Saturday, 20 January 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 62

(விஸ்வாமித்திரர் சுனச்சேபனைக் காப்பாற்றிப் பின், தனது தவத்தைத் தொடர்கிறார்.)

शुनश्शेफं नरश्रेष्ठ गृहीत्वा तु महायशा:।
व्यश्राम्यत् पुष्करे राजा मध्याह्ने रघुनन्दन।।1.62.1।।

 “ரகு நந்தனரே! அம்பரீச மன்னர் சுனச்சேபனைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் போது, வழியில், பகல் வேளையில், புஷ்கரம் என்னும் இடத்தில், சிறிது ஓய்வெடுத்துக் கொள்வதற்காகத் தங்கினார்.

 

तस्य विश्रममाणस्य शुनश्शेफो महायशा:।
पुष्करक्षेत्रमागम्य विश्वामित्रं ददर्श ह।।1.62.2।।

तप्यन्तमृषिभिस्सार्धं मातुलं परमातुर:।

அரசன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, மிகவும் வருத்தத்தில் இருந்த சுனச்சேபன், அங்கே தவம் செய்து  கொண்டிருந்த ரிஷிகளுடன் தனது தாய் மாமாவான விஸ்வாமித்திரரைக் கண்டான்.

 

विवर्णवदनो दीनस्तृष्णया च श्रमेण च।।1.62.3।।

पपाताङ्के मुनेराशु वाक्यं चेदमुवाच ह।

தாகத்தாலும், களைப்பினாலும், வெளிறிப் போயிருந்த பரிதாபத்துக்குரிய சுனச்சேபன் முனிவரின் மடியில் விழுந்து இவ்வாறு பேசலானான்:



न मेऽस्ति माता न पिता ज्ञातयो बान्धवा: कुत:।।1.62.4।।

त्रातुमर्हसि मां सौम्य धर्मेण मुनिपुङ्गव।

“அன்பானவரே! முனி புங்கவரே! எனக்குத் தாயும் இல்லை; தந்தையும் இல்லை; நண்பர்களோ, உறவினர்களோ இல்லை. தாங்கள் தான் என்னை தர்ம வழிப்படி காப்பாற்ற வேண்டும்.

 

त्राता त्वं हि मुनिश्रेष्ठ सर्वेषां त्वं हि भावन:।।1.62.5।।

राजा च कृतकार्यस्स्यादहं दीर्घायुरव्यय:।

स्वर्गलोकमुपाश्नीयां तपस्तप्त्वाह्यनुत्तमम्।।1.62.6।।

முனி ஸ்ரேஷ்டரே! தாங்கள் தான் அனைவரையும் காத்து ரக்ஷிப்பவர். தாங்கள் பிறருடைய நலம் பேணுபவர். அரசர் அவருடைய காரியத்தை நல்ல படி முடிக்கட்டும்.  ஆனால், நான் நீண்ட காலம் வாழ்ந்து, நல்ல படி தவம் செய்து ஸ்வர்க்க லோகத்தை அனுபவிக்க வேண்டும்.

 

त्वं मे नाथो ह्यनाथस्य भव भव्येन चेतसा।

पितेव पुत्रं धर्मात्मं स्त्रातुमर्हसि किल्बिषात्।।1.62.7।।

தர்மாத்மாவே! என் மேல் இரங்கி, இந்த அனாதையைக் காத்தருளுங்கள். தன் புதல்வனைக் காப்பாற்றும் தந்தையைப் போல, என்னை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுங்கள்.”

 

तस्य तद्वचनं श्रुत्वा विश्वामित्रो महातपा:।
सान्त्वयित्वा बहुविधं पुत्रानिदमुवाच ह।।1.62.8।।

சுனச்சேபன் கூறியதைக் கேட்ட விஸ்வாமித்திரர் அவனைப் பலவிதமாகச் சமாதானப் படுத்திப் பின் தன் புதல்வர்களிடம் கூறினார்:

 

यत्कृते पितर: पुत्रान् जनयन्ति शुभार्थिन:।
परलोकहितार्थाय तस्य कालोऽयमागत:।।1.62.9।।

பர லோகத்தில் தனக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்பியே பெற்றோர்கள் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். அதற்கான காலம் இப்போது வந்திருக்கிறது.

 

अयं मुनिसुतो बालो मत्तश्शरणमिच्छति।
अस्य जीवितमात्रेण प्रियं कुरुत पुत्रका:।।1.62.10।।

“முனிவரின் புதல்வனாகிய இந்தப் பாலகன் என்னைச் சரணடைந்திருக்கிறான். புதல்வர்களே! உங்கள் உயிரைக் கொடுத்து, இவனுக்கு நன்மை செய்யுங்கள்.

 

सर्वे सुकृतकर्माणस्सर्वे धर्मपरायणा: ।
पशुभूता नरेन्द्रस्य तृप्तिमग्ने: प्रयच्छत ।।1.62.11।।

நீங்கள் அனைவரும் நல்ல செயல்களில் ஈடுபட்டிருப்பவர்கள். அறவழியில் நடப்பவர்கள். அரசனுக்கு வேள்விப் பசுவாகப் போய், அக்கினிக்குத் திருப்தியைக் கொடுங்கள்.

 

नाथवांश्च शुनश्शेफो यज्ञश्चाविघ्नितो भवेत्।
देवतास्तर्पिताश्चस्युर्मम चापि कृतं वच:।।1.62.12।।

(நீங்கள் யாராவது ஒருவர் அவனுக்கு பதிலாக வேள்விப் பசுவாகச் சென்றால்) சுனச்சேபன் காப்பாற்றப் படுவான். வேள்வியும் தடையின்றி நிறைவேறும். தேவர்கள் திருப்தியடைவார்கள். என்னுடைய வாக்கும் காப்பாற்றப்படும்.”

 

मुनेस्तु वचनं श्रुत्वा मधुच्छन्दादय स्सुता:।
साभिमानं नरश्रेष्ठ सलीलमिदमब्रुवन्।।1.62.13।।

மனிதருள் சிறந்தவரே! விஸ்வாமித்திரனின் புதல்வராகிய மதுச்சந்தரும், மற்றவர்களும், முனிவரின் வார்த்தைகளைக் கேட்டுத் தன்மானத்துடனும், விளையாட்டாகவும் இவ்வாறு கூறினார்கள்:

 

कथमात्मसुतान् हित्वा त्रायसेऽन्यसुतं विभो।
अकार्यमिव पश्याम श्श्वमांस इव भोजने।।1.62.14।।

“ப்ரபோ! தன்னுடைய புதல்வனைக் கை விட்டு விட்டு, இன்னொருவரின் புதல்வனைக் காப்பாற்றுவது, நாயின் மாமிசத்தை உண்பது போல், செய்யத்தகாத செயல்.”

 

तेषां तद्वचनं श्रुत्वा पुत्राणां मुनिपुङ्गव:।
क्रोधसंरक्तनयनो व्याहर्तुमुपचक्रमे।।1.62.15।।

தனது புதல்வர்களின் வார்த்தைகளைக் கேட்டுக், கோபத்தால் சிவந்த கண்களுடன், விஸ்வாமித்திரர் பேசத்தொடங்கினார்:

 

निस्साध्वसमिदं प्रोक्तं धर्मादपि विगर्हितम्।
अतिक्रम्य तु मद्वाक्यं दारुणं रोमहर्षणम्।।1.62.16।।

“நீங்கள் என்னுடைய வார்த்தைகளை மீறியது மட்டுமல்லாது, கண்டிக்கத் தக்க வகையில் நடந்து கொண்டுள்ளீர்கள். இத்தனை துணிச்சலுடன், நீங்கள் கூறிய கடுமையான சொற்களைக் கேட்டு எனக்கு மயிர்க்கூச்செறிகிறது.

 

श्वमांसभोजिनस्सर्वे वासिष्ठा इव जातिषु।
पूर्णं वर्षसहस्रं तु पृथिव्यामनुवत्स्यथ।।1.62.17।।

நீங்கள் அனைவரும், முழுமையாக ஆயிரம் ஆண்டுகள் வசிஷ்டரின் புதல்வர்களைப் போல், நாயின் மாமிசத்தைத் தின்று கொண்டு, திரிவீர்களாக!”

 

कृत्वा शापसमायुक्तान् पुत्रान् मुनिवरस्तथा।
शुनश्शेफमुवाचार्तं कृत्वा रक्षां निरामयम्।।1.62.18।।

விஸ்வாமித்திரர் தன் புதல்வர்களுக்கு இவ்வாறு சாபம் கொடுத்ததைக் கண்ட சுனச்சேபன் மிகவும் வருத்தம் அடைந்தான். அவனுடைய துயரத்தைத் தீர்க்கும் விதமாக, விஸ்வாமித்திரர் இவ்வாறு கூறினார்:

 

पवित्रपाशैरासक्तो रक्तमाल्यानुलेपन:।
वैष्णवं यूपमासाद्य वाग्भिरग्निमुदाहर ।।1.62.19।।

 “உன் உடல் முழுவதும் சிவந்த சந்தனத்தைப் பூசி, சிவந்த பூக்களால் ஆன மாலைகளை அணிவித்து, உன்னை, யாகப் பசுவைக் கட்டி வைக்கும், வைஷ்ணவ யூபத்தில், புனிதமான கயிற்றால் கட்டுவார்கள். அப்போது , நீ இந்த மந்திரங்களால் அக்கினியை ஸ்தோத்திரம் செய்.

 

इमे तु गाथे द्वे दिव्ये गायेथा मुनिपुत्रक।
अम्बरीषस्य यज्ञेऽस्मिंस्तत स्सिद्धिमवाप्स्यसि।।1.62.20।।

“முனிவரின் புதல்வனே! இந்த இரண்டு புனிதமான மந்திரங்களையும், அம்பரீசனின் வேள்வியின் போது சொல். அதன் பிறகு, உனக்கு வேண்டியதை அடைவாய்!”

 

शुनश्शेफो गृहीत्वा ते द्वे गाथे सुसमाहित:।
त्वरया राजसिंहं तमम्बरीषमुवाच ह।।1.62.21।।

சுனச்சேபன் அந்த இரு மந்திரங்களையும், கவனத்துடன், நன்றாக மனதில் ஏற்றிக்கொண்ட பின்னர், அம்பரீசனிடம் விரைந்து சென்று இவ்வாறு கூறினான்:

 

राजसिंह महासत्त्व शीघ्रं गच्छावहे सद:।
निर्वर्तयस्व राजेन्द्र दीक्षां च समुपाविश।।1.62.22।।

“வலிமை மிகுந்த அரசே! தாங்கள். அரசர்களுள் சிங்கம் போன்றவர். நாம் விரைந்து வேள்விச் சாலைக்குச் செல்வோம். வேள்வி தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டிய சடங்குகளை முடித்து விட்டு, வேள்வியை ஆரம்பியுங்கள்!”

 

तद्वाक्यमृषिपुत्रस्य श्रुत्वा हर्षसमुत्सुक: ।
जगाम नृपति श्शीघ्रं यज्ञवाटमतन्द्रित:।।1.62.23।।

முனிவரின் புதல்வன் இவ்வாறு கூறியதைக் கேட்ட அம்பரீச மன்னர், மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், வேள்விச் சாலையை நோக்கி விரைந்தார்.

 

सदस्यानुमते राजा पवित्रकृतलक्षणम्।
पशुं रक्ताम्बरं कृत्वा यूपे तं समबन्धयत्।।1.62.24।।

வேள்வியை நடத்தும் புரோகிதர்களின் சம்மதத்துடன், அரசன் சுனச்சேபனுக்கு தர்ப்பைப் புல்லினால் ஆன அடையாளங்களை அணிவித்து, சிவப்பு ஆடை உடுக்க வைத்து, வேள்விப்பசுவாக, அவனைத் தூணில் கட்டினான்.

 

सबद्धो वाग्भिरग्य्राभिरभितुष्टाव वै सुरौ।
इन्द्रमिन्द्रानुजं चैव यथावन्मुनिपुत्रक:।।1.62.25।।

இவ்வாறு தூணில் கட்டப்பட்ட நிலையில், சுனச்சேபன், இந்திரனையும், இந்திரனின் தம்பியான உபேந்திரனையும், புகழ்ந்து, மிகச் சிறந்த ஸ்தோத்திரங்களைக் கூறினான்.

 

तत: प्रीत स्सहस्राक्षो रहस्यस्तुतितर्पित:।
दीर्घमायुस्तदा प्रादाच्छुनश्शेफाय राघव ।।1.62.26।।

ராகவரே! அந்த ரகசியமான ஸ்தோத்திரத்தால் மிகவும் திருப்தியடைந்த இந்திரன் சுனச்சேபனுக்கு, நீண்ட ஆயுளை வழங்கினான்.

 

स च राजा नरश्रेष्ठ यज्ञस्य च समाप्तवान्।
फलं बहुगुणं राम सहस्राक्षप्रसादजम्।।1.62.27।।

ராமரே! அரசனும் அந்த வேள்வியால், இந்திரனிடமிருந்து, எண்ணற்ற பரிசுகளைப் (தான் எதிர் பார்த்ததை விடப் பலமடங்கு அதிகமாக) பெற்றான்.

 

विश्वामित्रो ऽपि धर्मात्मा भूयस्तेपे महातपा:।
पुष्करेषु नरश्रेष्ठ दशवर्षशतानि च।।1.62.28।।

மனிதருள் சிறந்த ராமரே! மஹாதபஸ்வியான விஸ்வாமித்திரரும், அந்தப் புஷ்கரம் என்ற இடத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடுமையாகத் தவம் செய்தார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे द्विषष्टितमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  அறுபத்திரண்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...