक्त्वा महर्षयः चक्रुस्तास्ता:क्रियास्तदा।।1.60.8।।

याजकश्च महातेजा विश्वामित्रोऽभवत्क्रतौ।

அந்த மகரிஷிகள் எல்லோரும், இவ்வாறு கூறி விட்டு, வேள்விக்கான பல வித வேலைகளைச் செய்தார்கள். மகா தேஜஸ் உடைய விஸ்வாமித்திரர் முதன்மைப் புரோகிதராக அமர்ந்து வேள்வியை நடத்தினார்.

 

ऋत्विजश्चानुपूर्व्येण मन्त्रवन्मन्त्रकोविदा:।।1.60.9।।

चक्रु: कर्माणि सर्वाणि यथाकल्पं यथाविधि।

மந்திரங்களை நன்கு அறிந்த புரோகிதர்கள், அந்த வேள்வியை அதற்கேற்ற கல்பத்தின் படி, அதற்கேற்ற மந்திரங்களைச் சொல்லி, அதற்கேற்ற விதிகளின் படி, அனைத்துக் கர்மாக்களையும், அவரவர் தகுதிப்படி செய்தார்கள்.

 

तत: कालेन महता विश्वामित्रो महातपा:।।1.60.10।।

चकारावाहनं तत्र भागार्थं सर्वदेवता:।

நீண்ட நேரம் அவ்வாறு வேள்வியை நடத்திய பின்னர், விஸ்வாமித்திரர், அவரவருடைய பாகங்களைப் பெற்றுக்கொள்ள வருமாறு தேவதைகளை அழைத்தார்.

 

नाभ्यागमंस्तदाहूता भागार्थं सर्वदेवता:।।1.60.11।।

तत: क्रोधसमाविष्टो विश्वामित्रो महामुनि:।
स्रुवमुद्यम्य सक्रोधस्त्रिशङ्कुमिदमब्रवीत्।।1.60.12।।

ஆனால் விஸ்வாமித்திரர் அழைத்தும், தங்கள் பாகங்களைப் பெற்றுக்கொள்ள தேவதைகள் வரவில்லை. அதனால் மிகவும் கோபமடைந்த விஸ்வாமித்திரர், வேள்வியில்  நெய்யைச் சொரியும் கரண்டியைக் கையில் எடுத்துக் கொண்டு, திரிசங்குவிடம் இவ்வாறு கூறினார்:

 

 

पश्य मे तपसो वीर्यं स्वार्जितस्य नरेश्वर ।
एष त्वां सशरीरेण नयामि स्वर्गमोजसा।।1.60.13।।

दुष्प्रापं सशरीरेण दिवं गच्छ नराधिप।

“அரசே! நான் சம்பாதித்துள்ள தவத்தின் மகிமையைப் பார்! என் ஆன்மீக சக்தியால், உன்னை, உனது சரீரத்துடன் ஸ்வர்க்கத்துக்கு அனுப்புகிறேன். அரசே! வேறு யாராலும் செய்ய முடியாத இந்தச் செயலை நான் செய்கிறேன். உன்னுடைய சரீரத்துடனேயே, நீ ஸ்வர்க்கத்துக்குச் செல்வாயாக!

 

स्वार्जितं किञ्चिदप्यस्ति मया हि तपस:फलम्।।1.60.14।।

राजन् स्वतेजसा तस्य सशरीरो दिवं व्रज।

நான் சம்பாதித்துள்ள தவத்தின் பலன் சிறிதளவாவது இருக்குமானால், நான் உன்னை சரீரத்துடன் ஸ்வர்க்கத்துக்கு அனுப்புகிறேன்.”

 

उक्तवाक्ये मुनौ तस्मिन् सशरीरो नरेश्वर:।।1.60.15।।

दिवं जगाम काकुत्स्थ मुनीनां पश्यतां तदा।

“காகுஸ்தரே! விஸ்வாமித்திரர் இவ்வாறு கூறியவுடனே, அந்த முனிவர்கள் கண் முன்னேயே, திரிசங்கு ஸ்வர்க்கத்துக்குச் சென்றான்.

 

देवलोकगतं दृष्ट्वा त्रिशङ्कुं पाकशासन:।।1.60.16।।

सह सर्वैस्सुरगणैरिदं वचनमब्रवीत्।

திரிசங்கு சரீரத்துடனேயே, ஸ்வர்க்கத்துக்கு வந்ததைக் கண்ட இந்திரன், பிற தேவர்களுடன் வந்து, திரிசங்குவிடம் இவ்வாறு கூறினார்.:

 

त्रिशङ्को गच्छ भूयस्त्वं नासि स्वर्गकृतालय:।।1.60.17।।

गुरुशापहतो मूढ पत भूमिमवाक्छिरा:।

“திரிசங்குவே! ஸ்வர்க்கத்துக்கு வருவதற்கான தகுதி உன்னிடம் இல்லை. முட்டாளே! திரும்பிப் போ! உனது குருவின் சாபத்துக்கு ஆளான நீ, தலை குப்புற பூமியில் விழுவாய்!”

 

एवमुक्तो महेन्द्रेण त्रिशङ्कुरपतत्पुन:।।1.60.18।।

विक्रोशमानस्त्राहीति विश्वामित्रं तपोधनम्।

இந்திரன் இவ்வாறு கூறியவுடனே, திரிசங்கு, “விஸ்வாமித்திரரே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறிக்கொண்டே, பூமியை நோக்கி விழத் தொடங்கினான்.

 

तच्छ्रुत्वा वचनं तस्य क्रोशमानस्य कौशिक:।।1.60.19।।

रोषमाहारयत्तीव्रं तिष्ठ तिष्ठेति चाब्रवीत्।

இவ்வாறு அழுது கொண்டே பூமியை நோக்கி விழுந்து கொண்டிருக்கும் திரிசங்குவைப் பார்த்து, மிகுந்த கோபத்துடன் விஸ்வாமித்திரர், “ நில்! நில்!” என்று ஆணையிட்டார்.

 

ऋषिमध्ये स तेजस्स्वी प्रजापतिरिवापर:।।1.60.20।।

सृजन् दक्षिणमार्गस्थान् सप्तर्षीनपरान् पुन:।

नक्षत्रमालामपरामसृजत्क्रोधमूर्च्छित:।।1.60.21।।

दक्षिणां दिशमास्थाय मुनिमध्ये महायशा:।

இன்னொரு பிரம்மாவைப் போல் காணப்பட்ட விஸ்வாமித்திரர், அந்த ரிஷிகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, தெற்குப் பகுதியில்,  இன்னொரு ஸப்தரிஷி மண்டலத்தை உருவாக்கினார். மிகுந்த கோபத்துடன் நக்ஷத்திரக் கூட்டங்களையும் உருவாக்கினார்.

 

सृष्ट्वा नक्षत्रवंशं च क्रोधेन कलुषीकृत:।।1.60.22।।

अन्यमिन्द्रं करिष्यामि लोको वा स्यादनिन्द्रक:।

दैवतान्यपि स क्रोधा त्स्रष्टुं समुपचक्रमे।।1.60.23।।

நக்ஷத்திரங்களை உருவாக்கிய பின், கோபம் முற்றிய  நிலையில் விஸ்வாமித்திரர் கூறினார்: “ நான் இன்னொரு இந்திரனையே உருவாக்குவேன். இல்லையென்றால், இந்த உலகம் இந்திரன் இல்லாமலே இருக்கட்டும்” என்று கூறித் தேவர்களைப் படைக்க ஆரம்பித்தார்.

 

तत: परमसम्भ्रान्तास्सर्षिसङ्घास्सुरासुरा:।
विश्वामित्रं महात्मानमूचु: सानुनयं वच:।।1.60.24।।

விஸ்வாமித்திரரின் செயல்களை ஆச்சரியத்துடனும், பயத்துடனும் பார்த்துக் கொண்டிருந்த ரிஷிகளும், தேவர்களும், அசுரர்களும், மிக்க பணிவுடன் அவரிடம் கூறினார்கள்:

 

अयं राजा महाभाग गुरुशापपरिक्षत: ।

सशरीरो दिवं यातुं नार्हत्येव तपोधन ।।1.60.25।।

“தவச்செல்வரே! தனது குருவினால் சபிக்கப்பட்ட இந்த அரசன் தனது சரீரத்துடன் ஸ்வர்க்கம் புகத் தகுதியில்லாதவன்.

 

तेषां तद्वचनं श्रुत्वा देवानां मुनिपुङ्गव: ।
अब्रवीत्सुमहद्वाक्यं कौशिक: सर्वदेवता:।।1.60.26।।

கௌசிகராகிய விஸ்வாமித்திரர் தேவர்களின் சொற்களைக் கேட்டு, அனைத்து தேவர்களையும் பார்த்து இவ்வாறு கூறினார்:

 

सशरीरस्य भद्रं वस्त्रिशङ्कोरस्य भूपते:।
आरोहणं प्रतिज्ञाय नानृतं कर्तुमुत्सहे।।1.60.27।।

“உங்களுக்கு நன்மை உண்டாகட்டும்! திரிசங்குவிடம், அவனை சரீரத்துடன் ஸ்வர்க்கத்துக்கு அனுப்புவதாக வாக்களித்திருக்கிறேன். என்னுடைய அந்த வாக்கைப் பொய்யாக்க நான் விரும்பவில்லை.

 

स्वर्गोऽस्तु सशरीरस्य त्रिशङ्कोरस्य शाश्वत:।

नक्षत्राणि च सर्वाणि मामकानि ध्रुवाण्यथ।।1.60.28।।

यावल्लोका धरिष्यन्ति तिष्ठन्त्वेतानि सर्वश:।

मत्कृतानि सुरा स्सर्वे तदनुज्ञातुमर्हथ।।1.60.29।।

“நான் படைத்துள்ள இந்த ஸ்வர்க்கம், இந்தத் திரிசங்கு, சரீரத்துடன் நிலையாக இருக்கும் இடமாக இருக்க வேண்டும். இந்த உலகங்கள் இருக்கும் வரை நான் படைத்துள்ள இந்த நக்ஷத்திரங்களும், இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும். “

 

एवमुक्ता: सुरास्सर्वे प्रत्यूचुर्मुनिपुङ्गवम्।

एवं भवतु भद्रं ते तिष्ठन्त्वेतानि सर्वश:।।1.60.30।।

गगने तान्यनेकानि वैश्वानरपथाद्बहि:।

नक्षत्राणि मुनिश्रेष्ठ तेषु ज्योतिष्षु जाज्वलन्।।1.60.31।।

अवाक्छिरास्त्रिशङ्कुश्च तिष्ठत्वमरसन्निभ:।

விஸ்வாமித்திரரின் சொற்களைக் கேட்ட தேவர்கள், அந்த முனிஸ்ரேஷ்டரைப் பார்த்து, ”உங்களுக்கு நன்மை உண்டாகட்டும்! நீங்கள் சொன்னது போல் ஆகட்டும்! நீங்கள் படைத்துள்ள நக்ஷத்திரங்கள் வைஸ்வானரனின் பாதைக்கு வெளியே, ஆகாயத்தில் இருக்கட்டும். அந்த நக்ஷத்திரங்களுக்கு நடுவே, திரிசங்கு, பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டு, தலை கீழான நிலையில் எப்போதும் இருக்கட்டும்!”

 

अनुयास्यन्ति चैतानि ज्योतींषि नृपसत्तमम्।।1.60.32।।

कृतार्थं कीर्तिमन्तं च स्वर्गलोकगतं यथा।

ஸ்வர்க்க லோகத்தை அடைந்தவனைப் பின்தொடர்வதைப் போலவே, தனது விருப்பம் நிறைவேறிய திரிசங்கு மன்னனை, இந்த நக்ஷத்திரங்கள் பின் தொடரும்.

 

विश्वामित्रस्तु धर्मात्मा सर्वदेवैरभिष्टुत:।।1.60.33।।

ऋषिभिश्च महातेजा बाढमित्याह देवता:।

அதைக் கேட்டு, தேவர்களாலும், ரிஷிகளாலும், புகழப்பட்ட மகாதேஜஸ் உடைய விஸ்வாமித்திரர், தேவர்களிடத்தில், “அப்படியே ஆகட்டும்!” என்று கூறினார்.

 

ततो देवा महात्मानो मुनयश्च तपोधना:।
जग्मुर्यथाऽऽगतं सर्वे यज्ञस्यान्ते नरोत्तम।।1.60.34।।

மனிதருள் சிறந்த ராமரே! இவ்வாறு வேள்வி முடிந்தவுடன், தேவர்களும், ரிஷிகளும், தாங்கள் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे षष्टितमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  அறுபதாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...