Sunday, 4 February 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 73

(ராமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்கினன் ஆகியோருக்குத் திருமணம் நடைபெறுகிறது.)


यस्मिंस्तु दिवसे राजा चक्रे गोदानमुत्तमम् ।
तस्मिं स्तु दिवसे शूरो युधाजित्समुपेयिवान्।।1.73.1।।

தசரத மன்னர் உத்தமமான கோதானம் செய்த அன்று, வீரரான யுதாஜித் அங்கு வந்து சேர்ந்தார்.

 

पुत्र: केकयराजस्य साक्षाद्भरतमातुल:।
दृष्ट्वा पृष्ट्वा च कुशलं राजानमिदमब्रवीत्।।1.73.2।।

கேகய மன்னரின் புதல்வரும், பரதனின் தாய் மாமாவுமான அவர் தசரதரைப் பார்த்து, அவரிடம் நலம் விசாரிக்கும் விதமாக இவ்வாறு கூறினார்:

 

केकयाधिपती राजा स्नेहात् कुशलमब्रवीत् ।
येषां कुशलकामोऽसि तेषां सम्प्रत्यनामयम् ।।1.73.3।।

எனது தந்தையாரான கேகய மன்னர் அன்புடன் உங்கள் நலனை விசாரிக்கிறார். தாங்கள் யாருடைய நலத்தை அறிய விரும்புகிறீர்களோ, அவர்கள் அனைவரும் நலமாக உள்ளார்கள்.

 

स्वस्रीयं मम राजेन्द्र द्रष्टुकामो महीपति:।
तदर्थमुपयातोऽहमयोध्यां रघुनन्दन।।1.73.4।।

ரகு நந்தனரே! எனது தந்தையாரான கேகய மன்னர், என்னுடைய சகோதரியின் மகனைக் (பரதனை) காண விரும்பினார். அதன் பொருட்டு, நான் அயோத்திக்குச் சென்றிருந்தேன்.

 

श्रुत्वा त्वहमयोध्यायां विवाहार्थं तवात्मजान् ।
मिथिलामुपयातांस्तु त्वया सह महीपते।।1.73.5।।

त्वरयाभ्युपयातोऽहं द्रष्टुकाम स्स्वसुस्सुतम्।

அரசே! தாங்கள் தங்கள் புதல்வர்களுடன், அவர்களுடைய திருமணத்திற்காக மிதிலை வந்திருப்பதைக் கேள்விப்பட்டு, என் சகோதரியின் மகனைக் காண்பதற்காக, விரைந்து வந்திருக்கிறேன்.

 

अथ राजा दशरथ: प्रियातिथिमुपस्थितम्।।1.73.6।।

दृष्ट्वा परमसत्कारै: पूजार्हं समपूजयत्।

தசரத மன்னர், அன்புக்குரிய அந்த விருந்தினருக்குத் தகுந்த மரியாதைகளைச் செய்தார்.

 

ततस्तामुषितो रात्रिं सह पुत्रैर्महात्मभि:।।1.73.7।।

प्रभाते पुनरुत्थाय कृत्वा कर्माणि कर्मवित् ।
ऋषींस्तदा पुरस्कृत्य यज्ञवाटमुपागमत्।।1.73.8।।

தன் கடமைகளை நன்கு உணர்ந்த தசரத மன்னர் அந்த இரவைத் தனது நற்குணங்கள் பொருந்திய புதல்வர்களுடன் கழித்து விட்டு, விடிந்தவுடன், தனது நித்திய கர்மாக்களை முடித்து விட்டு, முனிவர்கள் முன்னே செல்லத் தானும், யாகசாலைக்கு வந்து சேர்ந்தார்.

 

युक्ते मुहूर्ते विजये सर्वाभरणभूषितै:।
भ्रातृभिस्सहितो राम: कृतकौतुकमंगल:।।1.73.9।।

वसिष्ठं पुरत: कृत्वा महर्षीनपरानपि।
पितु स्समीपमाश्रित्य तस्थौ भ्रातृभिरावृत:।।1.73.10।।

அப்போது செய்யத் தக்க மங்கள காரியங்களும், பிற ஏற்பாடுகளும் முடிந்த பின்னர், பலவிதமான ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்த ராமன், மிகவும் மங்களகரமான முகூர்த்தத்தில், வசிஷ்டரும், பிற மகரிஷிகளும் முன்னே செல்லத் தனது தம்பியருடன்,  தன் தந்தையாரின் முன், சென்று நின்றான்.

 

वसिष्ठो भगवानेत्य वैदेहमिदमब्रवीत्।
राजा दशरथो राजन् कृतकौतुकमङ्गलै:।।1.73.11।।

पुत्रैर्नरवर श्रेष्ठ दातारमभिकाङ्क्षते।

பூஜைக்குரிய வசிஷ்டர் ஜனகரிடம் சென்று, “விதேஹ மன்னரே! தசரத மன்னர், தனது புதல்வர்களுடன், அனைத்து மங்கள காரியங்களையும், செய்து முடித்து விட்டுத் தனது புதல்வர்களுக்கு மணமகள்களைக் கொடுப்பவருக்காகக் காத்திருக்கிறார்.

 

दातृप्रतिग्रहीतृभ्यां सर्वार्था: प्रभवन्ति हि।।1.73.12।।

स्वधर्मं प्रतिपद्यस्व कृत्वा वैवाह्यमुत्तमम्।

பெண்ணைக் கொடுப்பவரும், பெண்ணைப் பெற்றுக்கொள்பவரும் ஆகிய இருவருமே, இதனால் பயனடைகிறார்கள். இந்த மங்களகரமான திருமணத்தை நடத்தித் தங்களது கடமையை நிறைவேற்றுங்கள்.”

 

इत्युक्त: परमोदारो वसिष्ठेन महात्मना।।1.73.13।।

प्रत्युवाच महातेजा वाक्यं परमधर्मवित्।

இவ்வாறு மகானான வசிஷ்டர் கூறவும், மகாதேஜஸ் உடையவரும், தர்மங்களை அறிந்தவருமான ஜனகமன்னர் பதில் கூறினார்:

 

कस्स्थित: प्रतिहारो मे कस्याज्ञा सम्प्रतीक्ष्यते।।1.73.14।।

स्वगृहे को विचारोऽस्ति यथा राज्यमिदं तव।

“தாங்கள் இன்னும் யாருடைய கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? வாயில் காப்போர் யாராவது தங்களைத் தடுத்தார்களா? இதுவும் உங்களுடைய ராஜ்ஜியத்தைப் போல் தான்.

 

कृतकौतुकसर्वस्वा वेदिमूलमुपागता:।।1.73.15।।

मम कन्या मुनिश्रेष्ठ दीप्ता वह्नेरिवार्चिष:।

முனிஸ்ரேஷ்டரே! என்னுடைய புதல்விகள் அனைவரும், திருமணம் சம்பந்தமாகச் செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் செய்து முடித்து விட்டுத் திருமண மேடைக்கு வந்திருக்கிறார்கள்.

 

सज्जोऽहं त्वत्प्रतीक्षोऽस्मि वेद्यामस्यां प्रतिष्ठित:।।1.73.16।।

अविघ्नं कुरुतां राजा किमर्थमवलम्बते।

திருமண மேடையில் நான் தயாராகத் தங்களுக்காகக் காத்திருக்கிறேன். அரசே! எந்த விக்கினமும் இன்றித் திருமணத்தை நடத்துங்கள். எதற்காகத் தாமதம் செய்யவேண்டும்?

तद्वाक्यं जनकेनोक्तं श्रुत्वा दशरथस्तदा।
प्रवेशयामास सुतान् सर्वानृषिगणानपि।।1.73.17।।

ஜனகர் இவ்வாறு கூறியவுடன், தசரதர் தனது புதல்வர்களையும், ரிஷிகளையும், திருமண மண்டபத்துக்கு வரச்சொன்னார்.

 

ततो राजा विदेहानां वसिष्ठमिदमब्रवीत्।।1.73.18।।

कारयस्व ऋषे सर्वमृषिभि: सह धार्मिक।

रामस्य लोकरामस्य क्रियां वैवाहिकीं विभो।।1.73.19।।

அதன் பின்னர் விதேஹ மன்னர் வசிஷ்டமுனிவரிடம் இவ்வாறு கூறினார்: “ பரம தார்மிகரான ரிஷியே! மற்ற ரிஷிகளுடன் சேர்ந்து, இந்த உலகை மகிழ்விக்கக்கூடிய ராமனுடைய திருமணச் சடங்குகளைச் செய்வியுங்கள்.

 

तथेत्युक्त्वा तु जनकं वसिष्ठो भगवानृषि:।
विश्वामित्रं पुरस्कृत्य शतानन्दं च धार्मिकम्।।1.73.20।।

प्रपामध्ये तु विधिवत्वेदिं कृत्वा महातपा: ।
अलञ्चकार तां वेदिं गन्धपुष्पै स्समन्तत: ।।1.73.21।।

सुवर्णपालिकाभिश्च छिद्रकुम्भैश्च साङ्कुरै:।
अङ्कुराढ्यैश्शरावैश्च धूपपात्रै स्सधूपकै:।।1.73.22।।

शङ्खपात्रै स्स्रुवै स्स्रुग्भि: पात्रैरर्घ्याभिपूरितै:।

लाजपूर्णैश्च पात्रीभिरक्षतैरभिसंस्कृतै:।।1.73.23।।

மரியாதைக்குரிய மகரிஷி வசிஷ்டர், ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறி, விஸ்வாமித்திரர், சதானந்தர் ஆகியோரை முன்னிலைப் படுத்தி, அந்த மண்டபத்துக்கு நடுவே ஒரு வேதியை அமைத்து, அதை நான்கு புறங்களிலும், மணம் மிகுந்த மலர்களாலும், தங்கப் பாலிகைகளாலும், முளைப் பாரிகளாலும் அலங்கரித்து, அதைச் சுற்றிலும், தூபம்  நிறைந்த பாத்திரங்களையும், வேள்விக்குத் தேவையான கரண்டிகளையும், வறுத்த நெல் பொரி, அக்ஷதை ஆகியவை நிரம்பிய பாத்திரங்களையும் வைத்தார்.

 

दर्भैस्समैस्समास्तीर्य विधिवन्मन्त्रपूर्वकम्।
अग्निमादाय वेद्यां तु विधिमन्त्रपुरस्कृतम्।।1.73.24।।

जुहावाग्नौ महातेजा वसिष्ठो भगवानृषि:।

மகா தேஜஸ்வியான வசிஷ்ட முனிவர் , முறைப்படி மந்திரங்களை உச்சரித்து, தர்ப்பைப் புற்களை வேதியைச் சுற்றிலும் பரப்பி, வேதியில் தீ மூட்டி , மந்திரங்களைச் சொல்லி, அந்தத் தீயில் ஹோமம் செய்தார்.

 

ततस्सीतां समानीय सर्वाभरणभूषिताम्।।1.73.25।।

समक्षमग्ने स्संस्थाप्य राघवाभिमुखे तदा।
अब्रवीज्जनको राजा कौसल्यानन्दवर्धनम्।।1.73.26।।

அதன் பின்னர், அக்கினியின் முன்னிலையில், கௌசல்யையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனான ராமனுக்கு எதிரில், சர்வாபரண பூஷிதையான சீதையை நிறுத்தி,

 

इयं सीता मम सुता सहधर्मचरी तव।
प्रतीच्छ चैनां भद्रं ते पाणिं गृह्णीष्व पाणिना।।1.73.27।।

ஜனகமன்னர், “என்னுடைய மகளான இந்தசீதை, உன்னுடைய தர்மத்துக்குத் துணையாக இருப்பாள். இவளை ஏற்றுக்கொள். உனக்கு நன்மை உண்டாகட்டும், உன் கையால் அவளுடைய கையைப் பிடித்துக் கொள்.

पतिव्रता महाभागा छायेवानुगता सदा।
इत्युक्त्वा प्राक्षिपद्राजा मन्त्रपूतं जलं तदा।।1.73.28।।

இவள் பதிவிரதையாக இருந்து, உன்னை எப்போதும் நிழல் போல் பின் தொடர்வாள்” என்று கூறி, மந்திரத்தால் புனிதப் படுத்தப் பட்ட நீரை வார்த்தார்.

 

साधु साध्विति देवाना मृषीणां वदतां तदा ।
देवदुन्दुभिर्निर्घोष: पुष्पवर्षो महानभूत्।।1.73.29।।

அப்போது தேவர்களும், முனிவர்களும், ‘நன்று! நன்று!’ என்று கூற, தேவ துந்துபிகள் முழங்க, மலர் மாரி பொழிந்தது.

 

एवं दत्त्वा तदा सीतां मन्त्रोदकपुरस्कृताम् ।
अब्रवीज्जनको राजा हर्षेणाभिपरिप्लुत:।।1.73.30।।

இவ்வாறு, மந்திரத்தால் புனிதமாக்கப்பட்ட நீரால் சீதையை ராமனுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டுத் தன் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன்  ஜனகர் கூறினார்:

 

लक्ष्मणागच्छ भद्रं ते ऊर्मिलामुद्यतां मया।
प्रतीच्छ पाणिं गृह्णीष्व माभूत्कालस्य पर्यय:।।1.73.31।।

“லக்ஷ்மணா! நீ வந்து தயாராக இருக்கும் ஊர்மிளையை ஏற்றுக்கொண்டு, அவளுடைய கையைப் பிடித்துக்கொள். உனக்கு நன்மை உண்டாகட்டும்!  கால தாமதம் செய்ய வேண்டாம். “

 

तमेवमुक्त्वा जनको भरतं चाभ्यभाषत।
गृहाण पाणिं माण्डव्या: पाणिना रघुनन्दन ।।1.73.32।।

பின்னர் பரதனிடம், “ரகு நந்தனனே! மாண்டவியின் கையைப் பிடித்துக் கொள்” என்று கூறினார்.

 

शत्रुघ्नं चापि धर्मात्मा अब्रवीज्जनकेश्वर:।
श्रुतकीर्त्या महाबाहो पाणिं गृह्णीष्व पाणिना।।1.73.33।।

தர்மவானான ஜனகர் பின்னர் சத்துருக்கினனிடம், “வலிமை பொருந்திய கரங்களை உடையவனே! ஸ்ருத கீர்த்தியின் கையை நீ பிடித்துக்கொள்.”

 

सर्वे भवन्तस्सौम्याश्च सर्वे सुचरितव्रता:।
पत्नीभिस्सन्तु काकुत्स्था माभूत्कालस्य पर्यय:।।1.73.34।।

காகுஸ்தர்களே! (ராம, லக்ஷ்மண, பரத, சத்துருக்கினர்கள்) மென்மையான இயல்பும், நன்னடத்தையும் உடைய நீங்கள் அனைவரும், உங்கள் மனைவியருடன், மகிழ்ச்சியாக வாழுங்கள். “

 

जनकस्य वच श्शृत्वा पाणीन् पाणिभिरास्पृशन्।
चत्वारस्ते चतसृ़णां वसिष्ठस्य मते स्थिता:।।1.73.35।।

ஜனகர் இவ்வாறு கூறியதும், வசிஷ்டரின் சம்மதத்துடன், அந்த நான்கு அரச குமாரர்களும், அந்த நான்கு சகோதரிகளின் கரங்களைப் பற்றினார்கள்.

 

अग्निं प्रदक्षिणीकृत्य वेदिं राजानमेव च।
ऋषींश्चैव महात्मानस्सभार्या रघुसत्तमा:।।1.73.36।।

यथोक्तेन तदा चक्रुर्विवाहं विधिपूर्वकम्।

ரகு குலத்தில் பிறந்த அந்தச் சிறந்த அரச குமாரர்கள், தங்கள் மனைவி மார்களுடன், வேதியில் இருந்த புனிதமான நெருப்பை வலம் வந்தார்கள். இவ்வாறு, ஜனகர், வசிஷ்டரின் வழிகாட்டுதலின் பேரில், சாஸ்திரப்படி திருமணத்தை நடத்தினார்.

 

काकुत्स्थैश्च गृहीतेषु ललितेषु च पाणिषु।।1.73.37।।
पुष्पवृष्टिर्महत्यासीदन्तरिक्षात्सुभास्वरा।

ராம லக்ஷ்மண பரத சத்துருக்கினர்கள், முறையே சீதை, ஊர்மிளை, மாண்டவி, ஸ்ருதகீர்த்தி ஆகியோரின் கரங்களைப் பற்றியதும், வானத்திலிருந்து மலர்மாரி பொழிந்தது.

 

दिव्यदुन्दुभिनिर्घोषैर्गीतवादित्रनिस्वनै:।।1.73.38।।

ननृतुश्चाप्सरस्सङ्घा गन्धर्वाश्च जगु: कलम्।

विवाहे रघुमुख्यानां तदद्भुतमदृश्यत।।1.73.39।।

ரகு குலத்தின் முக்கியமான அரச குமாரர்களின் இந்தத் திருமணத்தின் போது, இனிமையான குரலிசைக்கும், வாத்திய இசைக்கும் ஏற்றபடி, அப்சரஸ்கள் நடனமாடினார்கள். தேவ துந்துபிகள் முழங்கின.  கந்தர்வர்கள் இனிமையாகப் பாடினார்கள். அந்தக் காட்சி அற்புதமாக இருந்தது.

 

ईदृशे वर्तमाने तु तूर्योद्घुष्टनिनादिते।
त्रिरग्निं ते परिक्रम्य ऊहुर्भार्यां महौजस:।।1.73.40।।

இந்தக் கொண்டாட்டத்தில், துளைக் கருவிகளின் இனிமையான இசையில் வலிமை மிக்க அந்த அரச குமாரர்கள், அக்கினியை வலம் வந்து, தங்கள் துணைவிகளைத் திருமணம் செய்து கொண்டார்கள்.

 

अथोपकार्यां जग्मुस्ते सभार्या रघुनन्दना:।
राजाऽप्यनुययौ पश्यंत्सर्षिसंघ स्सबान्धव:।।1.73.41।।

பின்னர், அந்த ரகு நந்தனர்கள், தங்கள் மனைவிகளுடன், தாங்கள் தங்கியிருந்த விடுதிகளுக்குச் சென்றார்கள். தசரதமன்னரும், ரிஷிகளுடனும், உறவினர்களுடனும், அவர்களைப் பின் தொடர்ந்தார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे त्रिसप्ततितमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  எழுபத்து மூன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...